Sunday, November 06, 2011

ஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1

(யாரிடமும் இதனை மொழிபெயர்க்க அனுமதி வாங்கவில்லை. துண்டு துண்டாக இந்தக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடப்போகிறேன். உங்கள் வாசிப்பு அனுபவத்துக்காக...)

முன்னூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்பு தொடர்பாக ஐந்து எடுத்துக்காட்டுகளும் மூன்று சிந்தனைகளும்
ஏ.கே.ராமானுஜன்

எத்தனை ராமாயணங்கள்? முன்னூறு? மூவாயிரம்? சில ராமாயணங்களின் இறுதியில், ‘எத்தனை ராமாயணங்கள்தான் உள்ளன?’ என்ற கேள்வி ஒன்று கேட்கப்படும். சில கதைகளில் அதற்கான பதிலும் இருக்கும். இதோ ஒன்று.

ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்கும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிட்டது. அது பூமியைத் தொட்டதும், தரையைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்று மறைந்துவிட்டது. போயே போய்விட்டது. அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமன், அவருடைய காலடியில்தான் இருந்தான். ‘என் மோதிரம் தொலைந்துவிட்டது. கண்டுபிடித்து எடுத்துவா’ என்று ராமர் அனுமனிடம் சொன்னார்.

அனுமனால் எத்தனை சிறிய துளைக்குள்ளும் புகுந்து செல்ல முடியும். மிக மிகச் சிறியதாகவோ, மிக மிகப் பெரியதாகவோ தன் உடலை ஆக்கிக்கொள்ள முடியும். எனவே, தன் உடலைக் குறுக்கிக்கொண்டு அந்தத் துளைக்குள் சென்றான்.

அவன் கீழே கீழே போய் பாதாளத்தில் விழுந்தான். அங்கே பல பெண்கள் இருந்தனர். ‘அதோ பார், சின்னக் குரங்கு! மேலேயிருந்து விழுந்துள்ளது’ என்று சொல்லி, அவனைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தனர். பாதாளத்தில் வசிக்கும் பூதங்களின் அரசனுக்கு மிருகங்களைத் தின்பதில் பிரியம் அதிகம். எனவே அனுமன், அவனுக்கான உணவாக, காய்கறிகளுடன் சேர்த்து அனுப்பிவைக்கப்பட்டான்.

பாதாளத்தில் இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, ராமர் பூமியில் தன் அரியணையில் அமர்ந்திருந்தார். அப்போது வசிஷ்டரும் பிரம்மனும் அவரைக் காண வந்தனர். ‘உன்னுடன் தனிமையில் பேசவேண்டும். அதனை யாரும் கேட்கக்கூடாது, நம் பேச்சுக்கு இடையூறும் வரக்கூடாது. ஒப்புக்கொள்வாயா?’ என்றனர்.

‘சரி, பேசுவோம்’ என்றார் ராமர்.

‘நாம் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது உள்ளே வந்தால் அவர்களுடைய தலை துண்டிக்கப்படவேண்டும் என்று ஓர் உத்தரவைப் போடு’ என்றனர்.

‘சரி, அப்படியே ஆகட்டும்’ என்றார் ராமர்.

வாயிலைக் காக்க யார் நம்பகமான ஆசாமி? மோதிரத்தை எடுக்க அனுமன் கீழே போயிருக்கிறான். லட்சுமணனைவிட வேறு யாரையும் ராமன் அதிகமாக நம்புவதில்லை. எனவே லட்சுமணனை அழைத்து வாயிலருகே நிற்கச் சொன்னார். ‘யாரையும் உள்ளே அனுமதிக்காதே’ என்று ஆணையிட்டார்.

லட்சுமணன் வாயிலில் நிற்கும்போது விஸ்வாமித்திரர் அங்கே வந்து, ‘ராமனை உடனே பார்க்கவேண்டும். மிக மிக அவசரம். ராமன் எங்கே?’ என்று கேட்டார்.

