Tuesday, February 17, 2004

நாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

ஒருவழியாக மேற்கண்ட பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களாக நடந்துவரும் பிரச்சினை இது.

1921இல் நாடார் சாதியினர் ஒன்றிணைந்து தூத்துக்குடியில் "தி நாடார் பாங்க்" என்ற வங்கியினை உருவாக்கினர். 1962இல் இதற்கு சாதிப்பெயரை நீக்கி "தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த வங்கியின் பங்குகள் பல நாடார் குடும்பங்களிடையே இருந்து வந்தன.

1994இல் எஸ்ஸார் நிறுவனக் குழுமத்தை நடத்தும் ருய்யா குடும்பத்தினர் நாடார் குடும்பங்களுக்கிடையேயான சண்டையைப் பயன்படுத்திகொண்டு கிட்டத்தட்ட 68% பங்குகளை ஒருசில நாடார்களிடமிருந்து வாங்கி விட்டனர். ஆனால் தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தின் சிவந்தி ஆதித்யன் தலைமையில் நாடார்கள் இந்தப் பங்குகளை மீட்க ஒரு போராட்டத்தைத் துவங்கினர்.

இதற்கிடையில் 1996இல், மத்திய ரிசர்வ் வங்கி, எஸ்ஸார் நிறுவனத்தினரிடம் ஒரு வங்கி செல்வதை எதிர்த்து, இந்த பங்கு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தது. இதற்குக் காரணமாக எஸ்ஸாரில் பல தொழில் நடவடிக்கைகளில் இவர்கள் மற்ற பல வங்கிகளுக்கு பெரும் பாக்கி வைத்திருக்கின்றனர், பணத்தை உரிய நேரத்தில் செலுத்தியதே கிடையாது, அப்படிப்பட்டவர்களிடத்தில் ஒரு வங்கி இருப்பது சரியல்ல என்பதைத் தெரிவித்தது.

மேலும் இந்தப் பிரச்சினை வடக்கு/தெற்கு என்றெல்லாம் அரசியல் மயமாக்கப்பட்டது.

இந்த நேரத்தில் ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சிவசங்கரன் (இன்றைக்கு ஏர்செல் செல்பேசி நிறுவனத்தின் சொந்தக்காரர்) பல்வேறு செல்பேசி வட்டங்களின் உரிமத்தை வாங்கியிருந்தார். தில்லி மற்றும் அதைத் தொட்டுள்ள பல வட்டங்களின் உரிமையை எஸ்ஸார் நிறுவனத்துக்கு விற்று, அதற்கு பதிலாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிப் பங்குகளைப் பெற்றுக் கொண்டார். [இன்று எஸ்ஸார் நிறுவனம் ஹட்சிசன் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவின் நான்காவது பெரிய செல்பேசி நிறுவனத்தை நடத்துகிறது.]

நாடார்கள் 'பங்கு மீட்புக் குழு' ஒன்றினை உருவாக்கி சிவசங்கரனிடமிருந்து வங்கியின் பங்குகளைத் திரும்பப் பெற முயற்சித்தனர். இதற்கென நாடார்கள் தம் சாதியினரிடமிருந்து பணத்தை சேகரிக்கத் தொடங்கினர். ஆனால் இந்த வங்கி பங்குச்சந்தையில் இருப்பதாலும், வங்கியின் வருடாந்திர முடிவுகள் பிரமாதமாக இருப்பதாலும், வங்கியின் பங்குகளின் விலை பங்குச்சந்தையில் அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் நாடார்கள் சேகரித்த பணம் போதுமானதாக இல்லை. சேர்த்த பணத்தை வைத்து 35% பங்குகளை வாங்கி விட்டனர்.

இந்தக் குழப்பங்கள் நீடித்திருக்கும்போது வங்கியின் இயக்குனர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. இதனால் மத்திய ரிசர்வ் வங்கியே ஒருவரை சேர்மனாக நியமித்தது. வங்கியின் இயக்குனர்கள் இந்த சேர்மனை நீக்க முடிவு செய்தபோது ரிசர்வ் வங்கி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

நேற்று கடைசியாக மீதமுள்ள 33% பங்குகளை சிவசங்கரனிடமிருந்து பெறுவதற்கான விலையை நாடார்கள் சங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையிக்கு சுமுகமான தீர்ப்பைப் பெற்றுத்தர சுதேசி ஜாகரண் மஞ்சின் எஸ்.குருமூர்த்தி பஞ்சாயத்து செய்துள்ளார் என்று தெரிய வருகிறது. குழப்பமான வழக்குகளை நீதிமன்றம் வரை போகாது தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்வதில் குருமூர்த்தியின் மூன்றாவது முக்கிய சாதனை இது. இதற்கு முன்னர் பஜாஜ் குடும்ப வழக்கு, எல்&டி - பிர்லா வழக்கு இரண்டையும் தீர்த்து வைப்பதில் உதவியுள்ளார்.

No comments:

Post a Comment