Thursday, October 29, 2009

பபாஸி தேர்தல் முடிவுகள்

நேற்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும், அடுத்த இரு ஆண்டுகளுக்கான அலுவலர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.

தேர்தலில் செயற்குழு உறுப்பினர் (தமிழ்) பதவிக்காக நின்று நான் தோற்றுப்போனேன். மொத்த உறுப்பினர்கள் 383. வாக்களிக்க வந்தவர்கள் 316. வாக்குச்சீட்டுகளை வாங்கி வாக்களித்தவர்கள் 307. எனக்குக் கிடைத்த வாக்குகள் 91. (என்னைத் தவிர 90 பேர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்!)

கடந்த முறை செயலராக இருந்த ஆர்.எஸ்.சண்முகம் உருவாக்கிய அணி, இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை தலைவராக இருந்த காந்தி கண்ணதாசன் ஆதரித்த அணி முற்றிலுமாகத் தோற்றுள்ளது. சுயேச்சையாக நின்ற மூன்று பேர் (என்னையும் சேர்த்து) தோல்வியுற்றோம் என்பது தெளிவு.

ஜெயித்தவர்கள் விவரம் வருமாறு:

தலைவர்: சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம்)
துணைத்தலைவர் (தமிழ்): சண்முகம் (செண்பகா)
துணைத்தலைவர் (ஆங்கிலம்): சுப்பிரமணியன் (டைகர் புக்ஸ்)
செயலர்: இராம.லட்சுமணன் (உமா பதிப்பகம்)
இணைச்செயலர்: சண்முகநாதன் (என்.சி.பி.எச்)
பொருளாளர்: ஷாஜஹான் (யுனிவெர்சல்)

செயற்குழு (தமிழ்): வைரவன், நாகராஜன், முருகன், வெங்கடாசலம்
செயற்குழு (ஆங்கிலம்): அஷோக்குமார், சிவராமன், ஜெயக்குமார், டி.எஸ்.சீனிவாசன்

நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் (தமிழ்): சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன்

***

தேர்தல் நடைபெற்றதே தவிர, சென்ற ஆண்டு கணக்கறிக்கை, ஆண்டறிக்கை ஆகியவற்றில் பல குளறுபடிகள், எண்கள் தவறாக அச்சானது, தலைவர், செயலர் அறிக்கைகளில் பல இடங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லாதது ஆகிய காரணங்களால் அவை எவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மாறாக, சென்ற இரு ஆண்டுகளில் இருந்த அலுவலர்களே, அவற்றை அடுத்த மாதத்துக்குள் சரி செய்து மீண்டும் பொதுக்குழுவில் வைக்குமாறு பணிக்கப்பட்டனர். அப்போதுதான் பொதுக்குழு அவற்றை அங்கீகரிக்கும்.

ஆண்டிறுதி அறிக்கைப் புத்தகம் உண்மையில் படு மோசமாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று. புத்தகப் பதிப்புத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு சங்கம், இதுபோன்ற ஓர் அறிக்கையைத் தயாரித்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று சிலர் பொதுக்குழுவில் பேசினர். (உண்மைதான்!) அவ்வளவு மெய்ப்புப் பிழைகள், பெயர்களை, நிறுவனங்களை எழுதுவதில் பிழைகள், (இலக்கணப் பிழைகளை விட்டுவிடலாம்), பாதி விஷயங்கள் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல், எண்கள் பலவற்றிலும் மெய்ப்புப் பிழைகள் என்று இருந்தன. அடுத்த மாதத்துக்குள் இவை அனைத்தும் களையப்பட்டு, சரியான, நேர்த்தியான அறிக்கை உறுப்பினர்கள் கைகளுக்குக் கிடைத்தால், அது மாபெரும் அதிசயமே.

பார்ப்போம்.

(இனி வரும் நாள்களில் பபாஸி அமைப்பு பற்றியும், அதில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றியும் எழுத உள்ளேன்.)

11 comments:

  1. 91 வாக்குகள் பெற்றது தோல்வி அல்ல. உண்மையில் இதுவே வெற்றி. அணி அது இது என்று கூத்தடிக்கும் ஓரிடத்தில், எந்த அணியையும் சேராமல், 91 வாக்குகள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. கிட்டத்தட்ட 91 பேர், பபாஸியின் அணிப் போக்கை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவு.

    பபாஸியில் செய்யப்படவேண்டிய மாற்றங்களை தொடர்ந்து நிச்சயம் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. 91 வாக்குகள் அடுத்தடுத்து பெற இருக்கும் வெற்றிக்கான முதல்நிலை. வாழ்த்துக்கள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  3. இந்த வருட (2010 Jan) சென்னை புத்தகக் கண்காட்சி தேதிகள் முடிவாகிவிட்டதா?

    பொங்கல் சமயத்தில் வருமே?

    ReplyDelete
  4. I think 91 votes is impressive! What I don't understand is how you managed to not win a seat in the working committee (!) which apparently had 4 seats up for election?

    I am glad to see your commitment to work from within the system, and what you plan to write about the changes you'd like to see will probably define your manifesto for your future runs. I wait eagerly.

    -yetanothervenkat

    ReplyDelete
  5. செட்டியார் / வேளாளர் அல்லாதவரான நீங்கள் இத்தனை வோட்டுகள் பெற்றிருப்பதே பெரிய விஷயம்தான். இப்போதிலிருந்தே முயன்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம்.

    ReplyDelete
  6. காந்திகண்ணதாசன் நின்றால் தோற்க வேண்டும். நிற்காவிட்டால் அவரது பெயரே நிர்வாகக் குழுவில் ஒலிக்கக் கூடாது என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட அரசியல் முடிவு என்கிறார்களே..?

    பத்ரி ஸார்.. கொஞ்சம் விசாரிச்சு டிப்ஸ் கொடுங்க. இட்லிவடைல எழுதணும்..!

    ReplyDelete
  7. ஒரு தொலைநோக்கோ உலக பதிப்பக நடப்போ அறியாத, அறியும் ஆவலும் இல்லாத தமிழ்ப் பதிப்புலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் கனவோ ஆசையோ அறவே இல்லாத அதே பழைய உப்புமாக் கூட்டம்தானா மீண்டும் நாட்டாமை???? வெளங்கிடும் ....

    ReplyDelete
  8. இதுக்குதான் தேர்தலுக்கு முன்னாடியே கேட்டேன். உதவி வேண்டுமா என்று!! :-)

    ReplyDelete
  9. 91 ஓட்டுகள் பெரிய விசயம். வாழ்த்துகள்! அடுத்தமுறை நல்ல நண்பர்களுடன் ஒரு அணியாக நீங்கள் செயல் படுவது நலம்!

    நீங்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியும் என்று திட்டம் வைத்து இருந்தால், அதனை வெற்றி பெற்ற நபர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும், இது அடுத்த முறை வெற்றி பெற மிக மிக உதவியாக இருக்கும்!

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  10. //யுவகிருஷ்ணா said...
    இதுக்குதான் தேர்தலுக்கு முன்னாடியே கேட்டேன். உதவி வேண்டுமா என்று!! :-)//

    :-)

    ReplyDelete