Friday, August 11, 2006

கோக், பெப்சி - அடுத்து என்ன?

சென்றமுறை Centre for Science and Environment அமெரிக்க கோலா பானங்களில் நச்சுப்பொருள் அளவு அதிகமாக இருந்ததாகச் சொன்னபோது பெரிய எதிர்வினை ஏதும் இருக்கவில்லை. ஆனால் இந்தமுறை மாநிலங்கள் அளவில் வெவ்வேறு வடிவில் எதிர்வினைகள் வந்துள்ளன.

கேரளா அரசு கோக், பெப்சி விற்பனையை முற்றிலுமாகத் தடைசெய்வதாகவும் மேற்கொண்டு இந்த பானங்களைத் தயார் செய்வதையும் தடைசெய்யப்போவதாகவும் சொல்லியுள்ளது. பிற மாநில அரசுகள் கல்விக்கூடங்களில் விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன.

1. கேரளா அரசின் தடை நிச்சயமாக நீதிமன்றங்களுக்குச் செல்லும். கேரளா சரியான முகாந்திரம் இல்லாமல் மாநிலம் முழுதும் தடை செய்துள்ளது என்று தோன்றுகிறது. தடை செய்ய விரும்பியிருந்தால் தானே சில பாட்டில்களைப் பறிமுதல் செய்து அரசு சோதனைக்கூடங்களில் பரிசோதனை செய்து அந்தத் தகவலின்பேரில் தடை செய்திருக்கலாம். மேலும் அத்துடன் நச்சுப் பொருளை உணவு என்று சொல்லி விற்றதாக பெப்சி, கோக் இருவர்மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் வாயிலாக வழக்கு தொடுத்திருக்கலாம்.

இப்பொழுது அவசரப்பட்டதனால் நீதிமன்றங்களில் தேவையின்றி காலம் கழிக்க நேரிடும்.

2. பிற மாநிலங்கள் சில கல்விக்கூடங்களுக்கு அருகில் விற்பனையைத் தடைசெய்துள்ளன. இந்தத் தடையை பெப்சி, கோக் போன்றவற்றால் எளிதாக எதிர்க்க முடியாது. ஆனால் இந்த மாநிலங்கள் நிஜமாகவே கோக், பெப்சி ஆகியவற்றின் தரத்தில் சந்தேகம் வைத்திருந்தால் உடனடியாக மாதிரிகளைப் பரிசோதனை செய்ய அனுப்பியிருக்கவேண்டும்.

3. நிலத்தடி நீர் பாதிப்பு: கோக், பெப்சியின் ரசாயன அளவுக்கும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. இந்தியா போன்ற நாட்டில் கடைக்கோடி மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை; ஆனால் தொழிற்சாலைகள் மிகக்குறைந்த விலையில் அல்லது காசு ஏதும் கொடுக்காமலேயே தண்ணீரை உறிஞ்சி வளங்களைப் பாழடிக்கின்றன. இதில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல; உள்ளூர் தோல் தொழிற்சாலைகள், துணி தொழிற்சாலைகள் போன்ற பலவும் உண்டு.

கோக், பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தண்ணீர் தேவைப்பட்டால் கடல்நீரைச் சுத்திகரிப்பதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே வைத்துக்கொண்டு அவை பிழைப்பை நடத்தவேண்டும் என்றும் சொல்லலாம் என்று முன்னர் என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அதேபோல சூழல் மாசுபடுத்தும் பிற தொழிற்சாலைகளுக்கும் 'சுத்திகரிப்பு வரி' என்று கடுமையான வரி விதித்தலை நான் வரவேற்கிறேன்.

4. மத்திய அரசின் பங்கு: மத்திய அரசு இந்த விவகாரத்தை இன்னமும் சரியான முறையில் அணுகவில்லை. சென்றமுறை பாஜக ஆட்சியில் கோக், பெப்சி ஆகிய இரண்டுக்கும் 'clean chit' வழங்கப்பட்டது. இம்முறையும் பூசி மெழுகிவிடாமல் தீவிரமாக ஆராய்ந்து தவறு செய்துள்ளனர் என்று தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதிலிருந்து மத்திய அரசு வழுவக்கூடாது.

5. அந்நிய முதலீடு: FICCI, CII போன்றவையும் அத்தனை பிசினஸ் செய்தித்தாள்களும் அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்று அபத்தமான கோஷங்கள் எழுப்புகின்றன. அந்நிய முதலீடு வேண்டும் என்பதற்காக விஷத்தை விற்பதை அனுமதிக்க வேண்டியதில்லை. அதேநேரம் கோக், பெப்சி ஆகியவைமீது சரியான சாட்சியம் இல்லாமல் தண்டனை கொடுக்கக்கூடாது.

