Wednesday, January 05, 2011

கதம்பம் - 5

ஒரு நாள் ரீடிஃப்.காம் இணையத்தளத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண்ணைப் பற்றிய கதை இருந்தது. அவர் எப்படி, குடும்ப வன்முறையில் சிக்கி, பின் கணவரைப் பிரிந்து, இருக்கும் கொஞ்சம் காசைக் கொண்டு கடற்கரையில் பஜ்ஜி போட்டு விற்று, பின் படிப்படியாக முன்னேறி உணவகத்தை நடத்தி வருகிறார் என்று அதில் விளக்கியிருந்தார்கள். அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றது கட்டுரை. உடனே பா. ராகவனைத் தொடர்புகொண்டேன். இந்தப் பெண்மணியைத் தொடர்புகொண்டு இந்தக் கதையைப் புத்தகமாகக் கொண்டுவரமுடியுமா என்று கேட்டேன்.

அடுத்த இரண்டே நாள்களுக்குள் பேட்ரீஷியா நாராயணைத் தேடிப் பிடித்துப் பேசியாகிவிட்டது. ராம்கிதான் அவருடன் பேசி, புத்தகத்தை எழுத்து வடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் என்பது முடிவாகியது. அதன்பின் நடந்தது எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் ஒரு மாதத்துக்குள் ஒருவிதமாக அடிப்படை மேனுஸ்க்ரிப்ட் தயாராகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கரு உதித்த நேரத்திலிருந்து அதை இவ்வளவு சீக்கிரம் செயல்படுத்திவிட முடியும் என்பதே மனநிறைவைத் தந்தது.

பொதுவாக வெற்றிக்கதைகள் எழுதும்போது ஆதார விஷயங்கள் பல வெளியில் வரா. இப்பிடித்தாங்க கஷ்டப்பட்டேன், அப்புறம் இப்படி வெற்றி அடைஞ்சிட்டேன் என்று பொதுவாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் வளரும் தலைமுறையினருக்கு எந்தப் பயனும் இல்லை. ஈரோட்டில் இப்படிப்பட்ட வெற்றியாளர் ஒருவரைச் சந்தித்தேன். மிகச் சாதாரணப் பின்னணியில் இருந்து நல்ல உயரத்தை அடைந்துள்ள் கோடிசுவரர். அவரது கதையை எழுதுவதுபற்றிப் பேசியபோது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஜகா வாங்கிவிட்டார். இன்னும் பலரை அணுகவே முடிவதில்லை. அதனால்தான் திரும்பத் திரும்ப பில் கேட்ஸ், வாரன் பஃபட் என்று அமெரிக்கர்களைப் பற்றி எழுதவேண்டியிருக்கிறது. லயன் டேட்ஸ், கோல்ட்வின்னர் சன் ஃப்ளவர் ஆயில், கே.பி.என் டிரான்ஸ்போர்ட் போன்றோர்தான் நமக்கு உத்வேகம் ஊட்டவேண்டியவர்களாக இருக்கவேண்டும். அவர்களைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை என்பது சோகம்.

பேட்ரீஷியாவின் கதை பிரமாதமான கதை. அதில் சாதனைகள் உண்டு. பல சோகங்களும் உண்டு. ஆனால் சோகங்களையும் மீறி அவர் சாதனைகள் தொடர்கின்றன.

சோம. வள்ளியப்பன் எழுதிய புத்தகம் எதுவுமே இல்லையா என்று கேட்டிருந்தார் ஒரு வாசகர். 2010-ல் அவர் எழுதி நாங்கள் வெளியிட்டது ஒரேயொரு புத்தகமே. ‘தள்ளு’ என்ற மோடிவேஷன் பற்றிய புத்தகம். பல நேரங்களில் நமக்கு வேலையே ஓடுவது இல்லை. ஏன் என்று தெரியாது. சுரத்தே இல்லாமல் உட்கார்ந்திருப்போம். ஆனால் சில நாள்களில் வேலை படு சுறுசுறுப்பாகச் செல்லும். சில அலுவலகங்களில் மேனேஜராக இருப்பவருக்கு கீழே இருப்பவர்களிடமிருந்து எப்படி வேலை வாங்குவது என்றே தெரியாது. வேறு சிலரோ நைஸாகப் பேசி, தாஜா பண்ணி, ஊக்குவித்து வேலையைச் செய்யவைத்துவிடுவார்கள். இந்த ‘ஊக்கம்’ என்பது என்ன, ‘ஊக்குவிப்பது’ எப்படி? தனியாளாக நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்வது எப்படி?

இதுபோன்ற சில விஷயங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. சுய முன்னேற்றப் புத்தகங்களைப் படித்தால் போதாது. அவற்றின் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களையாவது தீவிரமாக முயற்சி செய்து பார்க்கவேண்டும். அப்போதுதான் பலன்கள் கிடைக்கின்றனவா, இல்லையா என்று தெரியும்.

சென்ற பதிவில் சமையல் சுல்தான் பற்றிச் சொல்லியிருந்தேன். அப்போதே சொல்ல நினைத்து சொல்ல மறந்துபோன பா. ராகவன் புத்தகம் உணவின் வரலாறு. வேத காலத்திலிருந்து ஆரம்பித்து எப்படி பல்வேறு கலாசாரங்களில் உணவைப் பார்த்திருக்கிறார்கள் என்பது பற்றிய தொடர், குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது. இதில் டெர்ரரிஸ்டுகள் குண்டுகளை வெடிக்கமாட்டார்கள். அதிகம் சாப்பிட்டால் உங்கள் தொப்பைதான் வெடிக்கும்!

உணவு பற்றி நினைக்கும்போது நாஞ்சில் நாடனும் நினைவுக்கு வந்துவிடுகிறார். நாஞ்சில் நாடன் பற்றிச் சொல்லும்போது ஜெயமோகன் சொன்னார்... நாஞ்சில் நாடன் வெறுமனே உப்புமா என்று எழுதுவதில்லை; கடுகு, உளுந்து தாளித்துச் செய்த உப்புமா என்றுதான் எழுதுவார். உணவை அவர் ருசியுடன் மட்டும் சேர்த்து எழுதுவதில்லை, சமையல் செய்பவரின் பார்வையிலிருந்தும் எழுதுகிறார்.

பா. ராகவன் உணவின் வரலாறு அத்தியாயம் அத்தியாயமாக எழுதும்போது பத்திரிகைக்கு அனுப்புவதற்குமுன் அவற்றை அலுவலகத்தில் தனிச் சுற்றுக்கு விடுவார். மதிய உணவின்போது அந்த அத்தியாயம் அலசப்படும். உணவு மட்டும்தான் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்றில்லை, உணவு செய்யும் ரெசிப்பியும் உணவு பற்றிய அனைத்துத் தகவல்களும்கூட.

கேபிள் சங்கர் எனப்படும் சங்கர் நாராயணின் சினிமா வியாபாரம் நூல் பற்றி பெரும்பாலானோர் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். அது பகுதி பகுதியாக அவரது வலைப்பதிவில் வந்தது. ஏதோ ஒரு மொட்டைமாடிக் கூட்டத்தின்போது அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதற்கான கரு உருவானது. அதன்பின் சிலமுறை அதன் அவுட்லைன் பற்றி மின்னஞ்சல் பரிமாறிக்கொண்டோம். சங்கர் ஒரு சில அத்தியாயங்களை அனுப்பினார். அதனை நான் பார்க்க நேரம் ஆனது. ஒரு கட்டத்தில் தாமதம் ஆகும் என்று தோன்றியபோது அவரிடம் நான் அனைத்தையும் பகுதி பகுதியாக வலைப்பதிவில் எழுதிவிடுங்கள் என்று சொன்னேன். பின்னர் வலைப்பதிவில் ஏகப்பட்ட வரவேற்பு. பின்னர் அவற்றைத் தொகுத்து அவர் அனுப்பிவைத்தார். எடிட்டிங்கின்போது மேலும் சில தகவல்கள் தேவைப்பட, அவற்றையும் சேர்த்து புத்தகமாக ஆக்கப்பட்டது. என்னைப் பொருத்தமட்டில் இது மிக எளிமையான ஆரம்பம் மட்டுமே. இந்தப் புத்தகத்தையே மேலும் விரிவாக்கவேண்டும். சொல்லாமல் விட்ட பல செய்திகள் உள்ளன. சினிமா உலகின் சூட்சுமங்கள் வெளியில் இருப்பவர்களுக்குத் துளியும் தெரிவதில்லை. உள்ளே இருப்போர்தான் அவற்றை வெளியில் உள்ளோருக்குத் தெரிவிக்கவேண்டும்.

(தொடரும்)

2 comments:

  1. Badri Sir,

    I have already purchased “MOTIVATION” from Soma.Valliappan. One of the best book about Motivation in tamil. Please ask Valliappan Sir to write the books about NLP.

    Bala

    ReplyDelete
  2. கூகுள் குரோம் உலவியில் படித்தால் இந்தப் பதிவில் படங்கள் எழுத்து மேல் ஓவர்லாப் ஆகி இடையூராக இருக்கிறது. கொஞ்சம் கவனிக்கலாமே.

    சரவணன்

    ReplyDelete