Sunday, February 29, 2004

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2

இதன்மூலம் மகாதேவனின் முடிவு:

- அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

- இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில் செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

- அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது.

- அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

- தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம் அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.

- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது, கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள், பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது. அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி வருகிறது.

- கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

- கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

- வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25% சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன் என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

- குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள், ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். [இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.]

- ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில் (அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும் அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள் தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

- தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று தான் கருதுவதாகச் சொன்னார்.

- இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

- அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில் எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம் என்றும் சொன்னார்.

- கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர், நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள் இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் -> சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார்.

பேச்சு ஒரு மணி நேரம் நிகழ்ந்தது. அதன்பின், அருமையான காப்பி இருக்கையிலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டது. காலையில் வந்திருந்த அனைவருக்கும் காலையுணவும் (இலவசமாக) வழங்கப்பட்டதென அறிந்தேன்!

No comments:

Post a Comment