Friday, November 18, 2011

கல்வி உரிமை என்ற பெயரால் - 2

இப்போது சில கேள்விகளுக்கு வருவோம்.

1. அரசுப் பள்ளிகள் மோசமானவை; தனியார் பள்ளிகள் சிறப்பானவை என்பதால்தான் மக்கள் அவற்றில் சேர அலைமோதுகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் ஏழைகளால் இது முடிவதில்லை. எனவே இந்தச் சட்டம் அந்தச் சமத்துவத்தைக் கொண்டுவருகிறது.

இந்த விவாதத்தை கஜேந்திரபாபுவும் கருணாகரனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுப் பள்ளிகள் மோசம் என்று சொல்லக்கூடாது. தனியார் பள்ளிகள் சிறப்பானவை என்றும் சொல்லக்கூடாது. ஆனால் இட ஒதுக்கீடும் வேண்டும். ஏன் என்றால் அது அவர்களுடைய சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியாம். ஆனால் தனியார் பள்ளிகளில் சேர மக்கள் ஏன் அலைமோதுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் விரும்பாமல் டாட்ஜ் செய்துவிட்டனர்.

2. தனியார் பள்ளிகளில் மக்கள் சேர விரும்புவதன் காரணம் அங்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுதானே? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சரியாகச் சொல்லித் தரப்படுவதில்லையே.

கஜேந்திரபாபு உடனடியாக, ‘ஆங்கிலம் தேவையே இல்லை’ என்று சொல்லிவிட்டார். ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். மொழி என்பதற்கும் அறிவு என்பதற்கும் தொடர்பில்லை’ என்று சரியாகவே சொன்னார். ஆனால் மக்கள் ஏன் ஆங்கிலப் பள்ளிகளை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசாமல் மறுபடி ஒரு டாட்ஜ். ஆங்கிலம் தேவையே இல்லை என்றால், ஏன் ஆங்கில மீடியத்தில் பாடம் சொல்லித்தரும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வேண்டும் என்று வற்புறுத்தல்?

3. அரசுப் பள்ளிகளில் கட்டுமானம் மோசமாக இருக்கிறது. டாய்லட் வசதி சரியில்லை. வகுப்புகள் சரியில்லை. உட்கார பெஞ்சு இல்லை. கரும்பலகை பல்லிளிக்கிறது... ஆனால் தனியார் பள்ளிகள் உடனடியாகத் தங்களுடைய கட்டுமானத்தை உலகத் தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாம்.

அரசுப் பள்ளிகள்மீது அரசு எக்கச்சக்கமாகச் செலவழிக்கும் பணம் எங்கே போகிறது? அதுபற்றி எந்த விவாதமும் இல்லை. ஆனால் தனியார் பள்ளிகள் மிக உயர்ந்த தரத்திலான கட்டுமானத்தை உடனே உருவாக்கவேண்டுமாம். ஆனால் தனியார் பள்ளிகளின் கட்டணம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமாம். இது எப்படி ஒரே நேரத்தில் சாத்தியம்?

4. அரசுப் பள்ளிகள்மீது அரசு மேற்கொண்டு செலவழித்து அவற்றை உயர்தரத்துக்குக் கொண்டுசெல்லாமல் தனியார் பள்ளிகளில் மேலே சொன்ன முறையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு எதற்குப் பணம் செலவழிக்கவேண்டும் - என்று சிலர் கேட்பதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முன்வைத்தார்.

உடனேயே, அந்த மாதிரிக் கேட்பவர்கள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்ற கோஷத்தை கஜேந்திரபாபு எழுப்பினார். கல்வி உரிமைச் சட்ட மசோதாவின் ஆரம்பக் காலத்திலிருந்தே இப்படிச் சிலர் சொல்லிவருவதாகவும், அவர்களெல்லாம் ஏழை மக்கள் நல்ல கல்வியைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்றும் அவர் கருத்தை வைத்தார்.

5. இப்படி குலுக்கல் முறையில் சேர்க்கப்படும் மாணவர்கள் பிற மாணவர்களுடன் படிப்பில் சமமாக இருக்கமுடியுமா அல்லது மிகவும் திண்டாடுவார்களா என்பது அடுத்த கல்வி.

இதை மறுத்த கருணாகரன் சொன்னது: ‘மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில்தானே சேரப்போகிறார்கள்; பின் என்ன பிரச்னை?’

அதாவது மாணவர்கள் எல்லாம் வெறும் ஆசிரியர்களின் முயற்சியாலேயே அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்கிறார்கள் என்பது இதன் உட்கருத்து. ஆனால் உண்மையில் நடப்பதே வேறு. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவரவர் பெற்றோர்தான் அதிக அளவு படிப்பில் பங்களிக்கின்றனர். அப்படிச் செய்யமுடியாத பெற்றோர்களின் குழந்தைகள் நிஜமாகவே திணறுகின்றன. அவர்கள் ட்யூஷன் வகுப்புகளுக்குத் துரத்தப்படுகின்றனர். அங்கே சிலர் பிழைக்கின்றனர். எனவே ஆசிரியர்களை மட்டுமே நம்பி அனுப்பப்படும் பிள்ளைகள் வகுப்பில் பெரும்பாலும் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள். சென்சிடிவிடி இல்லாத ஆசிரியர்கள் இந்தப் பிள்ளைகளை அசிங்கமாகத் திட்டிப் பேசுவார்கள். அவர்கள் செய்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இவையெல்லாம் நடக்கப்போகின்றன. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

6. குலுக்கலுக்கு யார் தகுதியானவர்? பொருளாதாரரீதியிலா அல்லது இங்கு சாதிரீதியான இட ஒதுக்கீடு உண்டா?

தமிழகத்தில் எது நடந்தாலும் அடிப்படையில் சாதிரீதியிலான இட ஒதுக்கீடு இருந்தே ஆகவேண்டும். எனவே இங்கும். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் இவை தெளிவாக இல்லை என்றார் ஒருவர். இல்லையில்லை, மிகத் தெளிவாக இருக்கிறது என்றார் இன்னொருவர்.

(அப்படியானால் நிச்சயம் தெளிவாக இல்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்!)

(தொடரும்)

1 comment:

  1. Dr Badri

    I visit lot of villages. When you talk about education no one is interested. i e. teachers, students and parents (I refer only Govt. Schools. Atleast up to primary level management and control should with local Panchayat union. So there will be accountability of teachers performance. (No state wise affiliation of teachers union) This will improve quality considerably.

    Let us hope for the best.
    We find lot of response for you Ajit's message. You can see rassikar mandram banners even in remote village. This is our mind set.

    Ln Kasthurirangan

    ReplyDelete