Tuesday, August 24, 2004

தேர்தல் சீர்திருத்தங்கள் - 4

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றி நிறையப் பெருமை பேசினார். (தி ஹிந்து செய்தி பாருங்கள். அந்தச் செய்தியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதைப் பற்றி மட்டும்தான் எழுதியுள்ளனர்.)


தொடர்ந்த கேள்வி பதில். சென்னையில் நடக்கும் எல்லா பேச்சுகளுக்கும் எப்பொழுதும் ஆஜராகும் ஒருசில உபயோகமற்ற ஆசாமிகள் இங்கும் வந்து ஒரு பிரசங்கம் செய்து எதோவொரு கேள்வியை எசகுபிசகாகக் கேட்டு, பெருமையுடன் அமர்ந்தனர். [அபத்தத்துக்கு உதாரணம்... "எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால், குடியரசுத் தலைவருக்கு என் வாக்கைப் போடலாமா?"]

ஒரு எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி மாணவி ஊனமுற்றவர்கள் வாக்களிக்க என்ன உதவிகளை ஆணையம் செய்கிறது என்று கேட்டார்.

கிருஷ்ணமூர்த்தியின் பதில்: வாக்குச் சாவடிகளில் சக்கர இருக்கை வண்டிகள் போகுமாறு சரிவல்கள் ஏற்படுத்தித் தர முயல்கிறோம். ஊனமுற்றுவர்கள் வாக்களிக்க வந்தால் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. வரிசையை முந்திக்கொண்டு நேரடியாக வாக்களிக்கப் போகலாம். கூடவே அவர்கள் ஒருவரைத் துணையாகக் கூட்டிக் கொண்டு வரலாம். கண் பார்வையற்றவர்களுக்கு பிரெயில் முறையில் வாக்களிக்கும் இயந்திரத்தில் அமைக்க முடியுமா என்று சிலர் கேட்டுள்ளனர். ஹைதராபாதில் இருக்கும் ஒரு அமைப்புடன் இதில் என்ன சாத்தியப்படும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். முன்னரே இருக்கும் தேர்தல் ஆணையத்தின் ஓர் ஆணைப்படி, கண் பார்வையற்றவர் தன்னுடன் வேறொருவரைக் கூட்டிக் கொண்டு வந்து வாக்களிக்கலாம். ஊனமுற்றவர்கள் தபால் வாக்களிக்க முடியுமா என்பதையும் யோசித்து வருகிறோம்.

மற்றொருவர் "மக்கள் குற்றவாளிகளுக்குத்தான் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்றால் விட்டுவிட வேண்டியதுதானே? அது மக்களின் உரிமை. ஏன் நீங்கள் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கட்சி கட்டுகிறீர்கள்" என்று கிருஷ்ணமூர்த்தி மீது ஆவேசமாகக் குற்றம் சாட்டினார். கிருஷ்ணமூர்த்தி "உங்கள் கருத்து அது. என் கருத்து குற்றவாளிகள் அரசியலில் இருக்கக்கூடாது என்பது" என்பதோடு நிறுத்தி விட்டார்.

இறுதியில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி தாளாளர் ஹரிதாஸ் நன்றி கூற, நிகழ்ச்சி நிறைவுற்றது.

No comments:

Post a Comment