Friday, November 18, 2011

கல்வி உரிமை என்ற பெயரால் - 3

மொத்தத்தில், என் பார்வையில் பல பிரச்னைகள் தென்படுகின்றன.

1. பொதுமக்கள் அரசுப் பள்ளிகள்மீதான நம்பிக்கையை இழந்து பல காலம் ஆகிறது. இதற்கு நாம் பொதுமக்களைக் குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை. பிரச்னை அரசுப் பள்ளிகளை நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடையது.

2. அரசுப் பள்ளிகளுக்கு என மிக அதிகமாகச் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தச் செலவில் மிகப் பெரும்பான்மை ஆசிரியர் ஊதியத்தில் போய்விடுகிறது. அருகில் உள்ள எந்த அரசுப் பள்ளியையும் சென்று பார்வையிடுங்கள். மோசமான கட்டடம், போதிய வசதிகள் இல்லாமை, நல்ல குடிநீர் இல்லாமை, கழிப்பறைகள் சரியாக இல்லாமை போன்றவைதான் கண்ணில் படுகின்றன.

3. தனியார் பள்ளிகள் உசத்தியில்லை. ஆனால் நிச்சயமாக அடிப்படைக் கட்டுமானங்கள் அங்கே இந்த அளவு மோசமில்லை. தனியார் பள்ளிகளை மூன்றாகப் பிரிக்கலாம். நல்ல, போதிய இடம் + நிறையக் கட்டணம் வாங்கும், நல்ல ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் வசதியான பள்ளிகள். போதிய இடம் இல்லாத, சுமார் கட்டணம் வசூலிக்கும், சுமாரான ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள். மூன்றாவதாக, மோசமான ஆசிரியர்களைக் கொண்ட, மக்களை ஏமாற்றும் பள்ளிகள். முதல் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதையே பெரும்பாலானோர் விரும்புவர். ஆனால் அதற்கான கட்டணத்தை எல்லோராலும் செலுத்தமுடியாது. அங்குதான் கல்வி உரிமைச் சட்டம் சில ஏழைகளுக்காவது உதவும். அரசுப் பள்ளிகளில் படிப்பதைவிட, இரண்டாம் நிலைப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதுகூடத் தேவலாம். ஆனால் மூன்றாம் நிலை தனியார் பள்ளிகளில் படிப்பதைவிட அரசுப் பள்ளிகளில் படிக்கலாம்.

இன்றைய தேதியில் ஓரளவு விவரம் அறிந்த பெற்றோர் தம் பிள்ளைகள் ஆங்கில மீடியத்தில் படிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் மாற்ற முடியாத ஒன்று. இதனால்தான், மோசமான மூன்றாம்தர ஆங்கில மீடிய தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதே மேல் என்று பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கக்கூடும். இதனை மாற்ற ஒரே வழி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதே.

4. கல்வி உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளைக் கடுமையாக நெருக்கும் என்பது என் கருத்து. தனியார் பள்ளிகள் செய்வது சரியா, தவறா என்ற கேள்வி தனியாக விவாதிக்கப்பட்டவேண்டியது. முதலில் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது என்ற முறையில் ஏற்கெனவே தனியார் பள்ளிகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அடுத்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இத்தனைப் பள்ளிகளும் தம் கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டும். அதற்கான பணம் அவர்களிடம் கட்டாயம் இல்லை. இதில் பல பள்ளிகள், சரியான இடவசதி இல்லாத காரணத்தால் மூடப்படவேண்டும். உண்மையில் இந்தப் பள்ளிகள் ஆரம்பிப்பதற்கே அனுமதி தந்திருக்கக்கூடாது. இவற்றை மூடவேண்டுமானால் அரசு எந்த மாதிரியான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதை யோசித்திருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் சரியான தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை. இவர்கள் அனைவரும் பி.எட் அல்லது இணையான படிப்பை முடித்து, தகுதித் தேர்வு ஒன்றை எழுதி அதற்கான சான்றிதழ் பெறவேண்டும். இது குறிப்பிட்ட காலத்துக்குள் நடக்கக்கூடிய காரியமாக எனக்குத் தெரியவில்லை. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுமே இதில் தடுமாறப் போகிறார்கள்.

உதாரணத்துக்கு, முதல் CTET தேர்வில் இந்தியா முழுவதிலுமாகத் தேர்வு எழுதியவர்களில் 12% பேர்தான் பாஸ் செய்திருக்கிறார்கள். நம் ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கத்தான் தெரியுமே தவிர, தேர்வு எழுதி பாஸ் செய்யத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நம் ஆசிரியர்கள் பலரும், CTET அல்லது TNTET என்ற தேர்வு தம்மை வந்து தாக்கப்போகிறது என்று தெரிந்தால் கலங்கிப் போய்விடுவார்கள். நிச்சயமாகப் போராட்டம் வெடிக்கும் என்றே கணிக்கிறேன்.

இடையில் சமச்சீரா, இல்லையா என்ற ஸ்பெஷல் பிரச்னை தமிழகத்தில் மட்டும் எழுந்தது.

இதற்கு மேலாக, 25% ஒதுக்கீட்டை நிர்வகித்து, அதில் குழப்பம் ஏற்படாமல் பள்ளியை நடத்தி, அரசு இந்த 25% மாணவர்களின் கட்டணத்தை எப்போது தருகிறதோ அப்போது பெற்றுக்கொண்டு, அதற்கு யார் யாருக்கு எத்தனை வெட்டவேண்டுமோ அதை வெட்டி...

கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ஒரு தனியார் பள்ளியைக் கட்டி நிர்வகிக்க மாட்டேன்! எனக்கு வேண்டாம் இந்தத் தலைவேதனை.

(தொடரும்)

3 comments:

  1. Will Tamil Nadu accept All India Entrance for Medical Admission? Why are TN politicians project it against the poor while no other state thinks so?

    ReplyDelete
  2. 'கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ஒரு தனியார் பள்ளியைக் கட்டி நிர்வகிக்க மாட்டேன்! எனக்கு வேண்டாம் இந்தத் தலைவேதனை."

    In a city like Chennai, a crore will get you quarter acre in an extended suburb in Sholinganallur. A school is supposed to have at least two acres of land. Will government allocate porambokku land at concessional rate to private school operators and perhaps put checks in place to ensure some quality in education.

    ReplyDelete
  3. //கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ஒரு தனியார் பள்ளியைக் கட்டி நிர்வகிக்க மாட்டேன்! எனக்கு வேண்டாம் இந்தத் தலைவேதனை.
    //
    This statement(Im not pointing you. In general concern) generates so many thoughts in my minds. It shows the current state of the education which was converted from an aided service to killing business. :)
    - Jagan

    ReplyDelete