Sunday, February 29, 2004

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்

இன்று சென்னை டி.டி.கே. சாலை டாக் செண்டரில் (Tag Centre), ஐராவதம் மகாதேவன் "Twin Puzzles in Tamil Epigraphy" என்ற தலைப்பில் பேசினார். இந்தப் பேச்சு, அவரது புத்தகம் "Early Tamil Epigraphy. From the Earliest Times to the Sixth Century A.D." முன்வைத்த கருத்துகளின் சுருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் உள்ளே நுழையும்போது பேச்சு ஆரம்பித்திருந்தது. இந்த இயல் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதது. நான் இன்னமும் மகாதேவனின் புத்தகத்தைப் படிக்கவில்லை. (வாங்கவேண்டிய பட்டியலில் உள்ளது.) பேச்சு தமிழ் கல்வெட்டுகளைப் பற்றி இருந்தாலும், ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது. தினமணியின் முன்னாள் ஆசிரியரால் நிச்சயம் தமிழிலேயே இந்த உரையை ஆற்றியிருக்க முடியும். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலோரும் தமிழர்களே. ஒரேயொரு வெளிநாட்டவர் இருந்தார். அவர்கூட 'வட்டெழுத்து' என்பதை நன்கே உச்சரித்தார்.

---

கல்வெட்டுகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் ஒரு சிறு அறிமுகம். பண்டைத் தமிழர்கள் கல்வெட்டுகளில் பொறித்துள்ள எழுத்துகளை நம்மால் இன்று படித்துப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வரிவடிவத்தில் ஒவ்வொரு குறியீடும் என்ன எழுத்தை/சத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆராய்ச்சிகளின் மூலம், பல கல்வெட்டுகளைப் படிப்பதன் மூலம் கண்டுபிடிப்பதுதான் epigraphy எனப்படும் இயல் - கல்வெட்டியல் என்று நானாகப் பேர் கொடுத்துள்ளேன். தமிழில் என்ன சொல் கையாளப்படுகின்றதென்று தெரியவில்லை. இந்தக் கல்வெட்டுகள் ஒருசிலவற்றின் படங்கள் Frontline இதழின் இந்தக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது.

இனி மகாதேவனின் உரைக்கு வருவோம்:

* 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

* பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் 'ள', 'ற', 'ண', 'ழ' போன்ற எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (ख, ग, घ, छ, ज, झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

* பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால் அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

* சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

* இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத 'ள', 'ற', 'ண', 'ழ' ஆகிய எழுத்துகளுக்கான புது வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் 'ல', 'ன', 'ர' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது போல் உள்ளது.

No comments:

Post a Comment