Friday, June 30, 2006

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006

இன்று நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன மூன்று. ஒன்று சென்னையில் நடக்கும் மஹா கண்காட்சி - ஜனவரி மாதம். அடுத்தது நெய்வேலியில் ஜூன் இறுதி, ஜூலை தொடக்கத்தில் நடக்கும் கண்காட்சி. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடக்கும் கண்காட்சி. ஈரோடு கண்காட்சி தொடங்கியதே கடந்த வருடம்தான்.

நெய்வேலியில் இந்த முறை கண்காட்சி எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. திங்கள் (4 ஜூலை) முதல் நிலக்கரி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு என்.எல்.சி பங்குகளில் 10% பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்.

மத்திய அரசு பின்வாங்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளது. ஆனால் திமுக முதலான தோழமைக் கட்சிகளும் இந்த விற்பனையை எதிர்க்கின்றன. திமுக யூனியன்தான் என்.எல்.சியில் பெரிய யூனியன்.

வேலை நிறுத்தம் காரணமாக புத்தகக் கண்காட்சியை மாற்றவேண்டியிருக்கலாமோ என்ற எண்ணம் கடைசிவரை இருந்து, பின்னர் நடத்திவிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கிழக்கு பதிப்பகம், கண்காட்சி வளாக முகப்பு வளைவை ஸ்பான்சர் செய்துள்ளது.

கிழக்கு விற்பனை ஸ்டால்கள் எண் 114-115 ஆகிய இடங்களிலும் சிறப்பு ஸ்டால்கள் (வங்கி, மின்சார வசதி செய்வோர் ஆகியோர் இருக்கும் பகுதி) வரிசையில் மற்றுமோர் இடத்திலும் உள்ளது.

நான் 8-9 ஜூலை சமயத்தில் நெய்வேலி செல்வேன். திரும்பி வந்தபின் கண்காட்சி பற்றிய பதிவை எழுதுகிறேன்.

சென்ற இரண்டு வருடப் பதிவுகள்:

மாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005

11 comments:

  1. நம்ம ஊர் என்றவுடன் ஒரு தனிப்பாசம் வந்து விடுகிறது :-)))

    எழுதுங்கள்...காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. இந்த வருடம் ஈரோடு கண்காட்சி பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துவிட்டனவா? சசியிடம் கடன்வாங்கி, "நம்ம ஊர் என்றவுடன் ஒரு தனிப்பாசம் வந்து விடுகிறது :-)))"

    ReplyDelete
  3. நெய்வேலி புத்தக கண்காட்சியை ஒட்டி என்னென்ன புத்தகங்கள் உங்களது பதிப்பகத்தில் வெளியிடப்படுகின்றன என்கிற தகவல்கள் எங்கே கிடைக்கும்?

    ReplyDelete
  4. செல்வராஜ்: ஈரோடு கண்காட்சி ஆகஸ்ட் 5-15, 2006 சமயத்தில் நடக்க உள்ளது. இம்முறை கல்யாண மண்டபத்தில் அல்ல. வ.உ.சி பூங்காவில் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டைவிட அதிகமான அளவுக்கு பதிப்பகங்களும் விற்பனையாளர்களும் பங்கேற்க உள்ளனர் என்று அறிகிறேன்.

    ReplyDelete
  5. பாலமுருகன்: கிழக்கு மாதா மாதம் 12-16 புத்தகங்கள் வெளியிடுகிறது. நெய்வேலி ஸ்பெஷல் என்று இல்லை; ஒவ்வொரு மாதமுமே நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. விரைவில் நாங்கள் வெளியிடும் புத்தகங்களுக்காக ஒரு RSS செய்தியோடை தர உள்ளோம்.

    கடந்த மூன்று மாதங்களில் வெளியான புத்தகங்கள் பற்றி இங்கு அறிந்துகொள்ளலாம்.

