Friday, June 02, 2006

கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

முன்னெச்சரிக்கை: இந்தக் கட்டுரை 'சுதேசி செய்திகள்' என்ற பத்திரிகைக்காக (ஜூன் 2006) எழுதப்பட்டது. சுதேசி செய்திகள், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச்) என்னும் இயக்கத்தால் நடத்தப்படுவது. இந்த அமைப்பு RSS இயக்கத்தின் குடைக்குள் வருவது.

கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

கடந்த ஆறு வருடங்களில் நடக்காத ஒன்று இந்த வருடம் நடந்துள்ளது; மேலும் நடக்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து 3.5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. மேற்கொண்டு கிட்டத்தட்ட 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப்போகிறது.

திடீரென நம் நாடு குறைவான அளவு உணவை உற்பத்தி செய்கிறதா? ஏன் கோதுமையை வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்?

இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது, கோதுமை பயிரான அளவு கடந்த வருடத்தில் குறைந்துள்ளது என்பது. அதிக வெப்பத்தாலும் சரியான மழையின்மையாலும் ராபி பயிர் கிட்டத்தட்ட 10-15% குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இரண்டாவது மத்திய அரசின் கோதுமை கொள்முதல் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ளது என்பது. பொதுவாக மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வார்கள். ஆனால் கடந்த வருடத்தில் கோதுமையை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அரசு விவசாயிகளுக்கு அனுமதி கொடுத்தது. மத்திய அரசு கொள்முதல் விலையாக முதலில் நிர்ணயித்திருந்தது கிலோவுக்கு ரூ. 6.50. பின்னர் இந்த விலையை அதிகரித்து கிலோவுக்கு ரூ. 7.00 கொடுக்க முன்வந்தனர். விவசாயிகளுக்கோ வெளிச்சந்தையில் கிலோவுக்கு ரூ. 8.70 முதல் ரூ. 10.00-ம் அதற்குமேலும் கிடைத்தது. கார்கில், ஐ.டி.சி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இத்தகைய விலை கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியுள்ளனர். ஒருவிதத்தில் இதனால் விவசாயிகளுக்கு லாபம் என்றாலும்கூட இந்தக் காரணத்தால் அரசு எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்யமுடியவில்லை.

ஜனவரி 2002-ல் மத்திய அரசின் கையில் இருந்த கோதுமையின் அளவு 324.15 லட்சம் டன் கோதுமை. இது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. ஜனவரி 2003-ல் 288.30 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2004-ல் 126.87 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2005-ல் 89.31 லட்சம் டன்னாகவும் இருந்து இப்பொழுது ஜனவரி 2006-ல் 62.00 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

எப்படி இந்த அளவுக்கு கையிருப்பு குறைவதற்கு நம் அரசு அனுமதித்தது? உற்பத்தி கடந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா? உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது? இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா? இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே? இப்படி நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோன்றுகின்றன.

மூன்றாவது - உணவு அமைச்சர் சரத் பவாரின் கூற்றுப்படி தென்னிந்தியாவில் கோதுமை முன்னில்லாத அளவுக்கு உட்கொள்ளப்படுகிறதாம். இப்பொழுது இறக்குமதி செய்யப்படும் கோதுமை முழுவதும் தென்னிந்தியாவுக்காகத்தான் என்கிறார் உணவு அமைச்சர். அத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை நேரடியாக தென்னிந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் கொள்முதல் விலை குறைகிறது என்றும் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக கோதுமையைக் கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு - அதாவது நூறு கிலோவுக்கு - ஆகும் செலவு ரூ. 997. ஆனால் வட இந்தியாவிலிருந்து கோதுமையை தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்தால் அதற்கு ஆகும் செலவு குவிண்டாலுக்கு ரூ. 1,100க்கும் மேல் ஆகலாமாம். ஆக இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு சற்று அதிகம் பணம் கிடைப்பதைவிட ஆஸ்திரேலியாவுக்குப் பணம் போனால் போகட்டும் என்கிறார் நம் உணவு அமைச்சர். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

இந்திய விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள். குவிண்டாலுக்கு ரூ. 700 கொடுத்து வட இந்தியாவில் வாங்கும் கோதுமையை தென்னிந்தியாவுக்கு அனுப்ப ரூ. 400க்கும் மேலாகவா ஆகிறது? மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன? தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா? உண்மையில் என்ன நடக்கிறது?

மற்றொருபக்கம் மத்திய அரசின் அரிசி கொள்முதல் அதிகமாகியுள்ளதாக பிசினஸ்லைன் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

Conspiracy theory என்று சொல்வார்கள். சிலர் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லலாமா? அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்துக்கொள்வோம். இவை தேவைக்கும் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்கின்றன. சொல்லப்போனால் அமெரிக்கா தனது விவசாயிகளை உற்பத்தியைக் குறைக்கச் சொல்லி - அதாவது பயிரிடும் பரப்பளவைக் குறைப்பது, உற்பத்தி செய்த தானியங்களை அழிப்பது ஆகியவற்றின்மூலம் - அவ்வாறு குறைப்பதற்காக இவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது. ஏனெனில் இவர்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்வது அனைத்தும் பொதுச்சந்தைக்கு வந்தால் அதனால் உணவுப்பொருள் விலை வெகுவாகக் குறையும். இது அந்த நாட்டின் சிறு விவசாயிகளை ஒரேயடியாக அழித்துவிடும்.