‘உள்ளே போகாதீர்கள். அவர் சிலருடன் மிக முக்கியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்றான் லட்சுமணன்.

‘என்னிடமிருந்து ராமன் அப்படி எதை மறைக்கப் போகிறான்? நான் உடனே உள்ளே போகவேண்டும்’ என்றார் விஸ்வாமித்திரர்.

‘அப்படியானால் நான் உள்ளே போய் அவருடைய அனுமதியைப் பெற்று வருகிறேன்’ என்றான் லட்சுமணன்.

‘சரி, போய்க் கேட்டுவிட்டு வா!’

‘ராமன் வெளியே வரும்வரை நானே உள்ளே போக முடியாது. கொஞ்சம் பொறுங்கள்.’

‘உடனே உள்ளே போய் நான் வந்திருப்பதை அறிவிக்காவிட்டால், என் சாபத்தினால் அயோத்தி ராஜ்ஜியத்தையே எரித்துச் சாம்பலாக்கிவிடுவேன்’ என்றார் விஸ்வாமித்திரர்.

லட்சுமணன் யோசித்தான். ‘நான் உள்ளே போனால் நான் சாகவேண்டும். ஆனால் நான் போகாவிட்டால், இந்த முன்கோபக்காரர் ராஜ்ஜியத்தையே எரித்துவிடுவார். அனைத்து மக்களும் அனைத்து உயிரினங்களும் செத்துப்போவார்கள். எனவே நான் ஒருவன் மட்டும் உயிர் துறப்பது சிறந்தது.’

எனவே, உள்ளே சென்றான்.

‘என்ன விஷயம்?’ என்றார் ராமர்.

‘விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார்.’

‘உள்ளே அனுப்பிவை.’

விஸ்வாமித்திரர் உள்ளே சென்றார். அதற்குள் பிரத்யேகப் பேச்சுகள் முடிவடைந்திருந்தன. ‘இந்தப் பூவுலகில் நீ வந்த வேலை முடிந்துவிட்டது. ராமாவதாரத்தை விடவேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த உடலை விடுத்து, வானுலகம் வந்து கடவுள்களுடன் சேர வா’ என்று ராமரிடம் சொல்வதற்காகத்தான் பிரமனும் வசிஷ்டரும் வந்திருந்தனர்.

இதற்குள் லட்சுமணன் ராமரிடம், ‘அண்ணா, நீ என் தலையை வெட்டவேண்டும்’ என்றான்.

‘ஏன் தம்பி? எங்கள் பேச்சுதான் முடிந்துவிட்டதே? மேலே சொல்வதற்குத்தான் எதுவும் இல்லையே? எனவே உன் தலையை ஏன் வெட்டவேண்டும்?’ என்றார் ராமர்.

‘அப்படி நீ செய்யக்கூடாது. நான் உன் தம்பி என்பதால் நீ என்னை விட்டுவிட்டதாக ஆகிவிடும். அது உன் பெயருக்கு இழுக்கல்லவா? உன் மனைவி என்பதற்காக சீதையை விட்டுக்கொடுத்தாயா? அவளைக் காட்டுக்கு அனுப்பினாயே. என்னையும் நீ தண்டிக்கவேண்டும். நான் கிளம்புகிறேன்’ என்றான் லட்சுமணன்.

லட்சுமணன், விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம். அவனுடைய நேரமும் முடிந்திருந்தது. அவன் நேராக சரயு நதிக்குச் சென்று ஆற்றில் இறங்கி மறைந்தான்.

லட்சுமணன் தன் உடலை விடுத்ததும், ராமர் உடனேயே வீடணன், சுக்கிரீவன், இன்னபிற தொண்டர்கள் அனைவரையும் அழைத்தார். தன் இரட்டை மகன்களான லவனுக்கும் குசனுக்கும் பட்டாபிஷேகம் செய்துவைத்தார். பின்னர் அவரும் சரயு நதியில் இறங்கினார்.

இது நடந்துகொண்டிருக்கும்போது அனுமன் பாதாளத்திலேயே இருந்தான். பூத அரசனிடம் அவனை எடுத்துச் சென்றபோது, அவன் தொடர்ந்து ராம, ராம, ராம என்று ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்தான்.

‘நீ யார்?’ என்றான் பூத அரசன்.

‘அனுமன்.’

‘அனுமனா? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?’

‘ராமரின் மோதிரம் துளைக்குள் விழுந்துவிட்டது. அதை எடுத்துப்போக வந்திருக்கிறேன்.’

பூத அரசன் சுற்றும் முற்றும் பார்த்து ஒரு தட்டைக் காண்பித்தான். அதில் பல ஆயிரம் மோதிரங்கள் இருந்தன. அவை அனைத்தும் ராமரின் மோதிரங்கள். அரசன் அந்தத் தட்டை அனுமனிடம் கொண்டுவந்து கொடுத்து, ‘உங்களுக்கு வேண்டிய ராமரின் மோதிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றான்.

ஆனால் அந்த மோதிரங்கள் அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்தன. அனுமன் குழம்பிப்போனான். ‘இவற்றில் எது அந்த மோதிரம் என்று எனக்குத் தெரியவில்லையே’ என்றான்.

‘இங்கு எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ, அத்தனை ராமர்கள் இருந்துள்ளனர். நீங்கள் பூமிக்குத் திரும்பும்போது ராமர் அங்கே இருக்க மாட்டார். ராமரின் இந்த அவதாரம் நிறைவு பெற்றுவிட்டது. ராமாவதாரம் நிறைவு பெறும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிடும். நான் அவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வேன். நீங்கள் இப்போது போகலாம்’ என்றான் பூத அரசன்.

எனவே அனுமன் விடைபெற்றுச் சென்றான்.

ஒவ்வொரு ராமருக்கும் ஒரு ராமாயணம் உள்ளது என்பதைக் குறிப்பிடவே இந்தக் கதை பொதுவாகச் சொல்லப்படுகிறது.(1) கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளில், எத்தனை ராமாயணக் கதைகள் புழக்கத்தில் உள்ளன; தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அவற்றின் செல்வாக்கின் வீச்சு எவ்வளவு என்பது ஆச்சரியம் தரக்கூடியது. ராம காதை எவ்வளவு மொழிகளில் உள்ளது என்பதே வியக்க வைப்பது: அசாமி, பாலினீஸ், வங்காளி, கம்போடியன், சீன, குஜராத்தி, ஜாவனீஸ், கன்னடம், காஷ்மிரி, கோடானீஸ், லாவோஷியன், மலாய், மராத்தி, ஒரியா, பிராக்ருதம், சம்ஸ்கிருதம், சந்தாலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபெத்தியன் ஆகியவற்றுடன் பல மேற்கத்திய மொழிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! கடந்த பல நூற்றாண்டுகளில் இந்த மொழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் ராம காதை சொல்லப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் மட்டும் 25 அல்லது அதற்கும் மேற்பட்ட கதைகள், பல்வேறு வகைகளில் (காவியம், புராணம்...) சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றுடன், செவ்வியல் வடிவிலும் நாட்டார் வடிவிலுமாகச் சேர்த்து, நாடகம், நாட்டியம், பிற நிகழ்கலைகள் என்று பார்த்தால் ராமாயணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிடும். இவற்றுடன் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், முகமூடி நாடகங்கள், பொம்மலாட்டம், நிழலாட்டம் என்று தெற்காசிய, தென்கிழக்காசிய கலாசாரங்களில் இருப்பனவற்றையும் சேர்க்கவேண்டும். (2) ராமாயண ஆராய்ச்சியாளரான கேமி பல்க், 300 விதமான ராமாயணங்களைக் குறிப்பிடுகிறார். (3) முன்னதாக, 14-ம் நூற்றாண்டில்கூட, கன்னடக் கவிஞரான குமாரவியாசன், பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கும் சர்ப்பம் ராமாயணக் கவிகளின் பாரத்தைத் தாங்காமல் முனகுவதாகக் கேள்விப்பட்டு, மகாபாரதத்தை எழுதுவது என்று முடிவெடுத்தார். இந்தக் கட்டுரையில் நான் பயன்படுத்தியிருக்கும் ஏகப்பட்ட தகவல்களுக்காக, பல அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்தத் தகவல்களை, எனக்காகவும் பிறருக்காகவும், ஒருவிதத்தில் ஒழுங்குபடுத்த முனைகிறேன். அதன்மூலம், எப்படி வெவ்வேறு கலாசாரங்களிலும் மொழிகளிலும் மதப் பின்னணியிலும் புழங்கும் இந்த நூற்றுக்கணக்கான கதையாடல்கள் ஒன்றோடு ஒன்று உறவுகொண்டுள்ளன என்பதையும் எது மொழியாக்கத்தின்போது அப்படியே கையாளப்படுகிறது, எது மொழியாக்கத்தின்போது சற்றே மாற்றப்படுகிறது, எது முற்றிலுமாக, தலைகீழாக மாறுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட முற்படுகிறேன்.

===
1. I owe this Hindi folktale to Kirin Narayan of the University of Wisconsin.

2. Several works and collections of essays have appeared over the years on the many Ramayanas of South and Southeast Asia. I shall mention here only a few which were directly useful to me: Asit K. Banerjee, ed., The Ramayana in Eastern India (Calcutta: Prajna, 1983); P. Banerjee, Rama in Indian Literature, Art and Thought, 2 vols. (Delhi: Sundeep Prakashan, 1986);J. L. Brockington, Righteous Rama. The Evolution of an Epic (Delhi: Oxford University Press, 1984); V. Raghavan, The Greater Ramayana (Varanasi: All-India Kashiraj Trust, 1973); V. Raghavan, The Ramayana in Greater India (Surat: South Gujarat University, 1975); V. Raghavan, ed., The Ramayana Tradition in Asia (Delhi: Sahitya Akademi, 1980); C. R. Sharma, The Ramayana in Telugu and Tamil: A Comparative Study (Madras: Lakshminarayana Granthamala, 1973); Dineshchandra Sen, The Bengali Ramayanas (Calcutta: University of Calcutta, 1920); S. Singaravelu, "A Comparative Study of the Sanskrit, Tamil, Thai and Malay Versions of the Story of Rama with special reference to the Process of Acculturation in the Southeast Asian Versions," Journal of the Siam Society 56, pt. 2 (July 1968): 137-85.

3. Camille Bulcke, Ramkatha : Utpatti aur Vikas (The Rama story: Origin and development; Prayag: Hindi Parisad Prakasan, 1950; in Hindi). When I mentioned Bulcke's count of three hundred Ramayanas to a Kannada scholar, he said that he had recently counted over a thousand in Kannada alone; a Telugu scholar also mentioned a thousand in Telugu. Both counts included Rama stories in various genres. So the title of this paper is not to be taken literally.

11 comments:

  1. சென்னை திருமலைSun Nov 06, 09:34:00 PM GMT+5:30

    உங்களின் இந்த பதிவு பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  2. இந்த ராமானுஜனின் 300 ராமாயணங்கள் பற்றி எந்தப் பெரிய மதிப்பும் எனக்கில்லை. அதைவைத்து இடது சாரி புத்தி ஜீவிகள் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதாலேயே அது ஃபேமஸ் ஆகிவிட்டது போலும்.

    இந்த ஏ.கே. ராமானுஜனின் 300 கீமா யணங்கள் பற்றி சந்தீப் எழுதியதை கொஞ்சம் படித்துவிடுங்கள்.

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு பத்ரியின் ராமாயணம் - ராம காவியத்தின் மூலத்தினை அறிந்துகொள்ள மிக முக்கியமான பதிவு .

