Sunday, February 22, 2004

திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3

சன், எச்.பி இருவரும் சில நாட்களிலேயே கொலாப்.நெட் டின் நுகர்வோராக இணைந்தனர். சன் மைக்ரோசிஸ்டம் அப்பொழுது ஸ்டார் ஆஃபீஸ் என்னும் அலுவல் செயலி நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருந்தது. மைக்ரோசாஃப்ட்டின் அலுவல் செயலியுடன் அப்பொழுதிருக்கும் வணிக முறைகளில் போட்டி போட முடியாது (அதாவது மைக்ரோசாஃப்ட் அலுவல் செயலியின் தரத்திற்கு, ஆனால் அதைவிட விலை குறைத்து விற்று) என்று முடிவு செய்த சன் பரிமென்பொருள் திட்டத்தில் இணைய ஆசைப்பட்டது. உடனே கொலாப்.நெட் துணை கொண்டு ஓப்பன் ஆஃபீஸ் என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது. [இதனால்தான் இன்று தமிழிலும் ஓப்பன் ஆஃபீஸ் கொண்டுவர முடிகிறது.]

எச்.பி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் மென்பொருள் எழுதும் ஊழியர்கள் உண்டு. ஆனால் இவர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றியதே இல்லை. இதனால் இந்நிறுவனத்தில் பல மென்பொருள் திட்டங்களில் ஓரிடத்தில் எழுதப்பட்ட ஆணைமூலங்கள் மறுபடியும் மறுபடியும் எழுதப்பட்டு வந்தன. பின்னர் கொலாப்.நெட் உதவியுடன் எச்.பி பரிமென்பொருள், திறந்தநிரல் செயலிகள் எழுதுவோரின் திட்ட ஒருங்கிணைப்பு முறைகளைத் தன் அலுவலகத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

பிரையனின் பேச்சிலிருந்து ஒரு பொன்மொழி: "ஆணைமூலம் என்பதை இதுவரை தங்கக்கட்டிகள் என்று பாதுகாத்து இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தனர் மக்கள். ஆனால் அது லெட்டூஸ் (lettuce - நம்மூர்ப் பாஷையில் கொத்துமல்லிக் கட்டு என்று வைத்துக்கொள்வோமே?) போன்றது. உள்ளேயே வைத்திருந்தால் அழுகிப் போய்விடும். வெளியே கொண்டுவந்தால்தான் அதற்கு மதிப்பு."

பேச்சின் இறுதியில் பரிமென்பொருள் பற்றிய பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்பொழுது மேசைக்கணினியில் லினக்சு பெரிய சக்தியாக வருமா என்ற ஒரு கேள்விக்கான பதில் அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடியது.

தாய்லாந்தில் பொதுமக்கள் அனைவருக்கும் விலை குறைவான மேசைக்கணினியும், மடிக்கணினியும் கிடைக்கவேண்டுமென அந்நாட்டு அரசு முடிவுசெய்தது. குறைந்த விலையில் கணினிகளைத் தர பல நிறுவனங்கள் (எச்.பி போன்றவையும் சேர்த்து) முன்வந்தன. ஒரு மடிக்கணினி $300 என்ற அளவிற்கு விலை குறைக்கப்பட்டது. ஆனால் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தின் விலை அதிகமாக இருந்தது. அலுவல் செயலியின் விலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! இதனால் தாய்லாந்து அரசு மைக்ரோசாஃப்டை அணுகி விலையைக் குறைக்கமுடியுமா என்று கேட்டுக்கொண்டது. மைக்ரோசாஃப்ட் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தாய்லாந்து அரசு உடனடியாக தன்னார்வலர்கள் சிலரைக் கொண்டு லினக்சு இயங்குதளத்தை தாய்-மொழியில் மொழிபெயர்க்க வைத்தது. ஓப்பன் ஆஃபீசும் தாய்-மொழிக்கு மாற்றப்பட்டது. ஆக பைசா செலவில்லாமல் அருமையான இயங்குதளமும், அலுவல் செயலியும் தயாரானது. தாய்லாந்து அரசு மீண்டும் மைக்ரோசாஃப்டை அணுகி, நிலைமையை எடுத்துச்சொல்ல, உடனே மைக்ரோசாஃப்ட் பலநூறு டாலர்கள் செலவாகும் இயங்குதளத்தையும், அலுவல் செயலியையும் ஒன்றிணைத்து வெறும் $10க்குத் தருவதாக ஒத்துக்கொண்டது. [பிரையன் தவறாக மேற்கோள் காட்டுகிறார். $35 என்று என் ஞாபகம்.]

$300க்கு லினக்சு மடிக்கணினி, $335க்கு மைக்ரோசாஃப்ட் மடிக்கணினி. எது அதிகம் விற்கிறது?

இன்று லினக்சு கணினிகள் 60% அளவிற்கும், மைக்ரோசாஃப்ட் உள்ள கணினிகள் மீதம் 40%க்குமே விற்பனையாகிறதாம் தாய்லாந்தில்.

இதிலிருந்து தமிழகம்/இந்தியா அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல.

No comments:

Post a Comment