Monday, April 19, 2004

சுகமான வார இறுதி

கிரிக்கெட் முடிவு பெறவும், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஆனந்தமாய்க் கழிந்தன.

குழந்தைகளுடன் நான்


சனி காலை சுமார் 10 சிறுவர், சிறுமிகளுக்கு இணையம் பற்றியும், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்களுக்கும் இணையம் வழியாக செய்திகளை/கேளிக்கைகளை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் விளக்கினேன். இது ஒரு கோடைகால விடுமுறைக் குழாம். பங்கு பெற்றவர்களின் வயது 8-12 இருக்கும். மிகவும் சூட்டிகையான சிறுவர்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் வெகு அதிகம்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏன் பள்ளிச்சிறுவர்களுடன் ஊடாடுவதை அதிகம் விரும்புகிறார் என்று இப்பொழுது தெரிகிறது. இதுபோல் இன்னமும் பல சிறுவர்களுடன் தொடர்ச்சியாகப் பேச வேண்டும்.

சனி மாலை Something's Gotta Give படம் பார்த்தேன். நல்ல சுவாரசியமான படம். பிறகு எழுதுகிறேன்.

ஞாயிறு காலை தமிழ்நாடு சிறுமுதலீட்டாளர்கள் சங்கக் கூட்டம்.

மாலை மியூசிக் அகாடெமியில் CRY பணம் சேர்ப்பதற்காக நடத்திய பால் தால் என்றொரு இசைக் கச்சேரி. உஸ்தாத் ஸாகிர் ஹுசேன், அவரது சகோதரர் ஃபஸல் குரேஷி இருவரும் தபலா. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ் சகோதரர்கள், செல்வ கணேஷ் கஞ்சிரா, ரஞ்சித் பாரோத் டிரம்ஸ். மிக அருமையாக இருந்தது. டிக்கெட் விலை அதிகம்தான். அதனால்தானோ என்னவோ அரங்கம் முழுமையும் நிரம்பவில்லை. அரங்கை விட்டு வெளியேறுகையில் கச்சேரி இன்னமும் மூன்று மணிநேரங்களுக்குத் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.

சில நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மா.வே.சிவகுமாரின் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுதியினைப் படித்து முடித்தேன். எளிய நடை, உள்ளடங்கிய நகைச்சுவை. நாகூர் ரூமியின் இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் என்னும் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். ரூமியின் புத்தகம் தமிழில் இஸ்லாம் பற்றி வந்துள்ள மிக முக்கியமான ஒரு புத்தகம் என்று தோன்றுகிறது. மிகச் சரளமான நடை. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். [Disclosure: மேற்சொன்ன இரண்டு புத்தகங்களும் 'கிழக்கு பதிப்பகம்' மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் எனக்கு பெரும்பான்மைப் பங்கு உள்ளது. இந்தப் புத்தகங்களைப் பிறர் வாங்குவதன் மூலம் எனக்கு நேரடி லாபம் கிடைக்கும்.]

No comments:

Post a Comment