Tuesday, March 03, 2009

எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை

நமது அடிப்படை உரிமைகளைப் பற்றி மீள்விவாதம் செய்ய இது மிகச் சரியான தருணம். தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது. கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, மீண்டும் வெளியே வந்து, பேசி, மீண்டும் அடைக்கப்பட்டு... இதைப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அதுபோல கறுப்புக்கொடி காட்டப்படுவதை அனுமதிக்காதது; தேசியக்கொடி/அரசியல் அமைப்புச் சட்டம் எரிக்கப்படுவது போன்றவற்றை அனுமதிக்காதது போன்றவையும்.

நாள்கள் கடக்கக் கடக்க, நமது குடியாட்சி முறை வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. இதுபோன்ற கட்டுப்பெட்டித் தனங்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் மக்கள் கலகம் செய்ய முற்படுகிறார்கள். கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.

ஆனால், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்ப சில போராட்டங்களுக்கு அனுமதியும் பல போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தலும் நடக்கின்றன. இதன் விளைவுதான் மக்கள் மேலும் கடுமையான ‘பொதுச் சொத்துகளை நாசமாக்கும்’ கல்லெறிதல், தீவைத்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கல் எறிதல், தீவைத்தல் ஆகியவற்றைச் செய்வதை நான் ஏற்கவில்லை. ஆனால் legitimate protest என்பதற்கான இடத்தைக் குறுக்கக் குறுக்க, illegitimate protest ஏற்படுகிறது. எழுத அனுமதியில்லை, பேச அனுமதியில்லை, தான் கொண்டுவந்த பொருளை எரிக்க அனுமதியில்லை எனும்போது, வெறி தாண்டவாடுகிறது. விளைவுகள் விபரீதமாகின்றன.

சிவில் சமூகம் பரந்துபட்ட அளவில் இந்த விவாதத்தை முன்னெடுக்கவேண்டும். இந்தியா இரண்டாக உடைய நான் விரும்புகிறேன் என்று ஒருவர் சொல்வதனாலேயே அந்த நிமிடத்தில் அவர் தேசத் துரோகி என்று ஆகி, ஜெயிலுக்குத் தள்ளப்படுவார் என்றால், என்ன கொடுமை இது? மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?

நம் பிரதிநிதியான நம் அரசாங்கம் நாம் நினைத்தமாதிரிச் செயல்படவில்லையே என்ற ஆதங்கம் கொளத்தூர் மணிக்கும் சீமானுக்கும் ஏற்பட்டு அதனால் அவர்கள் வெகுண்டு, முன்னாள் அரசியல் தலைவர்களையும் இன்னாள் அரசாங்கத்தையும் வைதால், சபித்தால், என்ன பெரிதாகக் கெட்டுப்போய்விட்டது? அதற்குச் சிறையா?

எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.

காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.

20 comments:

  1. உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்தான். அதே சமயத்தில் கடமைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் இல்லையா?
    சொல்லுவது வேறு வைவது வேறு. இந்த வேறுபாடு தெரியாத சீமானும் மணியும் வாய்க்குவந்ததையெல்லாம் வாந்தி எடுத்ததால்தான் வந்தது நடவடிக்கை. முடிவே இல்லாத விவாதக்களம் தான் உரிமையும் கடமையும். வினை விதைப்பதற்கும் தினை விதைப்பதற்கும் உரிமை உண்டுதான். விளைவும் அப்படிதான் இருக்கும் என்பது இயற்கை நியதி. பின் முறையீடு எதற்கு?

    ReplyDelete
  2. //காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம்.//

    Well said bro. If people get agitated, eventually they will end up taking arms (or at least stones or lit fire).

    ReplyDelete
  3. சரியான கருத்துக்கள். உருவபொம்மை/படம் எரிப்பு, கொடி/ஆவண எரிப்பு போன்றவையை தடை செய்வது சரியில்லை என்றே நினைக்கிறேன். People (including me in past) have a more conservative opinion on this partly due to a sentimentality and partly due to an insecurity about the Indian union. But, as you point out, allowing such expressions of dissent is the right thing to do.