அந்தவகையில் CSE கொடுத்திருக்கும் சாட்சியங்களை கவனமாக ஆராய்ந்து அரசும் தன் கணக்குக்கு நியாயமான வகையில் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தங்களுக்குத் தேவையான பரிசோதனைகளை உடனடியாகச் செய்துவிடவேண்டும். இல்லாவிட்டால் இப்பொழுது கடைகளில் இருக்கும் சரக்கு காணாமால் போய்விடலாம்.

6. கேரளாவை மேற்கு வங்கம் பின்பற்றுமா? பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களும் களத்தில் இறங்கிவிட்டன. காங்கிரஸ், திமுக?

அன்புமணி ராமதாஸ் விரைவில் 'junk food' பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.

11 comments:

  1. மத்திய சுகாரத்துறை அமைச்சர், முன்வந்து இந்த பரிசோதனைகளின் முடிவை வைத்து, மேலும் பரிசோதனைக்கு உத்தரவிடவோ, கடுமையான நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்... புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைக்கு பரிசுவாங்கிய இந்த சமயத்தில் அவர் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்....

    ReplyDelete
  2. //
    அன்புமணி ராமதாஸ் விரைவில் 'junk food' பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்
    //

    //
    புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைக்கு பரிசுவாங்கிய இந்த சமயத்தில் அவர் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்....
    //

    கொடுத்த பரிசை திரும்ப பெற்றுவிடமாட்டார்களே :-)

    நண்பர் பத்ரி சொல்வது போல் உள்ளூர் மினரல் வாட்டர் நிறுவனங்களும் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன

    ReplyDelete
  3. பத்ரி,

    நல்ல பதிவு. மத்திய அரசாங்கம் ஒரு ஒருமித்த கருத்தை எட்டவேண்டும்.பல மாநிலங்களும் பல முடிவுகளை எடுப்பது சரியல்ல.

    கேரளா அவசரப்பட்டுவிட்டது என்பது உண்மையே உண்மை.அவர்களுக்கு ஏற்கனவே சில பிரச்சினைகள் இந்த கம்பெனிகளுடன் இருந்ததால் செய்துவிட்டார்கள்எ ன்று நினைக்கிறேன்

    ReplyDelete
  4. இந்த விவகாரத்தில்,அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அபிப்ராயம் சொல்லத் தெரியவில்லை. பத்திரிக்கை, தொலைக்காட்சி வாயிலாக, சுனிதா நாராயண் மற்றும் கோலா தரப்பினர்களின் வாதப் பிரதிவாதங்களைப் அறிந்து கொண்ட பிறகு, சுனிதா சொல்வதில் நியாயம் இருப்பதாகவே தெரிகின்றது. ஆகவே கோலா பானங்கள் குடிப்பதை விட்டுவிட்டேன்.

    இந்தத் எதிர்ப்பு அலையினால், அன்னியமுதலீடு பாதிக்கப்படும் என்று சொல்வது அபத்தத்தின் உச்சம்.

    ஊடகங்கள், கோலா பானங்களுக்கு ஆதரவாக செயல்படுவது, விளம்பர வருவாயை முன்னிட்டே.

    ReplyDelete
  5. கோலா, பெப்சி நிறுவன சம்பந்தப்பட்ட குளிர்பானங்கள் அனைத்தையும் நிறுத்துவது மிகவும் எளிதான ஆனால் வலிமையான எதிர்ப்பு.. அதை நிறுத்தி 3/4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. அவர்கள் நாட்டில் தண்ணீர்போல் கிடைத்தும் குடிக்காமல் இருப்பது எளிதானதாய் இருந்தது... எத்தனைபேர் இத்தகைய எதிர்ப்பை தங்களிடமிருந்தே, தங்கள் வீட்டிலிருந்தே தொடங்குவார்கள்.. ?

    ReplyDelete
  6. /./

    கோக், பெப்சி - அடுத்து என்ன?
    /./

    இப்படி கேட்டா உங்களுக்கு தெரியாதா மக்களை பற்றி..

    மறப்போம் மன்னிப்போம் குடிப்போம்

    ReplyDelete
  7. /./
    எத்தனைபேர் இத்தகைய எதிர்ப்பை தங்களிடமிருந்தே, தங்கள் வீட்டிலிருந்தே தொடங்குவார்கள்
    /./.

