Tuesday, July 08, 2008

அணுவின்றி அவனே கிடையாது

(சும்மா, பொருள்முதல்வாதி வைத்த தலைப்புன்னு வெச்சுக்கங்க...)

மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பயங்கர தடுமாற்றத்தில் உள்ளது. அவர்கள் பதவியேற்ற தினத்திலிருந்தே குழப்பம். அப்போதே சமாஜவாதி கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதைப்பற்றி நான் அப்போதே எழுதியிருந்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் இடதுசாரிகளின் “வெளியிலிருந்து ஆதரவு” என்பதை ஏற்றுக்கொண்டு நான்கு வருடங்கள் அல்லாடினார்கள்.

பிரகாஷ் காரத், மாமூல் வாங்கும் பேட்டை ரவுடி கணக்காக சும்மா சும்மா வந்து மிரட்டுவார். அவருக்கு (லால்) சலாம் போடவேண்டிய வேலை பிரதமருக்கு. “அட, போய்யா, நீயும் உன் ஆதரவும்” என்று அப்போதே சொல்லியிருக்கவேண்டும்.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கையில் ஆயிரம் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் கேபினெட்டைப் பொருத்தமட்டில் இரண்டே இரண்டுதான்: (1) முன்னேறி உடன்படிக்கையில் கையெழுத்திடுவோம் (2) தூக்கிக் கடாசிவிட்டு அடுத்த தேர்தலில் ஜெயிக்கும் வழியைப் பார்ப்போம்.

இரண்டும் இல்லாமல் வழவழா கொழகொழாவென்று இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மனத்தை மாற்றமுடியும் என்று காங்கிரஸ் ஏன் நினைத்ததோ தெரியவில்லை.

இன்று காலம் கடந்துவிட்டது. சமாஜவாதி துணை இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தேவையில்லை. ஆனால் அது நடப்பதற்குமுன் ஆட்சி கவிழாமல் காப்பாற்றத் தேவை. அது இப்போது கிடைத்துவிட்டது. இனி இடதுசாரிகளின் துணை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஆனாலும் நேஷனல் ஜோக்கர்களான கம்யூனிஸ்டுகள் 10-ம் தேதி, 7-ம் தேதி, 23-ம் தேதி என்று மாற்றி மாற்றி கெடு வைக்கிறார்கள்.

பாஜக ஒரு வெட்கம் கெட்ட கட்சி. எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சி கொண்டுவரும் அத்தனை தீர்மானங்களையும் எதிர்க்கவேண்டும் என்பதில்லை. பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி நடக்கிறது என்று கொஞ்சம் எட்டிப்பார்த்தால் நல்லது. அணு ஒப்பந்தத்தை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் வேறு மாதிரி மாற்றுவோம் என்கிறார்கள். அதுவும் தங்களின் ஆட்சியின்போது தாங்கள்தான் செய்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணம்வேறு. இவர்களது “தேசப் பற்று” தாங்கமுடியவில்லை.

***

இந்த விஷயத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எனது வந்தனங்கள். தனது கருத்தைத் தெளிவாக அவர் சொல்கிறார். முன்னாள் ஜனாதிபதிகள் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என்று சிலர் நினைப்பது தவறு. தேசத்தின் நலனுக்கு எது தேவை என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் தவறில்லை. சமூக, பொருளாதார விஷயங்களில் எப்படியோ, ஆனால் தொழில்நுட்பம் தொடர்பான அவரது கருத்துகளுக்கு எப்போதும் கனம் அதிகமாக இருக்கும்.

இந்தியாவுக்கு யுரேனியம் தேவை என்பது தெளிவு. தோரியம் ரியாக்டர்கள் வெகு தொலைவில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை எகிறிக் குதிக்கத்தான் செய்யும். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அணு மின்சாரம் மிக மிக அவசியம்.

விரைவில் நாட்டில் மெட்ரோ ரயில்கள் பல நகரங்களிலும் ஓடும். மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், ரேவா கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் கிடைக்கும். (நான் ஒரு மின்சார இருசக்கர வாகனம், ஒரு மிதிவண்டி ஆகியவற்றில் முதலீடு செய்யப்போகிறேன்.) இவற்றுக்கான மின் தேவையையும் புதைபடிவ எரிபொருள் அன்றி, அணு சக்திமூலம் பெறமுடியும் என்றால் அதனால் நாட்டுக்குப் பல நன்மைகள். ஆயில் ஷாக் குறையும். காற்றின் தூய்மை அதிகரிக்கும். பசுமைக் குடில் வாயுத் தொல்லை பெருமளவு குறையும். மிக மிகக் குறைவான கதிர்வீச்சு எரிபொருள் மிச்சத்தை எதிர்கொள்ள தொழில்நுட்பங்கள் உருவாகும். இது எதிர்கொள்ளக்கூடிய சவாலே.

