Sunday, February 08, 2004

அஞ்சல் துறை கருத்துக் கணிப்பு

இன்று காலை என் வீட்டிற்கு (ஞாயிறு அன்று!) ஒரு அஞ்சல் துறை ஊழியர் வந்தார். எங்கள் பகுதிக்குக் கடிதம் கொண்டுவருபவர் அவர். முதலில் தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்து, அஞ்சல் துறை ஒரு கருத்துக்கணிப்பு நடத்துவதாகவும், அதற்காக நான் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்றும் பணிவுடன் கேட்டார்.

ஐந்து கேள்விகள் (தமிழில்) இருந்தன. அவற்றிற்குத் தமிழில் பதில் எழுதவேண்டும். எனக்கு தமிழில் எழுதத் தெரியுமா என்று கேட்டார். ஆங்கிலத்தில் இருந்தால் தானாகவே அதைத் தமிழில் எழுதிக்கொள்வதாகச் சொன்னார். நானே தாளை வாங்கி எழுதித் தந்தேன். அஞ்சல்துறைச் சேவையை எப்படி முன்னேற்றுவது, அஞ்சல் துறை ஊழியர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்கின்றனர், மக்களிடம் ஆலோசனை வழங்குமாறும் கேட்டிருந்தனர். என் எண்ணங்களை எழுதிக் கொடுத்தேன்.

தனியார் கூரியர் நிறுவனங்களால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றிச் சொன்னார் அந்த அஞ்சல்துறை ஊழியர்.

அரசின் அஞ்சல் துறை இவ்வாறு செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் நேரடி அஞ்சல் ஊழியரே ஈடுபட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. இதன்மூலம் அஞ்சல் துறைக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிட்டும் என்று எதிர்பார்ப்போம்.

எனக்கு இந்திய அஞ்சல் துறையின் மேல் நிறைய மதிப்பு உள்ளது.

No comments:

Post a Comment