    நானும் இதெல்லாம் நிறுத்தி 8 மாசமாவுது இவ்வளவுக்கும் கம்பெனி ஃபிரியா குடுக்குது எனக்கு இருந்தாலும் குடிக்கிறது இல்லைனு முடிவில் உறுதியாக உள்ளேன்.

    ReplyDelete
  8. I don't understand. Based on a NGO's unofficial findings, are state governments reacting this much? Its ridiculous. What's the credibility of that NGO? Am surprised that so far no official body of central govt is doing the test.

    React-e panna mattom..Panna ellame romba extreme-a react pannuvom...

    ReplyDelete
  9. Hi Badri,
    Banning is not the solution. The protests and the full/partial ban in various states have already attracted some crowd in western countries [The Investors].
    Newyork Times has commented that "Indian Politicians are against Western Macho Corporates Imperialism and this has been demonstrated by the protests all over India". Though, this is not what our politicians are up to as what Newyork Times think or assume. Well, they might not know the underlying affairs. Back to the point - If banned, the ban imposed would be considered as a clear and visible crisis in every market study done by the foreign investors, if not now atleast in near future. As you said, let the government in India borrow the samples tested and conduct an eloborate test on the same samples and the fresh samples seized immediately from various parts of the country [ a delay in sample collection could be an edge to these soda mfgs ]. If tested positive for banned substance or toxic agents [is there a prescribed level of toxin?] above the prescribed level, then necessary actions should be taken to control this level and a heavy fine should be levied on these companies and the decision makers for Indian operations should be penalized for their actions [ these folks could be tried under IPC for 'mass murder' [ I personally know some one who died just because of over consuming these colas ]

    ReplyDelete
  10. முந்தாநாள் பிஸினஸ் ஸ்டாண்ட்ர்டில் சுனிதா நாராயணன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். சுனிதாவே, இந்த தடையுதரவினை முழுமையாக ஆதரிக்கவில்லை. இதற்குமுன் இப்படி கோஷங்கள் எழுந்த போது "லாபி" செய்து அதனை backburner-ல் போட்டவர்கள் தான் இவர்கள்.

    தடையுத்தரவு வேலைக்காகாது. பெப்சி, கோக்கின் வாதமானது அபத்தம். ஒருவிதமான பேட்ண்ட் கலவையினை ஒரு உட்பொருளாக உபயோகிப்பதில் இருக்கும் நச்சு அளவினை கண்காணிக்க முடியாது என்று கதைவிடுகிறார்கள். பேரக்ஸ் வாங்கினால் கூட அதில் இருக்கும் ஒவ்வொரு உட்பொருளின் அளவு டப்பாவின் பின்னால் அளவிடப்பட்டிருக்கும். உலகமெங்கும் எந்த நாட்டிலும், பெப்சி, கோக்கிற்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் இல்லை. எனவே, அவர்கள் இந்திய அரசின் தர நிர்ணயத்தினை குறை சொல்லுகிறார்கள். அன்னிய முதலீடு நிற்குமே என்பதற்காக பிரகாஷ் சொன்னதுப் போல ஊடகங்கள் ஜால்ரா அடிக்கின்றன.

    இன்றைய தினந்தந்தியில் அமீர்கான் விழாவில் கோஷம் போடுகிறார்கள் என்று எழுதுகிறார்கள். ஆக, இந்தியாவில் ஊடகங்கள் முன்னிறுத்தும் அவாதாரங்களில் தான் மக்களுக்கான செய்திகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கான agenda அவர்களுக்கு. இந்நிலையில் பெரியதாய் இந்த முறை மாற்றம் வரும் என்கிற நிலையினை எடுக்க மனம் நம்ப மறுக்கிறது. State is powerful than anything, whereas, lobbying is powerful than State is the bitter truth.

    ReplyDelete
  11. கோக்கும் பெப்சியும் தண்ணீர் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு குடிபெயரலாம்.தண்ணீரின் சந்தைவிலையை விட அதிக விலையை அவற்றை தர சொல்லலாம்.ஜுடிக்க நீர் இல்லாத பகுதிகளில் அவை நீங்கள் சொன்னதுபோல் கடல்நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

    மற்றபடி கோக்கை தடை செய்கிறேன் என கிளம்பினால் ஹி..ஹி...அது யாராலும் முடியாது.

    இன்னொரு விஷயம் தெரியுமா?ஐநாவில் உறுப்பினராக உள்ள நாடுகளின் எண்ணிக்கை 184,கோக் விற்பனையாகும் நாடுகள் எண்ணிக்கை 194.(1994 வருட தகவல்)

    ReplyDelete