    ReplyDelete
  4. இது இந்தியாவெங்கும் உள்ள பிரச்சினை.கொல்கத்தாவில் ஸ்டேஸ்மென் ஆசிரியரும், பதிப்பாளரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீள்பிரசுரம் செய்த கட்டுரை முஸ்லீம்கள் மனதைப் புண்படுத்திவிட்டதாம். தமிழ்நாட்டில் கருணாநிதி இந்த கைதுகள் மூலம் ஜெயலலிதாவிற்ககு நல்ல பெயர்
    கிடைக்க பாடுபட்டு வருகிறார் :).
    சீமானும்,மணியும் எதையாவது
    உளறிக் கொண்டேதான் இருப்பார்கள்.
    அதற்காக அவர்களை கைது செய்தால் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது.

    ReplyDelete
  5. தேசியக்கொடியையும் இந்தப் பட்டியலில் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை பிற்போக்கானவன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இப்படியே போனால் எதற்குமே மரியாதை தேவையில்லை என்றாகிவிடும். அரசியல் அமைப்புச் சட்ட நகலை எரித்துதான் தனது எரிப்பைத் தெரிவிக்க வேண்டுமா? ஏற்கனவே நம்மாளுக உடனடி கலவரத்துக்கு டயர எரிச்சு சுற்றுச்சூழல கெடுத்துக்கிட்டு இருக்காங்க... அவங்களுக்கு புதிய எரிப்புரிமை வேற நீங்க கொடுக்கனுமா?

    ReplyDelete
  6. I'm seconding you. Well written. India has to go a long way.

    ReplyDelete
  7. //தான் கொண்டுவந்த பொருளை எரிக்க அனுமதியில்லை எனும்போது,//

    அப்படி எரிக்க அனுமதித்தால் environment pollute ஆகுமே? :-)

    அதனால, எரிக்கக் கூடாது.

    //உருவ பொம்மையை எரித்தல்//

    இது ஒரு விதமான Black Magic. ஆனா பாருங்க! பகுத்தறிவுவாதிகள் தான் இதை அதிகமா செய்வாங்க. :-)

    ReplyDelete
  8. Superb Article. I wanted to post my comments in tamil. But since I am at office and also I am keen to put forth my comments, I have gone in English. Please don't mind.

    By this kind of a rule, we only encourage people to do more protest than controling them. Just assume the popularity that Mani and Seeman will get out of this imprisonment. You may argue that they deserved that. But taking this as an example, each and every single individual(wabting to become politicians and Politicians) will take this path and ULTIMATELY we are the sufferers.

    All I can say is that India needs a revolution. We the people should take responsibility of how and what we are and we should again take the same responsibility to change this kind of rule.

    WE NEED A CHANGE badly, very badly.

    ReplyDelete
  9. எரிப்புரிமை யா? இப்படி ஒரு உரிமை இருக்கிறதா? வேறெந்த நாடுகளில் இது இருக்கிறது.

    environmental pollution என்ற கோணத்தை விடுங்கள். இவர்கள் செயவதால் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டு அதில் தனியார் சொத்துக்களோ அல்லது பொதுச் சொத்துக்களோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது.

    இப்பொழுதே பஸ்களைக் கொளுத்துகிறார்கள்.. நீங்கள் இதில் “எரிப்புரிமை” யென்று புதிதாக நீங்கள் கிளப்ப்பிவிட்டால் அப்புறம் எதை வேண்டுமானாலும் கொளுத்துவார்கள்

    சீமாச்சு

    ReplyDelete
  10. சீமாச்சு: எரிப்புரிமை? ஏன் இல்லை. நீங்கள் அமெரிக்காவில்தானே இருக்கிறீர்கள்? உங்கள் ஊரில் உங்கள் தேசியக் கொடியை எரிக்கலாம் என்பதைத் தெரிந்துவைத்துள்ளீரா?

    From Wikipedia:

    On June 22, 2005, a flag burning amendment was passed by the House with the needed two-thirds majority. On June 27, 2006, the most recent attempt to pass a ban on flag burning was rejected by the Senate in a close vote of 66 in favor, 34 opposed, one vote short of the two-thirds majority needed to send the amendment to be voted on by the states.

