Sunday, February 22, 2004

தமிழ் எப்பொழுது அழியும்?

யுனெஸ்கோ 'சர்வதேசத் தாய்மொழி தினம்' பற்றிய காசியின் வலைப்பதிவு. அங்கிருந்து மெய்யப்பனின் பார்வை வலைப்பதிவுக்கு ஒரு தாவல். பா.ராகவனின் பாரதீய பாஷா பரிஷத் விருது பெறுகையில் பேசிய "என் காலம். என் கவலை. என் கருத்து." பேச்சிற்கான எதிர்வினை இது.

எனக்கும் இந்த யுனெஸ்கோ அறிக்கை என்று எல்லோரும் மேற்கோள் காட்டுவதில் நம்பிக்கை இல்லை. நேற்றைய 'தி ஹிந்து' மெட்ரோ பிளஸ் பகுதியில் வந்த தமிங்கில விளம்பரங்கள் பற்றிய கட்டுரையின் ஆரம்பமும் சும்மாவேனும் பீதியைக் கிளப்புமாறு உள்ளது. மேற்கோள் இங்கே: "ANXIOUS VOICES cry out that the Tamil language will cease to exist in another five years or so, unless immediate steps are taken (so says a UNESCO finding)"

அழியும் உலக மொழிகளில் தமிழ் முதலாவதாக இருக்கும் என்பதிலிருந்து இன்னும் ஐந்தே வருடங்களில் அழிந்தே போய்விடும் (ஏதேனும் செய்யாவிட்டால்) என்று பயமுறுத்துகிறார் கட்டுரையாளர்!

தமிழின் மீதான் ஆங்கிலத்தின் அசுரத்தாக்குதல் அதிகமாயுள்ளது உண்மையே. அதிவேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், முக்கியமாகக் கணினியியல், தகவல் தொடர்பியல் ஆகியவை, தமிழில் கலைச்சொல்லாக்கம் தங்கிப்போயிருப்பதை வெளிப்படையாக்கியுள்ளது. இது மிக அவசரமாக கவனிக்கவேண்டிய ஒன்று.

ஒருசில ஆங்கிலப் பள்ளிகள் "வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு மிகவும் தேவையான ஆங்கிலத்தை எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று விளம்பரமிட்டு மக்களைக் கூவி அழைக்கும் காலமிது. அப்படிக் கூவி அழைக்காவிட்டாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளிலேயே போடவேண்டிய கட்டாயம். [தமிழ்வழிக் கல்விக்கூடங்களின் தரம் மோசம். நான் நிறையத் தேடிப் பார்த்து விட்டேன்.] இதை மாற்ற வேண்டும். ஆனால் இப்பொழுதைய சந்தை இதற்கு இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. வருடத்திற்கு ரூ. 10,000 கல்விக்கட்டணமாகச் செலவு செய்து சென்னையில் யாராவது பிள்ளைகளை தமிழ்வழிக் கல்விக்கூடத்தில் சேர்க்கத் தயாரா என்று தெரியவில்லை.

ஆங்கிலவழிக் கல்வியின் மூலம் தமிழ் இரண்டாம் பாடமாக இருந்தாலும் தரமான தமிழறிவினைப் புகட்ட முடியாது.

அடுத்த ஐந்தாண்டுகளில் அழியாவிட்டாலும், தரமான தாய்மொழிக் கல்விக்கூடங்கள் வராவிட்டால், தமிழ் வளம் குன்றி, வருங்காலத்தில் அழியவும் வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment