Tuesday, November 15, 2011

பங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்

[நாளை வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

1971 செப்டெம்பர்-அக்டோபரில் ஆர்ட்டிலரி பள்ளியில் நான் இருந்தபோது பங்களாதேச விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது. பயிற்சி பாதியில் நிறுத்தப்பட்டு சிக்கிம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டேன்.

தேவ்லாலியில் இருந்து பாக்தோக்ராவுக்கு ரயிலில் போனேன். பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு ஜீப்பில் போனேன். முதலில் சீன எல்லையில் எங்கள் படை முகாம் இட்டிருந்தது. பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு இடம் மாறியிருந்தது. போருக்குத் தயாராகும்படி உத்தரவுகள் தரப்பட்டன. எங்கும் ஒரே பதட்டம், பரபரப்பு.

உண்மையில் கிழக்கு பாகிஸ்தானில் அப்போது நடந்தது ஓர் உள்நாட்டுப் போர்தான். பாகிஸ்தான் ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் ஏராளமான அப்பாவிகள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குவிந்தனர். சுமார் ஒரு கோடி பேர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை அகற்றுவதற்கு, முக்தி வாஹினி என்ற அமைப்புக்கு தேவையான ராணுவப் பயிற்சியைத் தந்துவந்தது.

முதல் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு நம் படைகள் மின்னல்போல் ஊடுருவின. எதிரிகள் சுதாரிக்க நேரம் கொடுக்கக்கூடாது என்பதே எங்களுடைய இலக்கு.

கிழக்கு பாகிஸ்தானின் ஆறுகள், நீரோடைகள்மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களைத் தகர்ப்பதன் மூலம் எதிரிகளுக்குப் பொருட்கள் கிடைப்பதைத் தடுப்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம் பாகிஸ்தானிய படைப்பிரிவு ஒவ்வொன்றும் தனிமைப்படுத்தப்பட்டது. முதலில் தீவிரமாகத் தாக்கியவர்கள், விரைவிலேயே தப்பி ஓடவேண்டிய நிலை வந்துவிட்டது. அவர்களுடைய தோல்விக்கு முக்கியக் காரணம் தார்மிக வலிமை இல்லாது போனதுதான். உள்ளூர் மக்களிடமிருந்து அவர்களுக்குத் துளிக்கூட ஆதரவில்லை. ஆனால், நம் ராணுவத்துக்கோ, கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

நான் பீரங்கிப் பிரிவில் இருந்தேன். இரவும் பகலும் விடாமல் சுட்டபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். ஒரே ஒரு முறை எதிரியை வெகு அருகில் சந்திக்க வேண்டிவந்தது. பாகிஸ்தான் படையினர் நாங்கள் இருந்த பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் தகவலை எங்கள் கமாண்டர் மேஜர் பாக்கர் சிங் சொன்னார். என் படைப்பிரிவுதான் எளிதில் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் இருந்தது. சிறிது காலத்துக்கு முன்புதான் பாகிஸ்தானிய வீரர்கள் நிறையக் கண்ணிவெடிகளை வழியில் பதித்து வைத்திருந்தனர். நம் வீரர்கள் சிலர் அதில் மாட்டி இறந்திருந்தனர். ஆயுதங்களும் சிதைந்துபோயிருந்தன.

அக்டோபர் மாதவாக்கில் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தோம். பிரதான போர் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தது. பாகிஸ்தானின் முக்கியப் படையைச் சுற்றி வளைத்தோம். ஜெனரல் மானேக்‌ஷா, பாகிஸ்தான் வீரர்களுடன் ரேடியோவில் பேசினார். அவர்களைச் சரணடைய வற்புறுத்தினார்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லாப் பக்கங்களிலும் வளைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய மன தைரியம் முற்றாகக் குலைந்துபோயிருந்தது. நாங்கள் மட்டும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

சரணடையும் படலம் வந்தது. திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிபோல் அது இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ கமாண்டர், தன் படைகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் சரணடைய வைக்கப்பட்டார். அவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சரணடைந்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்த போர்க் கைதிகள் முகாம்களுக்கு அனுப்பினோம். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சரணடைவு நிகழ்ச்சி அது. சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

பங்களாதேசம் என்று பெயர் மாற்றம் பெற்ற அந்த நாட்டிலிருந்து அதன் பிறகு நாங்கள் வெளியேறினோம். என்னுடைய படைப் பிரிவு சிக்கிமுக்குப் போனது. தினஜ்பூர், ரங்பூர் வழியாக சிக்கிம் வரையிலான பாதையில் மக்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். ‘இந்திரா காந்தி வாழ்க! இந்திய ராணுவம் வாழ்க! மானேக்‌ஷா வாழ்க!’ என்று மக்கள் தெருக்களில் இறங்கி உற்சாகத்துடன் கோஷங்கள் போட்டார்கள்.

நகரங்கள், ஊர்கள், ஏன் சிறு கிராமங்களில்கூட சுதந்தரத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விவசாயிகள், சாதாரண மக்கள், கல்லூரிப் பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் மாலை மரியாதையுடன் எங்களை வரவேற்றனர். நட்பின் அடையாளமாக எங்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

புத்தகத்தை வாங்க

1 comment:

  1. /// பங்களாதேசம் ///

    பொருந்தவில்லையே! ஒன்று வங்கதேசம், வங்காளதேசம் அல்லது பங்களாதேஷ். தமிழ் உச்சரிப்பில் பங்களா என்பது "bangalow" என்ற இந்திய ஆங்கிலச் சொல்லுக்குப் பயன்படுத்தப் படுவதால் கூறுகிறேன்.

    அடுத்து 'முகாம் இட்டிருந்தது' என்பது தமிழ் தினசரிகளின் பானி அல்லவா? கிழக்கில் சரியாக 'முகாமிட்டிருந்தது' என்று எழுதுவீர்கள் என்றே நினைப்பேன். (சொல் திருத்தி வெளியீடு நிகழ்ச்சியில் உங்கள் உரை)

    சரவணன்

    ReplyDelete