    நான் என்ன எழுதினேன் என்று படித்தீர்களா? பொதுச்சொத்துகளைக் கொளுத்துவதை நான் என்றுமே ஆதரித்ததில்லை. பஸ்களைக் கொளுத்துவதை ஆதரிக்கமாட்டேன். அதை இந்துத்துவவாதிகள் செய்தாலும் சரி, புரட்சியாளர்கள் செய்தாலும் சரி.

    தான் கையோடு கொண்டுவந்த கொடியை, உருவ பொம்மையை, அரசியல் அமைப்புச் சட்ட நகலை எரிப்பதற்கு எந்தத் த்டையும் இருக்கக்கூடாது என்றுதான் சொன்னேன். அடுத்து, அதற்கென ஓர் இடத்தை ஒதுக்கி, யாருக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் எரிக்க அனுமதிக்கவேண்டும் என்று சொன்னேன்.

    புதிதான கருத்துகள் வரும்போது, சற்றே தலையில் அடைபட்டுக் கிடக்கும் பழமைக் கருத்துகளைத் தள்ளி வைத்துவிட்டு யோசியுங்கள். ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் நிராகரிக்கலாம். ஆனால் நான் என்ன சொன்னேன் என்பதைத் திரிக்கவேண்டிய அவசியம் இல்லை. நான் என்ன சொன்னேன் என்பது தெளிவாக மேலே உள்ளது.

    ReplyDelete
  11. பத்ரி சார்,

    சற்று கோபமாக நீங்கள் எழுதியிருந்தாலும் கட்டாயம் வெளிபடுத்தபட வேண்டிய கருத்து இது. நாம் முற்போக்கான சமூகமாக/சிவில் சமூகமாக மாற முற்பட தொடங்க வேண்டுமே தவிர பொய்யான வல்லரசு கனவினுள் மூழ்குவதிலே பிரச்சனை தொடங்குகிறது. எதிர்ப்பை காட்ட கட்டாயம் வெளி இருக்க வேண்டும். அதை குறுக்குவதால் அந்த போராட்டம் எதிர்பாரா வளர்ச்சியினை பெறுகிறது என்பதையே வரலாறு உணர்த்துகிறது. அடுத்தது எதிர்ப்பிற்கு மரியாதை கொடுக்கபட வேண்டும். எதிர்ப்பது ஓர் ஆளாய் (ஆணோ/பெண்ணோ) இருந்தாலும் அவனது/அவளது எதிர்ப்பின் பொருள் விவாதிக்கபட வேண்டும்.

    இன்றைய கெட்டு போன அரசியல் கட்டமைப்பில் இது சாத்தியமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் பயப்பபடுகிறார்கள் என்பதே அவர்கள் மற்றவர்களின் உரிமைகளை நெரிக்க முற்படும் விஷயத்தில் தெரிந்து விடுகிறது.