சரி, அதையும் மீறி உருவாக்கிய மலைபோன்ற தானியங்களை என்ன செய்வது? எந்த விலை கிடைத்தாலும் அந்த விலையை வாங்கிக்கொண்டு உணவுப்பொருளை வேறு நாடுகளுக்கு விற்றுவிடவேண்டியதுதான்!

பின் என்ன ஆகும்? முதலில் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று இந்தியா வெளிநாட்டு உணவுப்பொருளை வாங்கும். இதே நேரம் சரியான விலை கிடைக்காமல் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்; சிறிதுசிறிதாக விவசாயத்தை விட்டு வெளியேறி பிற வேலைகளுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்தியா பெருமளவுக்கு அல்லது முழுதாக வெளிநாட்டில் விளையும் உணவுப்பொருளை நம்பி வாழவேண்டி இருக்கும். அப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோதுமை விலையை அதிகரித்துக்கொண்டேபோனால் உயிர்வாழ்வதற்காக என்ன விலை கொடுத்து தானியங்களை வாங்கினாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும். இப்பொழுது பெட்ரோலியத்துக்கு முழுவதுமாக வெளிநாட்டை நம்பியிருப்பதுபோல நாளை கோதுமைக்கும் வெளிநாட்டை நம்பியிருக்கவேண்டியிருக்கலாம்.

இதை மனத்தில்கொண்டே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டுபோவதும் மற்றொரு பக்கம் குறைந்த விலையில் கோதுமையை இந்திய அரசுக்கு விற்பனை செய்வதுமாக இருக்கலாம். இப்படியும்கூட ஒரு conspiracy theory இருக்கலாம்.

நமது கற்பனை பொய்யாக இருந்தால் நல்லது. உண்மையாக இருந்தால்?

வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. ஆஸ்டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது என்று பேசப்பட்டது. பின அரசு அவசர அவசரமாக எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொண்டது. டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கோதுமையில் இந்தியாவில் இல்லாத சில களைகளும் (weeds) பூச்சிகளும் (pests) உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பூச்சிகளும் களைகளும் இந்தியாவில் பரவினால் வரும் வருடங்களில் பயிராகும் கோதுமைக்குப் பெருமளவு பாதிக்கப்படும்!

இந்தப் பிரச்னையிலிருந்து மீள அரசு என்ன செய்யலாம்?

1. வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களை இந்தியாவில் கோதுமை, அரிசி போன்ற பொருள்களை வாங்குவதில் இருந்து முழுமையாகத் தடை செய்யலாம். இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கலாம்.

2. வெளிநாட்டுக்குப் பணம் போவதற்கு பதிலாக இந்திய விவசாயிகளுக்கே போய்ச்சேருமாறு அதிக விலை கொடுத்து அரசே அவர்களிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யலாம். அதன்மூலம் கோதுமைக் கையிருப்பை அதிகமாக்கலாம். இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகமாகும், அவர்களது வாழ்வும் வளம்பெறும்.

3. நியாயவிலைக் கடைகளில் வறுமைக்கோட்டுக்குக்கீழே இருப்பவர்கள்தவிர பிறருக்கான கோதுமை விற்பனை விலையை அதிகரிக்கலாம். இன்றைய தேதியில் உணவுப்பொருளுக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இன்று நாம் போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிறவற்றுக்கும் செலவு செய்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மேலே போய்க்கொண்டே இருக்கிறது!

4. கோதுமை, அரிசி இரண்டின் கொள்முதலையும் பொருத்து மக்களை இரண்டு தானியங்களையும் உண்பதற்குப் பழக்கப்படுத்தலாம்.

மொத்தத்தில் பிற நாட்டிலிருந்து உணவுப்பொருளை இறக்குமதி செய்வதன்மூலம் நம் நாடு அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் உடனடியாகச் செய்யவேண்டும். இப்பொழுது உள்ளே வந்திருக்கும் 3.5 லட்சம் டன் கோதுமைக்கு மேலாக 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யாமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்.

தடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவிடும். அதுவும் staple food என்று சொல்லப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் இறக்குமதி செய்வது நம்மை மொத்தமாக அழிவை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.

3 comments:

  1. //ஆஸ்டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது//
    அது மட்டுமில்லை பத்ரி, அவர்களே. ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று வகையான கோதுமைகளை ஏற்றுமதி செய்கின்றார்கள். அவற்றில் இரு வகையான கோதுமைகள் தரத்தில் மிகவும் பின் தங்கிய கோதுமைகள். இந்திய அரசு இந்த மூன்றில் எந்த வகையான கோதுமை இறக்குமதி செய்கின்றது என தெரியவில்லை.

    ReplyDelete
  2. Very Good article .

    "தடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவிடும்."

    110% true....I am afraid that indian agriculture industry will go in drain.I don't know whether you are aware, In middle of 90's or later part of 90's there was similar problem in coffee business.(no import involved, but there was price hike). so your conspiracy theory might be true...

    with best
    CT

    ReplyDelete
  3. There is already a big scam under investigation in Australia reg the "food for oil program" involving selling wheat to Iraq.

    Australia is more than eager to shift off the surplus wheat where ever they can

    ReplyDelete