Tuesday, August 17, 2004

காஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்

சில மாதங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் ஆளும் கூட்டணி (PDP + காங்கிரஸ்) பெண்கள் திருமணம் பற்றிய ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, பின்னர் காங்கிரஸ் எதிர்ப்பால் அதனைக் கைவிட்டது. இந்தச் சட்ட வரைவின்படி காஷ்மீரிப் பெண்கள், காஷ்மீரியல்லாத ஆண்களைத் திருமணம் செய்தால் ஜம்மு காஷ்மீரில் சொத்துக்களை வாங்கும் உரிமையையும், தேர்தலில் சில பதவிகளுக்க்கு நிற்கும் உரிமையையும் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் காஷ்மீரி ஆண்கள் வேற்று மாநில/நாட்டுப் பெண்களை மணந்தால் இந்த உரிமைகளை இழக்க வேண்டியிருக்காது.

இந்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்ட போது சோனியா காந்தி நேரடியாகத் தலையிட்டதனால் பெண்களுக்கு எதிரான இந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுபோன்ற பிரிவினைச் சட்டங்கள் முட்டாள்தனமானவை. தேவையற்றவை.

இப்பொழுது எதிர்க்கட்சியான நேஷனல் கான்பரன்ஸ் கட்சி இந்தச் சட்ட வரைவை தனி நபர் மசோதாவாகத் தாக்கல் செய்ய நினைத்துள்ளது என்று அந்தக் கட்சியின் தலைவர் ஒமார் அப்துல்லா கூறியுள்ளார்.

இதன்மூலம் ஆளும் கட்சிக்குப் பெருத்த தலைவலியை ஏற்படுத்தலாம் என்பது அப்துல்லாவின் நோக்கம். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, கேவலமாக நடந்துகொள்வது இந்திய அரசியலில் சகஜம்தான் என்றாலும் ஒமார் அப்துல்லா போன்ற படித்த, இளைய தலைமுறைத் தலைவர்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை.

காஷ்மீரில் பலர் இந்திய அரசை எதிர்ப்பவர்கள். தனியாகப் போவது, அல்லது பாகிஸ்தானுடன் இணைவது ஆகியவை அவர்களது கொள்கைகள். ஆனால் தற்போது மேற்படி பிரிவினைச் சட்டத்தைக் கொண்டுவர முயல்பவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்பும், இந்தியத் தேர்தல் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியினர்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போதிலிருந்தே (அல்லது இணைக்கப்பட்ட போதிலிருந்தே) காஷ்மீருக்கென தனிச்சட்டங்கள் இருந்து வருகின்றன. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் ஆர்டிகிள் 370 என்பதே அது. இத்துடன் Delhi Agreement 1952 என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீரின் அரசியல் கட்சிகள் முட்டாள்தனமான சட்டங்களை உருவாக்க முனைந்தால் இந்திய அரசு ஆர்டிகிள் 370ஐ முழுவதுமாக நீக்கி, ஜம்மு காஷ்மீரை மற்ற மாநிலங்களுக்கு ஒப்பாக ஆக்க முயல வேண்டும்.

No comments:

Post a Comment