    ReplyDelete
  12. அன்புள்ள பத்ரி, அமெரிக்காவில் இன்று தேசியக் கொடியை எரிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இந்த அமெரிக்கா இன்றைக்கு இந்த நிலைக்கு வருவதற்கு முன்னால் எத்தகைய உரிமைகள் இருந்தன? எத்தகைய நிலைகளை கடந்து இங்கே வந்தார்கள்? அமெரிக்காவில் பிரிவினை வாதம் எழுந்தபோது ஆபிரகாம் லிங்கன் மானுட உரிமைகளின் அடிப்படை என்றே கருதப்பட்ட ஹேபியஸ் கார்பஸையே ஸஸ்பெண்ட் செய்ததும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தையே லிங்கனும் அமெரிக்க இராணுவமும் இணைந்து அலட்சியப்படுத்தியதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா? பாரதம் பல துண்டுகளாக சிதறுவதில் பல சர்வதேச சக்திகளுக்கு ஆர்வம் இருக்கிறது. இன்றைய சூழலில் அமெரிக்கா போன்ற நூற்றாண்டுகளாக தனது தேசியத்தை வலுவாக கட்டிக்காத்து எழுப்பிவிட்டு இன்றைக்கு கேபிடால் ஹில்லின் முன் சில சிதறு தேங்காய்கள் தன்கொடியை எரிக்க அலங்கார வாய்ப்பளிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா தன் விஷயத்தில் பிரதி எடுக்க முடியாது. இனி சீமானோ கொளத்தூர் மணியோ ஆதங்கத்தில் பேசவில்லை, அவர்களுக்கு இலங்கை பிரச்சனை தனித்தமிழ் பிரிவினைவாதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். தனி தமிழ்நாட்டு கோரிக்கை எனும் இனப்படுகொலைகளை இந்த மண்ணில் நிறைவேற்றும் ஒரு கருத்தியலின் மீது நின்றுதான் பேசுகிறார்கள் இவர்கள். குழந்தை போராளிகளை மூளைச்சலவை செய்து தன் அதிகார வெறிக்காக போராட செய்யும் ஒருவன் இன்று ஏதோ தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் என்கிறார். தேச துரோகம் அல்ல அடிப்படை மானுடத்தன்மையேயற்ற ஒரு மறைகழண்ட கேஸாக மனநல மருத்துவ நோயகங்களில் அடைக்கப்படவேண்டிய வெறுப்பியல் மனநோயாளி அவர். ஹிட்லரை நினைவூட்டுவம்படியான அளவுகடந்த பார்ப்பன வெறுப்பு இந்திய வெறுப்பு....எப்படி யூத வெறுப்பு பேச்சாளிகள் கட்டுப்படுத்தப் படுகிறார்களோ அதே போல இவர்களும் கட்டுப்படுத்தப் படவேண்டும். சிங்கள பேரினவாதிகள், தமிழ் பாசிச கும்பல்களுக்கு இடையே இறக்கும் அப்பாவி தமிழர்களை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது. அதே நேரத்தில் இந்த மானுட சோகத்தையும் இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்ட பயன்படுத்தும் கீழ்த்தரங்களை நினைத்தால் ஆத்திரம்தான் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  13. அன்புள்ள பத்ரி,
    மனு ஸ்மிருதியை எரிப்பது என்கிற ஒரு சடங்கு முன்பு நடத்தப்பட்டது. இப்போதும் அவ்வப்போது நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிவியக்க கேந்திரத்திலிருந்து செயல்படும் தலைவரான ரமேஷ் பதங்கே ஒரு முறை மனு ஸ்மிருதியை எரிக்க வேண்டும் என கூறிய சோஷலிஸ தலைவரிடம் வாருங்கள் நாம் இணைந்து போய் மனு ஸ்மிருதியை எரிக்கலாம் என கூறினார். ஒரு மதநூல் இந்த நாட்டின் அரசியல் நிர்ணய சட்டம் அல்ல. அதனை எரிக்க பல விக்கிர வழிபாட்டாளர்களுக்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். அதனை எரித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதற்காக இந்த அரசு அதை தடை செய்யும். குரானை எரித்ததால் இஸ்லாமியர்கள் வெகுண்டெழுவது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வீர்கள்...நிச்சயம் சொல்வீர்கள் அல்லவா? எந்த மதநூலையும் எரியூட்ட உரிமை மறுக்கப்படுவது காட்டுமிராண்டித்தனம்தான் அல்லவா? ஒரு அரசு ஒரு மதநூலை எரியூட்டுவதை தடை செய்தால் அது காட்டுமிராண்டித்தனம்தான் இல்லையா? ஒரு குறிப்பிட்ட மதநூலை எரிப்பதை மட்டும் ஒரு அரசு தடை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிற இறையியலும் நிச்சயம் காட்டுமிராண்டித்தனமானதுதான் இல்லையா?

    ReplyDelete
  14. Dear Badri,

    I beg to disagree with you.

    The question is not whether India is not allowing dissent to be voiced here.

    In this case, what is at stake here - LTTE is banned in India. It is unlawful and illegal to speak anything that supports that organization.

    Let us digress a bit. If some outfit in India gives fiery speeches in favor of LeT (Lashkar e Tayyiba - a banned org in India) - will you still argue the same privileges that you are arguing for Seemans and Kolathur Manis be given to them as well?

    It is one thing to contend the ban for the org in courts and it is another to openly campaign for it. This will only incite violence.

    I hope you agree, If not, please do reply.

    Thanks

    Venkataraghavan R

    ReplyDelete
  15. You have written lot of posts regarding Gandhi. What do you think about the recent auctioning of Gandhi's items. I feel it should not have been done and made a huge money out of this. When time permits, do post on this topic.

    ReplyDelete
  16. I am a muslim, and i have a cheap copy of Kuran. I want to burn it in public to vent my anger against Taliban. Do i have the right to do so ?

    ReplyDelete
  17. //I am a muslim, and i have a cheap copy of Kuran. I want to burn it in public to vent my anger against Taliban. Do i have the right to do so ?//
    Do you have a right to sign your own death warrant? :)

    ReplyDelete
  18. எல்லாவித மத நூல்களையும் - குரான், பைபிள், இந்து நூல்கள் அனைத்தையும்கூடத்தான் - எரிப்பதற்கு நாத்திகர்களுக்கு அல்லது அந்தக் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கேகூட அல்லது பிற மதத்தினருக்கு உரிமை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இதில் பெரும்பான்மை, சிறுபான்மை பாரபட்சம் ஏதும் இருக்கக்கூடாது.

    ReplyDelete
  19. //In this case, what is at stake here - LTTE is banned in India. It is unlawful and illegal to speak anything that supports that organization.
    //
    Please read the Suba.Vee's interview in tamilveli.com
    http://interviews.tamilveli.com/2008/11/subavee-tamilvelicom-2.html

    8. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா? அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா?

    அதாவது தடை செய்யப்பட்ட இயக்கங்களை வாய்மொழியாக ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றமே ஒருமுறைக்கு இருமுறை சொல்லிவிட்டது, அதிலும் குறிப்பாக எங்களினுடைய பொடா பிணை வழக்கில் நான் அதை தேதியோடு குறிப்பிட வேண்டுமென்று சொன்னால் 2003 வது ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இந்தியாவினுடைய உச்ச நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள், நீதிபதி இராஜேந்திரபாபு தலைமையில் எங்களுக்கு பிணை அளித்த போது வாய்மொழி ஆதரவு பொடா சட்டத்தின் கீழ் கூட குற்றமாகாது என்று அறிவித்திருக்கிறார்கள், மறுபடியும் மறுபடியும் நாம் ஆதரித்து பேசுவது குற்றம் என்று சொல்லுவது, ஒரு விதத்திலே நீதிமன்ற அவமதிப்பு என்று நான் கருதுகிறேன்.

    இரண்டாவதாக தடையென்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் தான் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம், தடை என்பது எந்த இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அந்த இயக்கம் இந்த மண்ணில் செயல்படக்கூடாது என்பதற்கான தடை, இரண்டாவது அந்த இயக்கத்திற்கு நிதி உதவியோ ஆயுத உதவியோ வழங்குவதற்கு மற்றவர்களுக்கு தடை என்பது தான் அதனுடைய சாராம்சமான செய்தியே தவிர ஒரு இயக்கத்தை பற்றி பேசுவது, அது பற்றி கருத்து வெளியிடுவது அதை கூட பயங்கரவாதம் என்று சொல்லுவதும், அதை தடை செய்ய வேண்டுமென்று சொல்லுவதும் அடிப்படை சனநாயக உரிமைகளையே மறுப்பதாக ஆகும், மேலும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்தையும் அதனுடைய தடையை விலக்க வேண்டுமென்று கோருவதும் ஒரு சனநாயக கோரிக்கை, அது எந்த விதத்திலும் பயங்கரவாதம் ஆகாது, தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையே பயங்கரவாதமென்று சொல்லுகிறவர்கள், உண்மையில் ரொம்பவும் பயந்து போயிருக்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது, ஆகவே சட்டத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் பேசமாட்டார்கள் பேசக்கூடாது, இன்னும் சரியாய் சொன்னால் இதனை ஆதரித்து பேசுபவர்களை கைது செய் என்று சொன்னால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது என்னுடைய கோரிக்கை.

    ReplyDelete