Sunday, February 22, 2004

சிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது

சர்வதேசத் தாய்மொழி தினம் நேற்று (21 பெப்ரவரி 2004) கொண்டாடப்பட்டுள்ளது. இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகளின் உணர்ந்தறிதல் வளர்ச்சிக்குப் (cognitive development) பெரிதும் உதவுகிறது என்று சொல்லியுள்ளனர்.

பன்மொழிக் கல்வியில் முன்னிலையில் இருப்பதற்காக (80 மொழிகள் வரை குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுகிறதாம் நம் நாட்டில்) இந்தியாவிற்குப் பாராட்டும், ஆப்பிரிக்காவில் 2000க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தும் காலனியாதிக்க மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளே பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுவதாகவும் ஆதங்கப்படுகிறது யுனெஸ்கோ.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழா, தமிங்கிலமா என்ற கேள்வி எழுகையில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் தாய்மொழியான தமிங்கிலத்திலேயே கல்வி கற்றுத்தருவதாக சந்தோஷப்படலாம்.

தொடக்கக்கல்வியாவது தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழிலேயே இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் சரியான, தரமான தமிழ்ப்பள்ளிகள் சென்னையில் கிடைக்கமாட்டேன் என்கிறது. என் நான்கு வயது மகளுக்குத் தமிழிலேயே (நன்கு) பேசக் கற்றுக்கொடுத்துள்ளேன். வீட்டில் அவளுடன் நாங்கள் தமிழிலேயே பேசுகிறோம். அதனால் அவளது கற்றுக்கொள்ளும் வேகம் அதிகமாக உள்ளது என்பது என் எண்ணம்.

No comments:

Post a Comment