***

ஒரு நண்பர், ஞாநியின் ஆர்குட் விவாதத் தளத்திலிருந்து கேள்வி ஒன்றை எடுத்துக் கேட்டிருக்கிறார்.
This following is gnani's response:

"badri's responses still do not answer the core issues i have raised. i dont differentiate between UN, IAEA and american government. The Iraq war for non existent weapons was unleashed by BUsh and Co only with UN sanction. IAEA, UN etc are dummies and puppets of the US government today. There is no equality in our deal with US while they respect their congress and senate, our PM is not giving similar status to our parliament. And the core claim of nuclear power being necessary for our energy needs itself is bogus. even after 30 years, it cannot supply even 10 percent of our electricity needs while thousands of crores will be spent on an unsafe technology."

what do you say here ?
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் சரிசமமான ஒப்பந்தம் கிடையாதுதான். நாம் கையேந்தும் நிலையிலும் அவர்கள் கொடுக்கும் நிலையிலும் உள்ளனர். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் பிற நாடுகள் (Nuclear Supplies Group) நமக்கு சிறு துரும்பும் கொடுக்கமாட்டா. எனவே நாம் சற்றே அடங்கிப்போய் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அடுத்ததாக இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்க செனேட்டுக்கு இருப்பதுபோல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த “மரியாதையும்” கிடையாது என்கிறார் ஞாநி. இதில் அமெரிக்காவைக் குற்றம் சொல்லமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், இந்தியா எந்த வெளிநாட்டுடனும் ஒப்பந்தம் செய்துகொள்ள, நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரவேண்டியதில்லை. கேபினெட் முடிவுசெய்தால் போதும். இது, அணு ஒப்பந்தம் தொடர்பான விஷயமில்லை. ஆஸ்திரேலியாவிடமிருந்து யுரேனியம் வாங்குவதற்கு மட்டுமல்ல, பபுவா நியூ கினியிடமிருந்து கோதுமை வாங்கினாலும்சரி, கஸக்ஸ்தானிடமிருந்து சிட்டுக்குருவி லேகியம் வாங்கினாலும்சரி, அப்படித்தான். எனவே அதை மாற்றவேண்டும் என்றால் அதற்கு வேறு எங்காவது போகவேண்டும். (அதற்குப் பெயர் Constitutional Amendment.)

பாதுகாப்பற்ற தொழில்நுட்பம், 10% மின்சாரம்கூடக் கிடைக்காது, அணு மின்சாரம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தேவையில்லை போன்றவற்றுக்கு பதில் சொல்வது கடினம். ஒருவரது நம்பிக்கைகளை ஓரளவுக்குத்தான் விவாதங்களின்மூலம் மாற்றமுடியும்.

***

புஷ் என்ற ஈராக் கொலைகாரன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருக்கிறார் என்பதனாலேயே அமெரிக்க நாட்டுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எல்லாம் மோசமானவை என்றாகிவிடாது.

இந்த ஒப்பந்தத்தைச் செய்வதன்மூலம் நாம் அமெரிக்காவின் அடிமைகள் ஆகிவிடுவோம் என்பதும் கேலிக்கூத்தான ஒரு வாதம்.

25 comments:

  1. //
    புஷ் என்ற ஈராக் கொலைகாரன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருக்கிறார் என்பதனாலேயே அமெரிக்க நாட்டுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எல்லாம் மோசமானவை என்றாகிவிடாது.
    //

    அமேரிக்கா என்பது காக்டெயில் காம்யூனிஸ்டுகளின் Favorite punching bag. அத்துடன் ஈராக்கில் போர், இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்வதால் இஸ்லாமிய எதிரி என்றாகிவிட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின், போலி செக்குலர்வாதிகளின் வோட்டு வங்கிகள் இந்திய இஸ்லாமியர்கள். இந்திய இஸ்லாமியர்கள் 100க்கு 90 பேர் என்றுமே தாய் நாடு என்றெல்லாம் எண்ணியதே இல்லை. அவர்களுக்கு மக்கா சவுதி அரேபியா, அது தான் புன்னிய பூமி, அதற்குப் பிறகு ஒன்றும் கிடையாது. எல்லா பூமிகளும் பாவ பூமிக்களே. இத்தகய இஸ்லாமிய அடிப்படைவாதமும் ஏழைகளை ஏழைகளாக வைத்திருக்க உதவும் கம்யூனிச அடிப்படைவாதமும் சேர்ந்து இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படுவதில் துளியும் ஆச்சரியம் இல்லை.

    Both (commies and islamists) have a long history of treason and betrayal of trust.

    ReplyDelete
  2. Hello Badri,
    I have read your response to nuclear deal. I opened a thread in Orcut and got some response. One of the menbers cited your response to Gnani so i visited. I almost understood the deal but still have some question.
    This link http://www.thehindu.com/2006/12/16/stories/2006121616171500.htm in Hindu says something against to the deal. One thing i would like to mention is nuclear test. If india goes for nuclear test, then the deal come to end, could cause serious loses to India.
    Nuclear bomb is the only weapon we have against China and Pakistan etc.
    Which is important? nations defense or power?

    ReplyDelete
  3. //
    If india goes for nuclear test, then the deal come to end, could cause serious loses to India.
    //

    The trick here is to do the test and have the deal as well. If we indians are not given the priority then the axis of Terrorist harboring states will get nuclear arsenal and destroy the allied forces.

    How well can indian government negotiate it is the key.

    ReplyDelete
  4. கிருஷ்:

    1. தி ஹிந்து ஆரம்பத்தில் அணு ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. சுமாரான பாராட்டுடன் ஒரு தலையங்கம் வந்தது. திடீரென்று “அவர்களது மேலிடத்தில்” இருந்து ஏதோ ஆணை வர, அடுத்து கடுமையாகத் திட்டி ஒரு தலையங்கம் வந்தது.

    2. அணு ஆயுத சோதனை: அணு ஆயுத நாடுகள் என்று சில நாடுகள் தங்களுக்குள்ளாக ஒரு கிளப்பை ஏற்படுத்தி அதில் வேறு யாரையும் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்கின்றன. இந்தியா அந்த கிளப்புக்கு வெளியே உள்ளது. இந்தியா Nuclear Non-proliferation Treaty-ஐ ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்தியா அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டால், இந்தியாவுக்கு யுரேனியம் தருவதை நிறுத்திவிடுவோம் என்று அமெரிக்காவும் பிற நாடுகளும் சொல்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயம் எனக்குப் புரிகிறது. இந்தியா சிறிது ஆண்டுகளுக்கு அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடவேண்டியதில்லை. இப்போது இந்தியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள், சீனா/பாகிஸ்தான் அபாயத்திலிருந்து காக்கப் போதுமானவை.