    ReplyDelete
  4. ராமன் எத்தனை ராமனடி ... பாடல் நினைவுக்கு வருகிறது . ...
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. இதே மாதிரித்தான் விவிலியத்தின் பழைய ஏற்பட்டில் வரும் ஆதாம் ஏவாள் கதை பல ஆயிரம் முறைகள் பல உலகங்களில் நடந்ததாக சுவையாக கற்பனை செய்து எழுதிய கதை பற்றி நான் பதிவு போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/quia-absurdum.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. வஜ்ரா: சந்தீப்பின் கட்டுரையைப் படித்தேன். தீவிர இந்து வலதுசாரிகளை (உங்களையும் சேர்த்து) நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏ.கே.ராமானுஜன்மீது உங்களுக்கு மரியாதை வரவேண்டாம். அது அவர் குற்றமல்ல.

    ReplyDelete
  7. இதில் ஸ்வபன் தாஸ்குப்தாவின் கருத்து சற்று வித்தியாசமாக உள்ளது. அவர் கட்டுரையை மதிக்கிறார்; ஆனால் இந்த சிக்கலான புத்தகத்தை சொல்லித்தர சரியான ஆட்கள் கிடைப்பது கஷ்டம், அதனால்கூட நீக்கப்பட்டிருக்கலாம் (ஊகமாகத்தான்!) என்கிறார். மேலும் முதலில் பிரிஸ்கிரைப்டு டெக்ஸ்ட் என்றே வரலாற்றுக் கல்வியில் எதுவும் இருப்பதே அபத்தம் என்கிறார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை, என்.டி.டி.வி. மணிசங்கர் ஐயருடன் விவாதத்தில்)
    ஸ்வபன் சற்று பொருட்படுத்தத் தக்க வலதுசாரி, மற்றும் நல்ல பல்கலையில் வரலாறு படித்தவர் என்பதால் அவர் சொல்வது நம் கவனத்துக்குறியதாகிறது.

    சரவணன்

    ReplyDelete
  8. தீவிர இந்து வலதுசாரி என்றால் அதன் டெஃபினிசன் என்ன என்று எனக்குத் தெரியாது. குறைந்தபட்சம் நான் ஒரு இந்து என்பதில் எனக்கு பெருமை உண்டு அவ்வளாவே. ஏ.கே ராமானுஜன் மீது மரியாதை எல்லாம் இருக்கிறது ஐயா. ஒரு சக மனிதர் என்கிற முறையில். அதற்காக அவர் எழுதியததையெல்லாம் தலையில் தூக்கிவைத்துக்கொள்ள முடியாது.

    இந்த ஏ.கே. ராமானுஜனின் கட்டுரை பலகாலமாக இணையத்தில் கிடக்கிறது. அதை நீங்கள் மொழிபெயர்த்து தற்போது வெளியிட்டதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ? இன்று அது தில்லி பல்கலைக்கழகத்து பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதால் (அல்லது நீக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணத்தால்) சில இடது சாரி அறிவுசீவிகள் நெளிந்து புலம்புகிறார்கள் என்பதினால் தானே ? (உங்களை நான் மென் இடது சாரி என்று கூட கன்சிடர் செய்யமாட்டேன்).

    ReplyDelete
  9. நல்லா இருக்கு போங்க! ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பற்றிய பிம்பமும் அவனை பற்றி மற்றவர் வைத்துள்ள பிம்பம் போல! புதிய செய்திக்கு நன்றி.

    -Kannan (கூகிள் மக்கர் செய்து விட்டது!)

    ReplyDelete
  10. இதைப் பற்றி தமிழ் எழுத்தாளர்கள்/விமர்சகர்கள் ஏதாவது எழுதியுள்ளார்களா அல்லது குறைந்தபட்சம்
    ராமனுஜனின் கட்டுரை நீக்கப்பட்டதை கண்டித்து எழுதியுள்ளார்களா.

    ReplyDelete
  11. @Anonymous

    டிசம்பர் 2011 தீராநதியில் ரவிக்குமார் இதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

    ReplyDelete