Sunday, June 06, 2004

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிக்கு இந்த வருடம் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தி ஹிந்துவில் வெளியான செய்தியில் முழு விவரங்கள் இல்லை. ஆனால் நேற்றைய தினமலரில் அதிக விவரங்கள் உள்ளன. இணையத்தில் தினமலர் செய்தியின் சுட்டி கிடைக்கவில்லை. அதனால் தகவல் இங்கே:
இந்தக் கல்லூரியில் நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒரு மாணவரை காப்பியடிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அக்கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. கல்லூரியில் ஓராண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பது என்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட்டில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு தமிழக அரசின் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து புகார் குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இறுதி முடிவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தமிழக அரசுக்கு அனுப்பிய உத்தரவு, தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய உத்தரவு, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் படூரில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மறு உத்தரவு வரும்வரை இந்த ஆண்டு புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment