Thursday, February 05, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2

3. என் பையன் தொலைக்காட்சி பார்த்து அப்படியே திராவிட்/டெண்டுல்கர் மாதிரி நன்றாக விளையாடுகிறான். வயது அதிகமானவர்களுடன் விளையாடும்போதும் சிறப்பாக விளையாடுகிறான். அடுத்து என்ன செய்வது?

பெற்றோர்களுக்கு, தன் பிள்ளைகள் எது செய்தாலும் சிறப்பானதாக இருப்பதாகவே தோன்றும். மூன்று வயது முதற்கொண்டே முக்கால்வாசி இந்தியக் குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்த்து 'அது தெந்துல்கர் மாமா' என்று மழலையில் கலக்கும் (என் மகள் சேர்த்து). ஒரு பையனுக்கு (பெண்குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். பெண்களுக்கான கிரிக்கெட் வாய்ப்புகள் இன்றைய தேதியில் வெகு குறைவு) கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஈடுபடுவது எளிது. இன்றைய தேதியில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப்படத்துறையினரைக் காட்டிலும் அதிக மதிப்புடையவர்கள். கிரிக்கெட் வீரர்கள் இன்று சோப்பு, சீப்பு, கண்ணாடி, செல்பேசி, கோதுமை மாவு, கோகா கோலா என்று எல்லாவற்றையும் விற்கிறார்கள். இன்றைய சிறுவனின் 'ஹீரோக்கள்' கிரிக்கெட் வீரர்களே.

அதனால் வீட்டில் சிறுவர்கள் கையில் கிடைத்த நியூஸ்பேப்பரைச் சுருட்டி வைத்துக் கொண்டு, பிரெட் லீ பந்தை எதிர்கொண்டு திராவிட் அடிக்கும் கவர் டிரைவ் போல ஒரு 'ஆக்ஷன்' விடுவார்கள். அதைப் பார்த்து பெற்றோர்களும் 'ஆஹா, என் மகன்தான் அடுத்த திராவிட்' என்ற கோட்டையைக் கட்டாமல், நேராக ஒரு கிரிக்கெட் பயிற்சியாளரை அணுக வேண்டும்.

ஆரம்பநிலையில் பயிற்சியாளரால் ஒரு சிறுவனது உள்ளார்ந்த திறமை எந்தத் துறையில் உள்ளது என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. பேட்டிங், பவுலிங், இரண்டிலும்?... பேட்டிங் என்றால் தடுத்தாடும் தொடக்க ஆட்டமா, இல்லை அடித்தாடும் இடைநிலை ஆட்டமா? பவுலிங் என்றால் வேகப்பந்து வீச்சு, சுழல்பந்து... சுழல்பந்தென்றால் விரலால் சுழற்சி அல்லது மணிக்கட்டால் சுழற்சி... வேகப்பந்து என்றால் 12 வயதில் என்ன வேகம் போட முடியும்? இப்படிப் பல குழப்பங்கள்.

அதனால் பயிற்சியாளர் ஒரு சிறுவனை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கவனத்தைச் செலுத்தச் சொல்வார். இயல்பான திறமை எங்கு வெளிப்படுகிறது என்பதை கவனிப்பார். பின்னர் அந்த ஒரு துறையில் அதிக கவனம் அளிக்க முயல்வார். இதெல்லாம் ஒரு மாதப் பயிற்சி முகாமில் கண்டறிவது கஷ்டம்.

அதனால் பெற்றோர்கள் தங்கள் வீடுகளின் அருகில் முன்னாள் ரஞ்சி, அல்லது முதல் டிவிஷன் லீக் ஆட்டக்காரர் யாராவது இருக்கிறாரா என்று தேடிக் கண்டுபிடித்து அவரிடம் தன் பையனை அழைத்துக்கொண்டுபோய் பேச வைக்க வேண்டும். வெறும் களப்பயிற்சி மட்டும் போதாது. முதலில் சிறுவர்களுக்கு என்னவெல்லாம் சாத்தியம் என்பது பற்றிய போதனை தேவை. ஆஸ்திரேலியாவில் இடதுகை மணிக்கட்டு சுழற்சி மூலம் பந்து வீசும் ஓரிரு இளம் வீரர்கள் தோன்றியுள்ளனர் (மைக்கேல் கிளார்க், மைக்கேல் பெவான் கூட இப்படித்தான்). இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு பந்துவீச்சாளர் ரஞ்சிக்கோப்பை அளவில் தற்போது விளையாடுவதில்லை. தென்னாப்பிரிக்க அணியில் பால் ஆடம்ஸ் (கழுத்தை ஒருமாதிரி திருப்பிக் கொண்டு பந்து வீசுபவர்) முதன்முதலில் சர்வதேச அளவில் (கடந்த பத்து வருடத்திற்குள்) இம்மாதிரி பந்து வீசியவர்.

இப்படி யாராவது இடதுகை மணிக்கட்டு சுழற்சியில் பந்து வீச வந்தால் நம்மூர்ப் பயிற்சியாளர்கள் அந்தச் சிறுவர்களை பயமுறுத்தி, விரல் சுழற்சி மூலம் பந்து வீசுமாறு செய்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். இந்தியாவில் இடதுகை விரல் சுழற்சிப் பந்து வீச்சாளர்கள் (பிஷன் சிங் பேடி போல்) பல்லாயிரம். உருப்படியான வலதுகை மணிக்கட்டு சுழற்சி லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்களே வெகுவாகக் குறைந்து விட்டார்கள்.

அதேபோல் நம்மூர்ப் பயிற்சியாளர்கள் வேகப்பந்து வீசும் ஒவ்வொருவனையும் எப்படியெல்லாம் குளறுபடி செய்யமுடியுமோ செய்து, "வேகம் அவசியமல்ல, 'லைன் & லென்த்'தான் முக்கியம்" என்று மிதவேகப் பந்து வீச்சாளர்களாக்கி விடுகிறார்கள். இதனாலேயே பிரெட் லீ போன்ற அதிவேகப் பந்துவீச்சாளர்கள் நம்மிடையே இல்லை.

எனக்கு, கீழ்நிலையில் இருக்கும் இந்தியப் பயிற்சியாளர்கள் மீது சிறிதும் நம்பிக்கையே இல்லை. இந்தியாவிற்குத் தேவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் உள்ளது போல் கற்று, தேர்வெழுதி, சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள். இப்படிச் சான்றிதழ் பெற்றவர்களும் ஒவ்வொரு வருடமும் மேற்படிப் பயிற்சிக்காக ஓரிடத்தில் குழுமி, அதிகம் தெரிந்தவர்களிடம் கற்க வேண்டும். கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பாகம் ஒன்று

No comments:

Post a Comment