    சில குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள் என்று நான் கருதுபவை:

    1. சிங்கப்பூர் வரலாறு
    2. கூகிள் கதை
    3. ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை
    4. தமிழக முதல்வர் மு.கருணாநிதி வாழ்க்கை
    5. லட்சுமி மிட்டல் வாழ்க்கை
    6. திபெத் சீனாவில் பிடியில்
    7. நேபாள் மன்னராட்சியிலிருந்து விடுபட்டது பற்றிய வரலாறு
    8. ரஷ்யப் புரட்சி
    9. சுப்ரமண்ய ராஜு கதைகள்
    10. சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், என்.எஸ்.கிருஷ்ணன், சோனியா காந்தி வாழ்க்கை வரலாறுகள்
    11. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி நாவல்கள் சில

    ReplyDelete
  6. சிவராமன்: நன்றி. சரி செய்து விட்டேன். நாங்கள் இதுவரை குழந்தைகளுக்கு என்று எந்தப் புத்தகத்தையும் வெளியிட்டதில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் - தனித்தனியாக - குழந்தைகளுக்கு படங்கள் நிறைய வருமாறு புத்தகங்கள் கொண்டுவருவோம்.

    இது தொடர்பான என் முந்தைய பதிவு இங்கே.

    ReplyDelete
  7. கண்காட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் பத்ரி.

    ராம்கியின் புத்தகம் வெளிவந்தது செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. 1) கிழக்கு பதிப்பகப் புத்தகங்கள் சிங்கப்பூரில் எங்கு கிடைக்கும் ?
    Nowhere in Serangoon rd, they are found yet.

    2) தவிர, NLB நூலகங்களிலும் தங்கள் புத்தகங்கள் காண்பதற்கு அரிதாக உள்ளதே, ஏன் ?
    Given that NLB is known for its quality book selection, perhaps its tamil section is not still aware of your publications.

    ReplyDelete
  9. அனான்: கிழக்கு புத்தகங்கள் இந்தியாவுக்கு வெளியே எந்தெந்த நாடுகளில் எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்று எங்களால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. சில ஏற்றுமதியாளர்கள் சென்னையில் புத்தகங்களை எங்களிடமிருந்து வாங்குகிறார்கள். ஆனால் எந்தெந்த நாடுகளுக்கு அவற்றை அனுப்புகிறார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைப்பதில்லை.

    இந்த வருடம் வெளிநாட்டுச் சந்தையை கொஞ்சம் கவனிக்க உள்ளோம். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா என்று பல நாடுகளிலும் குறிப்பிட்ட இடங்களில் புத்தகங்கள் கிடைக்குமாறு செய்ய உள்ளோம்.

    சிங்கப்பூர் நூலகத்தில் எங்களது புத்தகங்களை வாங்குகிறார்கள். அவர்கள் புத்தகம் வாங்கும் விதம் பற்றி எங்களுக்கு சரியாகத் தெரியாது. எந்தப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எவற்றை விட்டுவிடுகிறார்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக வாங்குகிறார்கள். சிங்கப்பூர் நூலகத்தில் எவ்வாறான டிஜிட்டல் தேடல் வசதி உள்ளது என்று எனக்குத் தெரியாது. பதிப்பகம் வாயிலாகத் தேடமுடியுமா என்று தெரியவில்லை.

    என் கணக்கின்படி எங்களது 140 புத்தகங்களில் 50க்கும் மேற்பட்டவை சிங்கப்பூர் நூலகத்தில் உள்ளது.

    ReplyDelete
  10. இன்றைய தமிழ் முரசில் புத்தக கண்காட்சி பற்றிய செய்தி வந்துள்ளது ..குறிப்பாக கிழக்கு பதிப்பகம் பற்றி..

    http://epaper.tamilmurasu.in/2006/July/03/disp.asp?i=4_8

    ReplyDelete
  11. பத்ரி,

    தகவலுக்கு நன்றி.

    சிங்கை தேசிய நூலகவாரியத்தின்
    தேடுபொறி...

    தமிங்க்லீஸில் இருந்து சமீபத்தில்தான் யுனித்தமிழுக்கு மாறிவருகிறார்கள். அதனால் தமிழிலும் தேட இயல்கிறது.

    உதாராணத்திற்கு எனக்குப் பிடித்த:
    வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் மேற்கோள் நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது!

    ReplyDelete