    நாளடைவில் அணு ஆயுதச் சோதனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது யுரேனியத்தின் தேவையை வேறு இடத்திலிருந்து பூர்த்தி செய்துகொள்ளும் நிலையை இந்தியா அடையவேண்டும்.

    3. எது முக்கியம்? இந்தியாவின் பாதுகாப்பா? மின்சாரமா?

    இதற்கான பதில் - ஒரு பேலன்ஸ் வேண்டும் என்பதுதான். இன்று இந்தியாவின் பாதுகாப்பு, அபாயத்தில் இல்லை. ஆனால் இந்தியாவின் கிராமங்களில் மின்சார வசதி இன்று எத்தனையோ வீடுகள் இருளில் மூழ்கி இருக்கின்றன. படிக்கமுடியாத குழந்தைகளின் வாழ்வை நினைத்துப்பாருங்கள். விவசாயிகளின் விலைபொருள்கள் அழுகிப்போகின்றன. விவசாயத்துக்குத் தேவையான மின்சாரம் இல்லை. இன்று மின்சக்தி, உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்த நிலையில் இருக்கிறது. எனவே அணு மின்சாரம் அவசியம் என்கிற கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் என்பது என் நிலைப்பாடு.

    ReplyDelete
  5. Hello Badri,
    Power is very important for growth. I do agree. There should be a compromise between these two. We need to develop indigeniuos technology. Thats the only solution. BUt not feasible now.
    Anyway, lets see what happens. By the way, i found your blog very interesting. Thank you for posting all these stuffs in tamil.
    by
    Gopala krishnan

    ReplyDelete
  6. இந்தியா அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டால், இந்தியாவுக்கு யுரேனியம் தருவதை நிறுத்திவிடுவோம் என்று அமெரிக்காவும் பிற நாடுகளும் சொல்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயம் எனக்குப் புரிகிறது.

    Yendha நியாயம் ?

    Nuclear bomb is the only weapon we have against China and Pakistan

    Sirripu dhaan varudhu ! How would a nuclear bomb save you from pakistan ? By doing the nuclear tests, we made sure that we are in the same footing with pakistan. Our conventional weapons and our military is probably 5 times superior to pakistan's. And by going through the nuclear exercise, we made sure that we are not superior anymore. But we are worried about china's threat too. So, that was our best time to go nuclear !

    mani

    ReplyDelete
  7. dear Badri,
    I have read ur article reg rights agreement in ur blog – “anuvinnri avanee kidayathu”. u wrote, to get electrical power we must move to that agreement. ok. wat abt the radio active waste. That should be preserved for 10,000 years. how it will be disposed without harming nature and human being.

    We can get electric power from atomic reactors. What abt accidents like Chernobyll in USSR on 1986. if any accident happens in kalpakkam atomic reactor, what will happen. Whole chennai will be blasted off. To get 10% of electricity, why we should take that much costlier and deadliest move. We have enormous natural resources. We can get electricity from sea water, wind and solar energy. They are eco friendly and cost effective. Why govt didnt concentrate on that. That’s also politics.

    Like that we allowed green revolution in earlier 80's. What happened? Our land, water and food were poisoned. Farmers became poor and committed suicides. Only manufacturer of fertilizers and pesticides - became billionaire. DDT was banned in US in 1972. But still we are using that pesticide. Now, they are talking abt organic farming, what we did thousands of years earlier. now they are buying organic foods from us.

    From nuclear fission, we are getting atomic waste. Why we should not try for nuclear fusion what is happening in SUN. (2 He ions = 1 H2 ion). Why we didn’t make any research in nuclear fusion. In that there no atomic waste. Being IITian, pl find solution for above problems. it's most unfortunate that great scientist like abudul kalam is favouring atomic power without weighing the hazards to the nature.

    p.s: I am reading articles in your blog regularly. They are thought provoking. I am not good in English. Please, think about my views and arrange for county wide debate for this. If we disturb the nature, definitely it will pay back the same coin to us (as chaos theory). I am eagerly waiting for your reply.

    Thanking you,

    S.Ravichandran

    ReplyDelete
  8. Mani,

    //Yendha நியாயம் ?//

    நமது பயங்களைப் பற்றி நமக்கு யுரேனியம் விற்பவர்கள் கவலைப்படவேண்டியதில்லை. அவர்களுக்கு என்று சில கொள்கைகளை அவர்கள் வகுத்துக்கொள்ளலாம். அதாவது யார் ஒருவர் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுகிறார்களோ அவருக்கு நான் அணு மின்சாரம் தயாரிக்க யுரேனியம் விற்கமாட்டேன்... என்று. அந்தக் கொள்கையை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது - அது என் நாட்டுக்கு எதிரானதாக இருந்தாலும்.

    இதனைப்பற்றி முன்னர் ஒரு பதிவில் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் பற்றி எழுதும்போது குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  9. பத்ரி,

    வருங்காலத்தில் மின்சாரம் அனுசக்தி மூலமே குறைந்த செலவில் பெற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    செர்பினோபில் விபத்தில் இறந்தவர்களை விட தமிழகத்தில் வருடா வருடம் பாம்பு கடித்து இறப்பவர்கள் அதிகம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

    விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அனுசக்தியினால் ஏற்படும் பாதிப்பு அதிகம் தான். ஆனால் அதை விட அதிகம் பாதிப்பு (இன்றைய) கூவத்தினால் என்று தெரியுமா.

