Friday, June 02, 2006

ரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்

நான் எழுதிய இந்தக் கட்டுரையை முன்னதாகப் படித்துவிடவும். கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

இந்தக் கட்டுரை 10 நாள்களுக்கு முன்னதாக எழுதப்பட்டது. இன்று 'தி ஹிந்து'வில் வெளியான செய்தி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கும் என்று சொல்கிறது.

கோதுமை கொள்முதலில் ஏற்பட்ட பயங்கரமான வீழ்ச்சியினால் அரசு வேறு வழியின்றி மாநில அரசுகளுக்குத் தரும் கோதுமையின் விலையை ஏற்றவேண்டியுள்ளது. அத்துடன் மாநிலங்களுக்குக் கொடுக்கும் கோதுமையின் அளவையும் குறைக்கவேண்டியுள்ளது. அது போதாது என்று அரிசியின் விலையையும் ஏற்றப்போகிறார்கள்.

இதனால் தமிழகத்துக்கு என்ன நஷ்டம்? முதல்வர் கருணாநிதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அரிசி கிலோ ரூ. 2/-க்குக் கொடுக்கப்போகிறார். நாளை அவரது பிறந்த நாள் முதல்! அரிசி ரூ. 2 என்று வைத்து விற்றால் ரேஷன் கடைகளில் விற்பனை அதிகமாகும். இதனால் மட்டுமே மான்யத் தொகை அதிகமாகும் என்று நான் முன்னம் சொல்லியிருந்தேன். இப்பொழுது மத்திய அரசு விற்கும் அரிசியின் விலையை ஏற்றினால் தமிழகத்துக்கு ஆகும் மான்யச் செலவு நிச்சயமாக அதிகமாகும்.

கருணாநிதியால் மத்திய அரசை வற்புறுத்தி மாநில அரசுக்கு விற்கும் விலையைக் குறைக்க வைக்க முடியும் என்று சிலர் சொன்னார்கள். சிதம்பரம் "it is feasible" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆனால் நாளை அரிசி விலையை சத்தமில்லாமல் ஏற்றப்போகிறார். அப்பொழுது தமிழக அரசால் புலம்ப மட்டும்தான் முடியும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் பட்ஜெட்டின்போதோ அல்லது Policy Note எழுதும்போதோ அரிசிக்கான மான்யம் என்று ரூ. 2,500 கோடி அல்லது அதற்கு அதிகமாக, செலவாகக் காட்டுவார்கள்.

இதிலிருந்து மீள ஒரே வழிதான் உள்ளது.

அரிசி ரூ. 2/- என்பதை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ரூ. 10/- என்றும் வைக்க வேண்டும்.

அரிசி மான்யம் பற்றிய என் முந்தைய பதிவுகள்:

அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்
அரிசி மான்யம் redux
அரிசி மான்யம் (Rice subsidy)

2 comments:

  1. இதுப் போன்ற அடிப்படை விசயங்கள் கூட ஏன் தான் நம் அரசியல்வாதிகளுக்கு புரிய மாட்டேன் என் கிறதோ?

    ReplyDelete
  2. //அரிசி ரூ. 2/- என்பதை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ரூ. 10/- என்றும் வைக்க வேண்டும்.//

    தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் எல்லாம் பணக்காரர் ஆக இதான் சரியான ரூட்டு!

    ReplyDelete