Saturday, January 01, 2011

திராவிட இயக்க வரலாறு

திராவிட-ஆரிய வரலாற்றாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்தியாவில் பெரும்பாலும் கேள்வி கேட்கப்படாமல் உருவான இருமைப் புலம் இது. இந்தியாவின் பிற பகுதிகளில் எப்படியோ, தமிழ்நாட்டில் கோலோச்சும் ஒரே கோட்பாடு இதுதான்!

ஆரியம் - திராவிடம் என்ற பிரிவு உண்மையா, யார் எங்கிருந்து வந்தனர், யாரது பண்பாடு எப்படிப்பட்டது என்பது பற்றிப் பேசவேண்டிய பதிவு இதுவல்ல. ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பார்ப்பனர் அல்லாத சாதிப்பிரிவினர் சிலர் தாங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பிரிட்டிஷ் அரசின் வேலைகளிலும் படிப்பிலும் மிகவும் பின்தங்கி இருப்பதையும், ஆனால் எண்ணிக்கையில் குறைவாக இருந்தும் பார்ப்பனர்கள் வேலைகளில் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து, அரசியல் உணர்ச்சியால் உந்தப்பட்டு ஓர் அமைப்பை உருவாக்கினார்கள்.

தமிழகத்தின் வரலாறு மாறியது.

ஜஸ்டிஸ் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கம், பின்னர் பெரியார், அண்ணா என்று நீண்டு, தமிழகத்தின் அரசியலில் முக்கியமான இடம் வகிப்பதோடு இந்திய அரசியலின் போக்கையும் மாற்றியுள்ளனர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பெரியார், அண்ணா பெயர் சொல்லாத அரசியல் கட்சி தமிழகத்தில் வாக்குகளை வாங்கவே முடியாது; இடங்களைப் பிடிக்கவே முடியாது என்பதுதான் இன்று தமிழகத்தின் நிலவரம். காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்று சூளுரைக்கும் காங்கிரஸ் கட்சி, திமுக, அஇஅதிமுக இரண்டுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்துப் பிழைக்கவேண்டியதுதான் நிலை. சமூகநீதி, இட ஒதுக்கீடு என்ற வார்த்தைகளைச் சொல்லாத கட்சி தமிழகத்தில் இருப்பதற்கே இடமில்லை.

ஆக, திராவிட இயக்கம் எனப்படும் இந்த நூறாண்டு கருத்தாக்கத்தின் வரலாறு என்ன? இதன் முக்கிய பாத்திரங்கள் எப்படி இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றனர். அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படி வரலாற்றின் திசையை மாற்றின. இவற்றை விரிவாகச் சொல்லும் புத்தகம்தான் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு - இரு பாகங்கள்.

முதலில் ஒரு பெரும் புத்தகமாகக் கொண்டுவருவதாகத்தான் முடிவு செய்திருந்தோம். சுமார் 900 பக்கங்கள் வருவதாக இருந்தது. பின்னர் வாசகர்களையும் அவர்களது மனிபர்ஸையும் மனத்தில் வைத்துச் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இரண்டு தொகுதிகளாக, கெட்டி அட்டை இல்லாமல், பேப்பர் பேக் வடிவில் வருகிறது. இரண்டும் சுமார் 400, 400 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ. 200/-

ராமச்சந்திர குஹாவின் எழுத்து நடையால் உந்தப்பட்டு முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் ஒரிஜினல் மேற்கோள்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார். நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்கள் முதற்கொண்டு பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், பாரதிதாசனும், கண்ணதாசனும், சம்பத்தும், மதியழகனும், நெடுஞ்செழியனும், வைகோவும், ராமதாசும், இன்னும் பலரும் அவரவர் வார்த்தைகள் ஊடாகவே கதையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

புத்தாண்டில் நீங்கள் படிக்கவேண்டிய முக்கியப் புத்தகங்களில் இது கட்டாயம் இருக்கவேண்டும். இந்திய வரலாற்றுடன் தமிழகத்தின் தனி அரசியல் வரலாறையும் முழுமையாகக் கொண்டுவருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

2011-ம் ஆண்டு மிக நல்ல ஆண்டாக அமைய உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

பாகம் 1 | பாகம் 2
.

4 comments:

  1. Dear Badri wishing you and Kizhakku the very best in this year. Bibliophiles in Tamil Nadu and elsewhere have much to thank you folks. May you prosper and thrive.

    ReplyDelete
  2. //திராவிட-ஆரிய வரலாற்றாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று//

    இந்த வரலாறு உங்களை போன்ற இந்து மத விரோத செயல்களூக்கு ஆதரவுதருகின்ற அறிவுஜீவிகளூக்கு(!!!) பிடிக்காமல் இருந்தால்தான் அது ஆச்சர்யம்.

    ReplyDelete
  3. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This Dravidian movement history has been dealt with by so many writers in English. One of the best about early years is by Eugene Irschik. If this is the first serious history book about about Dravidian movement in Tamil, it shows the intellectual poverty in Tamil writing - till now anyway.

    Vijayaraghavan

    ReplyDelete