Sunday, February 29, 2004

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3

காப்பி முடிந்து, வந்திருந்த சென்னைப் பெரிய மனிதர்கள் ஒருவரோடொருவர் அளவளாவி முடிந்ததும், கேள்வி, பதில்கள் ஆரம்பித்தன. சுத்தமான ஆங்கிலத்தில் (அவ்வப்போது தமிழ்ச் சொற்களைத் தூவி) கேள்விகள் கேட்கப்பட்டன, அப்படியே பதில்களும் வழங்கப்பட்டன. (ஒருசிலர் அபத்தமான ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்டனர், அபத்தமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதே பெருமை என்று நினைத்தனர் போலும்.) முதலில் கேள்விகள் கேட்ட சிலர் இரண்டு நிமிடங்கள் மகாதேவனின் பேச்சைப் புகழ்ந்து கடைசியில் சப்பென்ற கேள்விகளாய்க் கேட்டனர்.

கீழே ஒருசில கேள்விகளையும், பதில்களையும் தொகுத்துள்ளேன்.

1. தமிழ் எண்களுக்கான வரிவடிவம் எப்பொழுது தோன்றியது?

எழுத்துகளுக்கான வரிவடிவம் தோன்றியபோதே எண்களுக்கான வரிவடிவமும் தோன்றியிருக்க வேண்டும். அரிக்கமேடு கல்வெட்டுகளில் எண்களும் காணப்படுகின்றன.

2. இரண்டு 'ர'/'ற' ஏன்?

தொடக்கத்தில் 'ற'வுக்கு 'ர' சத்தம் கிடையாது. [நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். -பத்ரி], யாழ்ப்பாணத்தில் உச்சரிப்பதுபோல் 'ட்ர' (?) என்றுதான் இருந்தது, பின்னர் அழுத்தமான 'ர' ஆனது.

3. ஆயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறதே தமிழ் [குறளைச் சுட்டிக்காட்டினார் கேள்வி கேட்டவர்: "சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"], இது தமிழின் தேக்கத்தைக் குறிக்கிறதா (static), இல்லை, தமிழின் தாங்கும் சக்தியைக் (resistance power) குறிக்கிறதா?

இரண்டுக்குமிடையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும் தமிழால் பிறமொழியின் தாக்கத்தைத் தடுக்க முடிகிறது, தூய்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது, சக்தியுடன் இருக்க முடிகிறது. அதன் சமகாலத்திய மொழிகளான வேதிக் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் ஆகியவை இன்று அழிந்துவிட்டாலும் தமிழால் இன்னமும் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதே சமயம் தமிழானது பிறமொழிச் சொற்களை ஒரேயடியாக விலக்கக் கூடாது. கணினித் துறைகளில் (தகவல் தொடர்புத் துறையில்) பல்லாயிரக்கணக்கான சொற்கள் புதிதாக ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகின்றன, அவற்றை தமிழில் கண்டுபிடித்தல் கடினமாக இருக்கலாம். இந்நிலையில் தமிழ், ஆங்கிலச் சொற்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பழங்காலத்திலும் பல பிராக்ரிதச் சொற்கள் தமிழால் கடன்வாங்கிய சொற்கள் என்று தெரியாத வண்ணம் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.

[அவர் ஆங்கிலத்தின் சொன்னதை, கருத்து மாறாமல் தமிழாக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.]

4. ரொமீலா தாப்பர் 'சிந்து சமவெளி நாகரிக' வரிவடிவம்/மொழி திராவிட வரிவடிவம்/மொழி அல்ல என்று எழுதியிருக்கிறாரே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிந்து சமவெளி நாகரிக வரிவடிவம் இன்னமும் வகையறுக்கப்படவில்லை (decipher). சிந்து வரிவடிவம் படவடிவம் (pictograph). தமிழ் வரிவடிவம் நேர்க்கோட்டு வடிவம் (linear).

5. இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் பரமேஸ்வரன் என்ற பல்லவ அரசனால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். நீங்கள் வேறு யாரோலோ என்று சொன்னீர்களே?

இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் மகேந்திரப் பல்லவனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டில் 'சித்திரகாரப் புலி' என்ற சொற்றொடர் அப்படியே இன்றைய எழுத்துக்கு அருகில் காணப்படுகிறது.

6. தொல்காப்பியம் எந்த வரிவடிவில் முதலில் எழுதப்பட்டது? (இதுதான் கேள்வி, ஆனால் மகாதேவன் ஒருவேளை கேள்வியைச் சரியாகக் கேட்கவில்லையோ என்னவோ, கீழ்க்கண்ட பதிலைத் தந்தார்.)

பனையோலையில் சேமிக்கப்பட்ட எந்த எழுத்துமே முன்னூறு/நானூறு ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாதவை. கொல்கத்தா அருங்காட்சியகம் ஒன்றில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓலைச்சுவடு தொல்காப்பியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

7. உ.வே.சாமிநாதைய்யர் படித்த ஓலைகள் எந்த வரிவடிவத்தில் இருந்தன?

சாமிநாதைய்யர் படித்தவை 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லது அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓலைகள். அதற்கு முந்தையதாக் இருந்திருக்க முடியாது. சாமிநாதைய்யரைப் பற்றிச் சொல்கையில் யாரோ ஒரு வெளிநாட்டவர் சொன்ன மேற்கோளைச் சுட்டினார்: "சாமிநாதைய்யர் தமிழுக்குச் செய்த தொண்டை இந்த உலகத்தில், எந்த மொழிக்கும், வேறு யாரும், எந்தக் காலத்திலும் செய்ததில்லை." [அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.]

8. தமிழில் வரிவடிவில் மட்டும் ஏன் ख, ग, घ, छ, ज, झ போன்றவை இல்லை?

எந்த வரிவடிவமுமே ஒரு மொழிக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே இந்த சத்தங்கள் கிடையாது, எனவே எழுத்துகள் கிடையாது, எனவே வரிவடிவம் தேவையில்லை. அதனால்தான் அசோகன் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தி, தமிழ் பிராமியாக்கும் போது, தேவையற்ற சத்தங்களை/எழுத்துகளை/வரிவடிவங்களை விலக்கிவிட்டு, தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டனர்.

ராபர்ட் கால்டுவெல் தென்மொழிகளின் இலக்கணத்தை (?) எழுதும்போது எப்படி மெல்லினத்தை அடுத்து வல்லினம் வரும்போது சத்தம் மாறுகிறது (பால், அம்பு) என்று எழுதியுள்ளார். ஆனால் இதுகூட ஏற்க முடியாததாக இருக்கலாம். மலையாளத்தில் 'அம்பு' என்னும் தமிழ்ச்சொல் இன்றும் கையாளப்படுகிறது. அம்மொழியில் இப்பொழுது 'प', 'ब' என்னும் இரு சத்தங்களும் தரக்கூடிய எழுத்துகள் இருந்தாலும், அழுத்தமான 'ப' வே கையாளப்படுகிறது. எனவே தொடக்கத்தில் தமிழர்கள் வல்லினத்தை, எங்கு வந்தாலும் அழுத்தமாகவே உச்சரித்தார்கள் என்றும் கூடக் கருதலாம்.

கிரந்த எழுத்துகள், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழல்லா சத்தங்களைக் குறிக்கப் பயன்பட்டது.

9. ['Madras Musings' முத்தையா என்று நினைக்கிறேன் இந்தக் கேள்வியைக் கேட்டது. அவரது முகம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் கேள்வி கேட்டபோது 'இப்படி நான் Madras Musings'இல் எழுதியிருந்தேன் என்றார். பேச்சைக் கேட்க வந்த வேறு யாராவதுதான் சொல்ல வேண்டும் இவர் யாரென.] தமிழில் மட்டும் ஏன் இன்னமும் நாகரியில் இருக்கும் மற்ற சத்தங்கள் வரவில்லை? எப்பொழுது நாம் இந்த நிலையை மாற்றப்போகிறோம்? தமிழர்கள் கொடுமையாக 'Brigitte Bardot" என்னும் பெயரை 'பிரிகெட்டி பார்தாத்' என்று கொலை செய்கின்றனர்! [இப்படியாகக் குமுதத்தில் வந்ததாம்]

[இந்த அபத்தமான கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார் மகாதேவன்.] தமிழர்கள் பிறமொழியைக் கொல்வதைவிட மோசமானது தமிழர்கள் தமிழையே கொலை செய்வது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும். எனவே இன்றைய நிலையில் இதுவே கவலையை அதிகரிக்க வைக்கிறது. வேண்டிய இடத்தில் 'ஃ' போன்றவற்றை 'ப'வுக்கு முன்னால் போட்டு 'f' என்னும் சத்தம் வருமாறு செய்துகொள்கிறோம். அதுபோல் தேவைப்பட்டால் மற்ற குறியீடுகளையும் கொண்டுவரலாம்.

10. பலுசிஸ்தானில் தமிழ் போன்றதொரு மொழி இருக்கிறதாமே?

ஆம். அங்கு பிராஹுயி என்றொரு மொழி - இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. அம்மொழியில் 'ஒண்ணு', 'ரெண்டு', 'மூணு' என்றுதான் எண்கள் இருக்கும். ஏக், தோ, தீன் என்று இல்லை. உறவுகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றுக்கு தமிழ்ச் சொற்களைப் போன்றே இருக்கும். நமக்கு ஒன்றுவிட்ட உறவே இந்த மொழி.

11. நான் தற்பொழுது மதிவாணன் என்பவர் எழுதிய புத்தகத்தைப் படித்து வருகிறேன். அதில் அவர் சிந்து சமவெளி வரிவடிவம், மொழி ஆகியவை தமிழிலிருந்து வந்தது என்கிறார். உங்கள் கருத்து?

மதிவாணன் என் நண்பர். அவரை நன்கு அறிவேன். அவர் அவரது குருநாதர் தேவநேயப் பாவாணர் கருத்தையே எழுதி வருகிறார். தேவநேயப் பாவாணர் தமிழ்தான் உலகின் முதல் மொழி, முதல் வரிவடிவம், அதிலிருந்துதான் உலக மொழிகளே கிளைத்து வந்தன என்ற எண்ணம் கொண்டவர். அவர் கொள்கைகளைப் பின்பற்றினால்தான் மதிவாணன் சொல்வதை ஒருவர் ஒத்துக்கொள்ள முடியும். மற்றபடி இந்தக் கூற்றுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

12. [படு உளறலாக ஒருவர் எழுந்து கேட்ட கேள்வி இது.] தொலைக்காட்சியில் பேசுவது மட்டமாக உள்ளது என்கிறீர்கள். நம் பிள்ளைகளே இப்படித்தான் பேசுகின்றனர். இதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழில் 'ண', 'ள', 'ற', 'ழ' போன்ற எழுத்துகளை ஒழித்து விட்டார். அதனால்தான் தமிழ்க் குழந்தைகளால் தமிழை ஒழுங்காகப் பேச முடிவதில்லை. [நிசமாகவே இப்படித்தான் பேசினார் இந்த 'அறிஞர்'.]

[பொறுமையாகக் கேட்ட மகாதேவன்] எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது நான் அவரிடம் வேலை பார்த்துள்ளேன். அவர் மொழி அறிஞர் கிடையாது. ஆனால் ஒருசில மொழியறிஞர்கள் (குழந்தைசாமி போன்றவர்கள், நானும் உட்பட) சொன்னதைக் கேட்டு செயல்படுத்தக் கூடிய அரசியல் பலம் அவரிடம் இருந்தது. அவர் கொண்டுவந்தது ஆகார, ஐகார மெய்களில் ஒருசில சீர்திருத்தங்கள். நீங்கள் சொல்வது போல் ஒருசில தமிழ் எழுத்துகளை அவர் ஒழித்துவிடவில்லை.

நான் தினமணி ஆசிரியராக ஆனவுடன் செய்த முதல் காரியம் சீர்திருத்தத் தமிழ் எழுத்துகளை தினமணியில் அச்சிட வைத்ததே. என் உதவி ஆசிரியர்கள் இதனை வெகுவாக எதிர்த்தனர். [அவரது அப்பொழுதைய உதவி ஆசிரியர்களுல் ஒருவரான திருப்பூர் கிருஷ்ணன் அரங்கில் இருந்தார்.] ஆனால் நான் கணினி இயக்குபவர்களிடம் போய் உதவி ஆசிரியர்கள் எப்படி எழுதிக்கொடுத்தாலும் சீர்திருத்தப்பட்ட எழுத்துகளையே அச்சுக்கோருங்கள் என்று சொல்லிவைத்தேன்.

இதனை எதிர்த்தும், ஆதரித்தும் பல கடிதங்கள் வந்தன. இந்தச் சீர்திருத்த எழுத்துகள் 'பெரியார் எழுத்துகள்' என்று பெயரிடப்பட்டதால் ஒருவர் 'விடுதலைக்கு ஆசிரியராக வேண்டியவர் தினமணிக்கு ஆசிரியராக வந்துள்ளார்' என்று எழுதினார். அந்தக் கடிதத்தையும் வெளியிட்டோம். பலர் பெரியார் எழுத்துகளைக் கொண்டுவருவதால் தினமணியின் விற்பனை பாதிக்கப்படும் என்றனர். இவர்கள் தினமணியைப் படிப்பது 'தஞ்சைப் பிராமணர்கள்' மட்டுமே என்று நினைத்திருந்தனர் போலும். அப்படி விற்பனை குறைந்தாலும், நான் என் நிலையை மாற்ற மாட்டேன், தினமணிதான் வேறு ஆசிரியரை அமர்த்திக் கொள்ள வேண்டி வரும் என்று சொன்னேன். ஆனால் சில மாதங்களிலேயே விற்பனை 15,000 பிரதிகள் அதிகமானது.

இன்னமும் தேவை உகர, ஊகார சீர்திருத்தம். [மேற்கொண்டு என்னுடைய தமிழ் இணையம் 2003இல் குழந்தைசாமி பேசியதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கவும்.]

----

'சத்தியபுத்தோ' என்பது 'சத்யாவின் மகன்' என்று பிற்காலத்தில் வந்த ஒருவரைக் குறித்திருக்குமோ என்று பார்வையாளர் ஒருவர் அபத்தமாக ஜோக் அடிக்க, கேள்வி-பதில் நிகழ்ச்சி முடிந்தது.

No comments:

Post a Comment