    பாதுகாப்பு பயம் என்றால் ஊரில் எந்த இரசாயண தொழிற்சாலையும் இருக்க கூடாது

    ஏன் சார், திருப்பூர் சாயப்பட்டறைகள் மற்றும் இங்குள்ள இராசாயண தொழிற்சாலைகளில் வெளியேரும் கழிவுநீரை விட அனு உலைகள் ஆபத்து என்பது நகைச்சுவை. போபால் யூனியன் கார்பைட் அனு உலையா ???

    பெட்ரோலுக்கும் டீசலுக்கும் செலவழிக்கப்போகும் பணத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.

    வருங்காலத்தில் வாகனங்கள், தொடர்வண்டிகள் முழுவதும் மின்சாரத்தால் ஓடினால் தவிர நமது பொருளாதாரம் முன்னேறாது.

    அந்த மின்சாரம் சூரிய ஒளி, காற்று, நீர் (நீர்தேக்கம்) மற்றும் அனு சக்தி மூலம் பெற்றால் மட்டுமே தப்பிக்க முடியும். நிலக்கரி எல்லாம் அட்சய பாத்திரம் அல்ல

    ReplyDelete
  10. Dear Badri,

    அணு ஒப்பந்தம் பற்றியும் அரசியல் நிலை பற்றியும் மிக தெளிவாக சொல்லியிருக்கிறாய் ... நான் உங்கள் ப்ளோகை நாள் தோறும் படித்து வருபவன் .
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. நமது பயங்களைப் பற்றி நமக்கு யுரேனியம் விற்பவர்கள் கவலைப்படவேண்டியதில்லை. அவர்களுக்கு என்று சில கொள்கைகளை அவர்கள் வகுத்துக்கொள்ளலாம். அதாவது யார் ஒருவர் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுகிறார்களோ அவருக்கு நான் அணு மின்சாரம் தயாரிக்க யுரேனியம் விற்கமாட்டேன்... என்று. அந்தக் கொள்கையை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது - அது என் நாட்டுக்கு எதிரானதாக இருந்தாலும்

    I too understand it badri. Gnyamam irupadhaaga theriyavillai yendru dhaan naan sonnen. ( from the perspective of a developing country )

    Do you know of any software that i can use to type in tamil without having the need to install it in my machine. Please let me know if you know any.

    mani

    ReplyDelete
  12. வருங்காலத்தில் மின்சாரம் அனுசக்தி மூலமே குறைந்த செலவில் பெற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் அதற்காக அமெரிக்காவுடன் ஓப்பந்தம் தான் ஒரே வழியா என்று தெரியவில்லை.
    --
    நாட்டு நலனுக்காக இந்த ஒப்பந்தம் என்று டாலரை சரிபடுத்த ரூபாயின் மதிப்பை குறைத்தவர்கள் கூறினால் யார் நம்புவார்கள்

    --
    அமேரிக்கா பிடிக்க வில்லை என்பதற்காக அனுமின்சாரத்தை பொதுவாகவே எதிர்க்க வேண்டும் என்பதில்லை. (இந்த தவறை பலரும் செய்கிறார்கள் - ஊடகங்கள் உட்பட)

    அனுமின்சாரம் தேவை என்பதற்காகவே அமேரிக்கா ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்என்பதில்லை. (நீங்கள் இந்த நிலையா ??)
    --

    ReplyDelete
  13. //Do you know of any software that i can use to type in tamil without having the need to install it in my machine. Please let me know if you know any.//

    http://tamil99.org/

    ReplyDelete
  14. //நமது பயங்களைப் பற்றி நமக்கு யுரேனியம் விற்பவர்கள் கவலைப்படவேண்டியதில்லை. அவர்களுக்கு என்று சில கொள்கைகளை அவர்கள் வகுத்துக்கொள்ளலாம். அதாவது யார் ஒருவர் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுகிறார்களோ அவருக்கு நான் அணு மின்சாரம் தயாரிக்க யுரேனியம் விற்கமாட்டேன்... என்று. அந்தக் கொள்கையை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது - அது என் நாட்டுக்கு எதிரானதாக இருந்தாலும்
    //

    அனைவரும் அந்த கொள்கை உடையவர்கள்தானா.

    அப்படி கொள்கை இல்லாதவர்களே கிடையாதா.

    யூரேனியம் தேவை என்பதை மறுக்க வில்லை

    யூரேனியம் தேவையென்றால் அதை பெறுவதற்கு வேறு வழியே கிடையாதா என்பது தான் மையக்கேள்வி

    ReplyDelete
  15. //Do you know of any software that i can use to type in tamil without having the need to install it in my machine. Please let me know if you know any.
    http://tamil99.org/
    //

    Here is another:
    http://www.quillpad.in/tamil/

    ReplyDelete
  16. பத்ரி,

    நானும் இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு இடுகை எழுதியிருந்தேன். உங்கள் பார்வைக்கு: http://valaipadhivan.blogspot.com/2008/06/blog-post_9309.html

    அதில் நான் முக்கியமாக அறிய விரும்பியது, NPT எனப்படும் Nuclear Non-proliferation Treaty என்ற ஒப்பந்தத்தைக் குறித்து. தற்போதைய இந்தோ - அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஏறக்குறைய NPTஐ ஒப்புக்கொண்டது போலத்தான். ஏனென்றால், நாம் ஒரு அணு ஆயுத சோதனை நடத்தினாலும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகி விடும் அபாயமுள்ளது. (வாங்கிய யுரேனியத்தைத் திரும்பத் தருமாறும் கேட்கப் படலாம்). நாற்பதாண்டுகளாக NPT என்ற அமைப்பில் சேராமல் இருந்து வந்த நம் கொள்கையை இன்று தாரை வார்கிறோமா, அப்படியானால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல் இதை அவசர கதியில் முன்னெடுத்துச் செல்வதிலுள்ள நேர்மை போன்றவற்றைக் குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete
  17. வாய்ஸ் ஆன் விங்ஸ்: உங்களது பதிவை முன்னரே பார்த்திருந்தேன். இப்போது நீங்கள் இங்கே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மட்டும் பதில்:

    கே 1. 123 ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது, NPT ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகுமா?

    பதில்: இல்லை. NPT ஒப்பந்தப்படி இரண்டேவிதமான நாடுகள்தான் உண்டு. Nuclear Weapons State - அதாவது அணு ஆயுத நாடுகள ஒன்று். இரண்டாவது, அணு ஆயுதம் இல்லாத நாடுகள். தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதால் தங்களை அணு ஆயுத நாடுகள் என்ற குழுவுக்குள் சேர்க்கவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அப்படி சேர்த்துக்கொள்ள பிற அணு ஆயுத நாடுகள் ரெடி என்றால் இந்தியா உடனடியாக NPT-ஐ ஏற்றுக்கொள்ளும்.

    ஆனால் ஏற்கெனவே அணு ஆயுதம் உள்ளதாக அந்தக் குழுவில் உள்ளோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்றவை இந்தியாவை அந்த கிளப்புக்குள் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன. இன்று இந்தியாவைச் செர்ர்த்துக்கொண்டால், நாளை பாகிஸ்தான், இஸ்ரேல், லிபியா, ஈரான், வட கொரியா என்று போய்க்கொண்டே இருக்கும் என்பது அவர்களது வாதம்.

    அணு ஆயுதம் இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியா சேர்க்கப்பட்டால், NPT-யில் இந்தியா கையெழுத்திட்டால், இந்தியா உடனடியாகத் தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவேண்டியிருக்கும். மேற்கொண்டு அணு ஆயுதங்களைத் தயாரிக்கமுடியாது. அணு ஆயுதச் சோதனையைச் செய்யமுடியாது. இதனை இந்தியா ஏற்றுக்கொள்ளாத காரணத்தால்தான் NPT-யில் கையெழுத்திடவில்லை.

    NPT-யில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியம் தரக்கூடாது என்பது Nuclear Supplies Group என்ற அணு எரிபொருள், தொழில்நுட்பம் வழங்கும் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம். எனவே இந்தியா NPT-யில் ஒப்பந்தம் இடாத காரணத்தால் யுரேனியத்துக்கு சிங்கி அடிக்கிறது.

    கே 2: அணு ஆயுதம் வைத்திருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரியும் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகியவற்றின் நிலை என்ன?

    பதில்: இவை திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளன. அணு ஆயுதம் வைத்துள்ளன என்று ஊர்முழுதும் தெரியும். ஆனால் NPT என்ற ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் இவர்களை அணு ஆயுத நாடுகள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவர்களும் NPT-யில் கையெழுத்திடவில்லை.

    கே 3: சரி, அப்படியானால் 123 ஒப்பந்தம் எதற்கு?

    பதில்: இந்தியா NPT-யில் கையெழுத்திடாது என்று அமெரிக்காவுக்குத் தெரியும். ஆனால் அப்படி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாட்டுக்கு யுரேனியம் தந்தால் ஊரில் உள்ள அனைவரும் அமெரிக்காவின் பொறுப்பற்றதனத்தைக் கடிந்துகொள்வார்கள். 123 ஒப்பந்தம் என்பது அமெரிக்கா அணுத் தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை வழங்கும் நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தம். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு 123 ஒப்பந்தம் உள்ளது. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயும் ஒரு 123 ஒப்பந்தம் உள்ளது.

    மேலே சொன்ன இரண்டு நாடுகளும் NPT நாடுகள். அதில் சீனா அணு ஆயுத நாடு. ஜப்பான் அணு ஆயுதம் இல்லாத நாடு. ஆனால் இந்தியாவின் நிலை வேறு. அணு ஆயுதம் வைத்திருக்கும், ஆனால் “அணு ஆயுத நாடு” என்று ஏற்றுக்கொள்ளப்படாத நாடு. எனவே அமெரிக்கா இந்தியாவுடனான 123 ஒப்பந்தத்தை சற்றே கடுமையாகச் செய்துள்ளது. NPT-யில் கையெழுத்திடாவிட்டாலும் வேறு சில கடுமையான ஷரத்துகளைப் பின்பற்றவேண்டும் என்று அமெரிக்கா சொல்லியுள்ளது. இது NPT-யில் கையெழுத்திடாத ஒரு நாட்டுடன் செய்துகொள்ளவேண்டிய ஒப்பந்தம் என்ற காரணத்தால்தான் இவ்வளவு கடுமையாக உள்ளது.

    கே 4: 123 ஒப்பந்தமும் NPT-யில் கையெழுத்திடுவதும் ஒன்றா?

    பதில்: இல்லை. 123 கடுமையாக இருந்தாலும் இந்தியா தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யலாம். அணு ஆயுதச் சோதனையைத்தான் செய்யமுடியாது. அப்படிச் செய்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தைத் திருப்பித் தந்துவிடவேண்டும். ஆனால் நமது சொந்த யுரேனியத்தில் நாம் செய்த அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம். அதற்காக, நமது ராணுவ அணு உலைகள், சிவிலியன் அணு உலைகள் ஆகியவற்றை நாம் பிரிக்கவேண்டும்.

    NPT-யை நாம் ஏற்றுக்கொண்டிருந்தால், முதலில் நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களையெல்லாம் அழித்துவிடவேண்டும். அந்தப் பிரச்னை இப்போது இல்லை.

    எனவே இப்போதுள்ள 123 ஒப்பந்தம் கடுமையானதாக இருந்தாலும் NPT-ஐ ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு இதைவிடச் சிறந்த ஓர் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கமுடியாது.

    கே 5: இந்தியாவுக்கு எது மிகச் சிறந்த நிலை?

    பதில்: அணு ஆயுத நாடுகள் அனைத்தும் இந்தியாவையும் அணு ஆயுத நாடுகள் கணக்கில் சேர்த்துக்கொள்வது. அப்படி நடந்தால் இந்தியா உடனடியாக NPT-ஐ ஏற்றுக்கொள்ளும். அப்படி நடந்தால் அமெரிக்க-இந்திய 123 ஒப்பந்தமே தேவையில்லாதுபோனாலும் போகலாம். பிற நாடுகள் (NSG) சந்தோஷமாக வந்து யுரேனியத்தைத் தரலாம். அப்படியே அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்துகொண்டாலும் சீன-அமெரிக்க ஒப்பந்தம்போல இலகுவான ஷரத்துகள் கொண்டதாக இருக்கலாம்.

    ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. இந்தியாவை பிற அணு ஆயுத நாடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு “அணு ஆயுத நாடு” என்று ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

    கே 6: இந்திய அரசு தன் மக்களிடம் வெளிப்படையாக ஏதேனும் சொல்லவேண்டுமா?

    பதில்: இந்திய அரசு எதையுமே மறைத்ததுபோலத் தெரியவில்லை. கம்யூனிஸ்ட்களின் ஆட்டம் தாங்கமுடியவில்லை. இவர்களுடைய ஒரே பிரச்னை அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போடுவதுதான்.

    இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. NPT-யில் ஒப்பமிட இந்தியா விரும்பவில்லை. தன்னை “அணு ஆயுத நாடு” என்று பிறர் ஏற்றுக்கொண்டால்தான் NPT-யை ஏற்றுக்கொள்வோம் என்கிறது இந்தியா. 123-யில் கையொப்பமிட்டால் இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் குறை கிடையாது. ராணுவ-சிவிலியன் அணு உலைப் பிரிப்பு அவசியம். அது மடடு்ம்தான். அமெரிக்காவின் எரிபொருளைப் பயன்படுத்தும்போது அதனை அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. அணு ஆயுதச் சோதனை ஏதும் செய்யக்கூடாது. கவனியுங்கள்... அணு ஆயுதம் செய்துகொள்ளலாம். ஆயுதச் சோதனை ஏதும் செய்யக்கூடாது. அப்படிச் செய்வதாக இருந்தால், அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டு, சோதனைகளைச் செய்துகொள்ளலாம்.

    இது மிகவும் நியாயமான ஒப்பந்தமாகவே தோன்றுகிறது. இந்தியாவை பிற நாடுகள் “அணு ஆயுத நாடு” என்று ஏற்றுக்கொள்ளாத நிலையில், இதுதான் second best. இதற்காகவே இந்த ஒப்பந்தத்தை நாம் வரவேற்கவேண்டும்.

    ReplyDelete
  18. நீங்கள் ஒப்பந்தத்தில் உள்ள நிறை, குறைகளை பற்றி பேசுகிறீர்கள். இந்த அணு ஒப்பந்தம் தேவையா என்பது எனது கேள்வி? அடுத்த 50 ஆண்டுகளில் அணு சக்தியால் கிடைக்கும் மின்சாரம் வெறும் ஐந்து சதவிகிதமே என்கிறார்கள். கதிரியக்க குப்பைகளை அகற்றுவதில் குறை பாடு, மூலதனமாக பணம் நிறைய செலவிட வேண்டும், ஏதேனும் காரணங்களில் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தால் பண வேறயாம் ஏற்படும், அணு உலைகளின் ஆபத்துகள் ஆகியவை உள்ளன. வேறு வழிகளில் யோசிக்க ஏன் முன் வரக்கூடாது? உடனடியா க எல்லை என்றாலும், தொலை நோக்கு பார்வையுடன் திட்டம் கொண்டு வரலாமே?

    ReplyDelete
  19. பத்ரி,

    விரிவான விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் அளித்த தகவல்களை சற்று உறுதி செய்து கொண்டு பிறகு (தேவையானால்) எனது எதிர்வினையைத் தருகிறேன்.

    தற்போதைய எதிர்வினை - "123 ஒப்பந்தத்திற்குப் பிறகும் நாம் தடையின்றி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ளலாம்" என்ற உங்கள் தகவல் குறித்து எனக்கு சந்தேகமாகத்தானுள்ளது. Kafila என்றத் தளத்தில் சுத்தப்பிராத்தா என்பவர் எழுதிய இந்தப் பதிவில், கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

    Those who support the Indo-US nuclear deal on the grounds that it places no limitations on India are also wrong. Because, the Hyde Act clearly places limitations in the events of testing, or any trace of military use (which have to be verified by the IAEA).

    அவருடைய பதிவின் கருத்துடன் (அணு ஆயுதங்கள் நமக்குத் தேவையில்லை, ஆகவே நாம் NPTயில் கையெழுத்திட வேண்டும், etc.) உடன்படாவிட்டாலும், மேலே மேற்கோளிட்ட தகவலுக்காக அந்தப் பதிவைக் குறிப்பட்டிருக்கிறேன். Any trace of military use என்பது அணு ஆயுதங்களைத்தானே குறிக்கிறது?

    //கே 6: இந்திய அரசு தன் மக்களிடம் வெளிப்படையாக ஏதேனும் சொல்லவேண்டுமா?

    பதில்: இந்திய அரசு எதையுமே மறைத்ததுபோலத் தெரியவில்லை.//

    நீங்கள் அண்மையில் தொலைக்காட்சி எல்லாம் பார்க்கிறீர்களா என்றுத் தெரியவில்லை. சென்ற வாரயிறுதியில் NDTVயின் We The People நிகழ்ச்சியிலும் காங்கிரஸின் பிரதிநிதி அபிஷேக் சிங்வி சாதித்துக் கொண்டிருந்தார் "அணு ஆயுத சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் எந்தவொரு தடையும் விதிக்கவில்லை" என்று. இதே பாட்டை பிரணாப் முகர்ஜி போன்றவர்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள், பல்வேறு ஊடகங்களில். இது சுத்த மோசடி இல்லையா?

    ReplyDelete
  20. பத்ரி,

    பின்னூட்டத்தில் உள்ள கேள்வி, பதில்களை ஒரு புதிய பதிவாகவே போடலாம் என்று தோன்றுகிறது...

    ReplyDelete
  21. மன்மோகனின் பொருளாதார திட்டங்களுக்கு 90களில் இதே எதிர்ப்புதான் எழுந்தது. ஆனால் இன்று நல்ல பயனளிக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
    அதேபோல இந்த அணுசக்ததி ஒப்பந்தமும் தொலைநோக்குள்ள திட்டமாகவே இருக்கலாம்.

    ஆனால், எனக்கு ஒன்றே ஒன்றுதான் புரியவேயில்லை. இந்த காங்கிரஸ் அரசுக்கு, ஆட்சியையே இழந்தாலும் பரவாயில்லை, இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி மக்களுக்கு நன்மை செய்தே தீர வேண்டும் என்ற இந்த 'நல்லெண்ணம்' எங்கிருந்து வந்தது?

    இந்த 'நல்லெண்ணம்', 'தொலைநோக்கு', நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரம், காவிரி நீர் போன்ற மற்ற பிரச்சினைகளுக்கு ஏன் வரமாட்டேன் என்கிறது?

    ReplyDelete
  22. வாய்ஸ் ஆன் விங்ஸ்: 123 ஒப்பந்தத்தின் மிக முக்கியமான ஷரத்து இங்கே உள்ளது: (2.4)

    ”This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non-nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.”

    அதாவது அமெரிக்க-இந்திய ஒப்பந்தத்துக்கு வெளியாக எந்த வகையிலும் இந்தியா அணு எரிபொருள், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு ராணுவ அணு வேலைகளைச் செய்தால், 123 ஒப்பந்தம் அதனைத் தடுக்காது.

    அடுத்து
    //அபிஷேக் சிங்வி சாதித்துக் கொண்டிருந்தார் "அணு ஆயுத சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் எந்தவொரு தடையும் விதிக்கவில்லை" என்று. இதே பாட்டை பிரணாப் முகர்ஜி போன்றவர்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள், பல்வேறு ஊடகங்களில். இது சுத்த மோசடி இல்லையா?//

    123 ஒப்பந்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால், அபிஷேக் சிங்வி போன்ற வக்கீல்கள் சொல்வதில் மோசடி ஏதும் இல்லை எனலாம். அதாவது “letter of the agreement” என்பதிலிருந்து. 123 ஒப்பந்தத்தில் அணு ஆயுத சோதனை செய்யலாமா, கூடாதா என்பது சொல்லப்படுவதில்லை. அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் எரிபொருளை “அமைதிப்பணிக்கு” மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்கிறார்கள். அவ்வளவுதான்.

    ஆனால் இந்த ஒரு ஸ்டேட்மெண்ட் வருகிறது. “(c) In light of the above understandings with the United States, an India-specific safeguards agreement will be negotiated between India and the IAEA providing for safeguards to guard against withdrawal of safeguarded nuclear material from civilian use at any time as well as providing for corrective measures that India may take to ensure uninterrupted operation of its civilian nuclear reactors in the event of disruption of foreign fuel supplies.”

    IAEA-வுக்கும் இந்தியாவுக்கும் இடையில் என்ன ஒப்பந்தம் இருக்கும் என்பதுபற்றி நமக்கு இப்போது தெரியாது.

    அடுத்தது, CTBT எனப்படும் Comprehensive (nuclear) Test Ban Treaty. இதில் எந்தக் கட்டத்திலும், எந்த இடத்திலும் (நிலத்திலும் வானிலும் நீரிலும்) அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளை நிகழ்த்தமாட்டேன் என்று ஒரு நாடு நிபந்தனையைத் தன்மேல் விதித்துக்கொள்வது. இந்த உடன்படிக்கையில் சில நாடுகள் கையெழுத்திட்டே ஆகவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. அதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை அடக்கம். ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த உடன்படிக்கையில் இன்றுவரை கையெழுத்திடவில்லை. அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அதனை ”ratify” செய்யவில்லை. முக்கியமாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் IAEA இதனைப் பெரிய விஷயமாக ஆக்கி, India Specific Safeguards Agreement என்ற ஒன்றில் இதனைச் சேர்க்கத் திட்டமிடலாம் என்று சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் இந்திய ராணுவ அணு உலை என்று குறிப்பிட்ட ஓர் இடத்தில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை India Specific Safeguards Agreement-ஆல் தடுக்கமுடியாது.

    ஆக, அணு ஆயுதம் செய்யலாம். 123 ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. (மேலே உள்ள மேற்கோளைப் பார்க்கவும்.) அணு ஆயுதச் சோதனை செய்வதில் தடைகள் இருக்கலாம்... என்று நம்பப்படுகிறது. ஏனெனில் உலகின் எல்லா நாடுகள்மீதும் அந்தத் தடையை விதிக்க CTBT விரும்புகிறது.

    இதில் சில சொல்வது என்னவென்றால் அமெரிக்கா போன்ற தொழில்நுட்பம் அதிகமுள்ள நாடுகள் அணு ஆயுதம் செய்யும்போது சோதனை செய்து பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் இந்தியா போன்ற நாட்டுக்கு சோதனைகள் அவசியம்... எனவே சோதனைகள் செய்யக்கூடாது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டால், அணு ஆயுதம் சரியாகச் செய்யமுடியாத ஒரு நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்...

    இந்தமாதிரி தொடர்ச்சியான வாதங்களுக்குள் சிக்கிக்கொண்டால் வெளியே வரமுடியாது.

    ***

    இந்த விவாதம் மிகவும் நீண்டுபோய்விட்டது. பலர் பல கேள்விகளைக் கேட்கிறார்கள்.

    * அணு மின்சாரமே வேண்டுமா?
    * அணு மின்சாரம் ஆபத்தில்லாததா? அணுக் கழிவை என்ன செய்வது?
    * அணு மின் ஒப்பந்தம் வேண்டும் என்றால் ஏன் அமெரிக்காவுடன் செய்யவேண்டும்? வேறு நாடே இல்லையா?

    இவை மிகவும் அடிப்படையான கேள்விகள். அணு மின்சாரம் வேண்டுமா என்றால் என் கருத்து வேண்டும் என்பதுதான். ஆபத்தா, இல்லையா என்றால், கொஞ்சம் ஆபத்து இருக்கலாம், ஆனால் ஆபத்தைக் குறைக்க, வெகுவாகப் போக்க, தொழில்நுட்பம் வகைசெய்யும் என்று நான் நம்புகிறேன்.

    அடுத்து அமெரிக்காவா, ஏன் வேறு நாட்டுடன் செய்யக்கூடாது என்றால், ரஷ்யாகூட, “நீ முதலில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய், பிறகு பார்க்கலாம்” என்றுதான் இந்தியாவிடம் சொல்லியுள்ளது. ஏனெனில், IAEA, NSG ஆகிய இடங்களை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே NPT, CTBT ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவிரும்பாத நிலையில், அமெரிக்காவுடன் இப்போதைய ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதே சிறந்த வழி.

    ReplyDelete
  23. Badri,
    Pls see gnani's yesterday o'pakkangal titled 'madi ketta maamannan manmohanan' in kumudam which discussed abt nuclear energy

    could pls read and comment on it

    ReplyDelete
  24. Hi,
    I have read Left parties comment on the IAEA pact:
    From Yahoo India:
    'As a result of operationalising the Indo-US nuclear deal, India will place its costly imported reactors under perpetual IAEA safeguards and risk their permanent shutdown in case it fails to toe the US line on foreign policy issues,' the Left parties said.

    The government had done so 'without getting concrete assurances for uninterrupted fuel supply, right to build strategic reserves and right to take corrective steps in case fuel supplies are stopped', they said, questioning the government's claim about the pact addressing three of India's key concerns.

    'The key question therefore with respect to IAEA safeguards is: how to ensure that once India's civilian reactors go under safeguards in perpetuity, the country would not be blackmailed by the withholding of nuclear fuel supplies, as the US did in Tarapur following Pokhran-I?

    These points seems very valid. PM should clear all these doubts before signing the pact.
    the full article can be seen at :
    http://in.news.yahoo.com/43/20080711/812/tnl-left-picks-holes-in-iaea-pact_1.html

    ReplyDelete
  25. //மன்மோகனின் பொருளாதார திட்டங்களுக்கு 90களில் இதே எதிர்ப்புதான் எழுந்தது. ஆனால் இன்று நல்ல பயனளிக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.//

    இன்னும் சில ஆண்டுகள் பொருத்து பார்க்க வேண்டும்.

    //* அணு மின்சாரமே வேண்டுமா?//
    கண்டிப்பாக வேண்டும்

    //* அணு மின்சாரம் ஆபத்தில்லாததா? அணுக் கழிவை என்ன செய்வது?//
    பிற வகை வேதியல் தொழிற்சாலைகளை விட அணுமின்சார தொழிற்கூடம் அதிகம் ஆபத்து இல்லை


    //* அணு மின் ஒப்பந்தம் வேண்டும் என்றால் ஏன் அமெரிக்காவுடன் செய்யவேண்டும்? வேறு நாடே இல்லையா?//

    இந்த கேள்விக்கு யாராவது விடை தாருங்கள்

    //ரஷ்யாகூட, “நீ முதலில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய், பிறகு பார்க்கலாம்” என்றுதான் இந்தியாவிடம் சொல்லியுள்ளது//

    ஆனால் கூடங்குளம் தொடர்பான ஒப்பந்தத்தை பாதியில் கைவிட்டது பாரதமா, உருசியாவா ??

    ReplyDelete