Saturday, December 06, 2008

மும்பை - 2: Dangers of a Failed State

[பாகம் 1]

அதென்ன failed state? ஆங்கிலத்தில், Country, Nation, State ஆகியவை ஒரே பொருளைத் தரும் சொற்கள் அல்ல. சற்றே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் சொற்கள்.

Country என்பது புவிப்பரப்பு. நாடு. நிலமும் அதன் எல்லைகளும். அந்த எல்லைகள் மாறலாம், விரியலாம், சுருங்கலாம். Nation என்பது உணர்வால் எழுப்பப்படுவது. தேசம். தேசிய உணர்வால் ஒன்றுபடுத்தப்படும் மக்கள். கலாசாரத்தால், மொழியால், இனத்தால் அல்லது இவை அனைத்தையும் மீறிய ஏதோ ஓர் உணர்வால் ஒன்றுபட்ட அல்லது ஒன்றுபடுத்தப்பட்ட மக்கள் குழுமம்.

அப்படியென்றால் State (அல்லது Nation State) என்பது என்ன? அரசியல் அமைப்பு கொண்ட, இறையாண்மை கொண்ட, ஆட்சி அதிகாரம் கொண்ட, குறிப்பிட்ட புவிப்பரப்பை - நாட்டை - ஆளும் பல்வேறு அங்கங்கள் கொண்ட, குறிப்பிட்ட செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட தலைமையைக் கொண்ட ஓர் அமைப்பு. அரசாங்கம் என்று குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பு, முப்படைகள், பாரா-மிலிட்டரி, காவல்துறை, உளவுத்துறைகள், நீதிமன்றம், சுங்கம், வரி அமைப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சேர்த்தது.

பிரிட்டன் என்னும் நாடு மூன்று தேசிய இனங்களைக் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் தனித்தனி தேசியக் கொடிகளை வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டுகளில் தனித்தனி அணிகளை அனுப்புகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் சேர்ந்த ஒரே அணியை அனுப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒரேயோர் அரசாங்கம்தான் உள்ளது.

பாலஸ்தீன மக்கள், ஒரு தேசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி நாடு இப்போதைக்குக் கிடையாது. போராட்டம் செய்யும் ஈழத்தமிழர்கள், தங்களைத் தனி தேசமாக நினைக்கிறார்கள். இன்னும் தனி நாடு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பை உடையது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒருங்கமைந்த தேசிய உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. அத்துடன் பாகிஸ்தான் சுதந்தரம் பெற்ற அன்றிலிருந்தே இன்றுவரை ஒழுங்காக அமையாத அரசாங்கத்தால், அந்த நாடு எப்போதுமே கொந்தளிப்பில் இருந்துவருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் அவர்களுக்கு இடையில் வலுவான தேசிய உணர்வு ஏதும் இல்லை. பஞ்சாபிகள், சிந்திகள், முஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து சென்ற உர்தூ பேசுபவர்கள்), பலூச்கள், பஷ்டூன்கள் என்று பிரிந்திருக்கும் இவர்களை இணைப்பது ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு.

இதுகூட அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் உள்ளது என்று சொல்லிவிடமுடியாது. எனக்கு பாகிஸ்தானில் பல நண்பர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் சில நாள்கள் இருந்து, பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தபோது, பாகிஸ்தானியர்களைச் சந்தித்து நிறையப் பேசியுள்ளேன்.

ஆனால், பெரும்பான்மை பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதில்லை. சிலருக்கு இருந்தாலே போதும். அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் - இவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு இந்திய வெறுப்பு இருந்தால் போதும். இவர்களுடன் தீவிரவாத முல்லாக்கள், வேலையில்லாமல் ஏழைமையில் வாடுபவர்கள், காஷ்மீர் போராளிகள் ஆகியோரைச் சேர்த்தால், பயங்கரமான காக்டெயில் உருவாகிறது.

சரி, இதுமட்டும் போதுமா? மேலும் தேவை, தோல்வியுற்ற அரசாங்கம்.

தோல்வியுற்ற அரசாங்கம்தான் தேவை என்றில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவையும் வேறு பல அரசாங்கங்களும், ஒருவர் மற்றவருக்கு இதைத் தாராளமாகச் செய்துள்ளன. ஆனால், இப்போது, பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. 9/11-க்குப் பிந்தைய காலகட்டம் இது. ஓர் அரசாங்கமே வெளிப்படையாக அடுத்த நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதை பிற நாடுகளும் ஐ.நா அமைப்பும் ஏற்காது. சாட்சியம் கிடைத்தால், அதனால், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்ட நாட்டுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்.

அப்படியும், பாகிஸ்தானியர்களின் கை மும்பை தாக்குதலில் இருப்பதற்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானில் வலுவான அரசாங்கம் கிடையாது. ஏன் இந்தியா போன்ற, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க அமைப்புகூடக் கிடையாது. அரசாங்கம், பல்வேறு அமைப்புகளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அதனால்தான் பாகிஸ்தானின் அரசாங்கத்தைத் தோல்வியுற்ற அரசாங்க அமைப்பு என்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம், ராணுவம், உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள் ஆகிய இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஆனால் ஒன்றுக்கு ஒன்று உட்பட்டதாக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகளாக உள்ளன.

ராணுவம், சட்டப்படி சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. ஆனால் எந்த நேரமும் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்து, ஆட்சியைப் பிடிக்கலாம். உளவுத்துறை, சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் இல்லாமல், ராணுவத்தின்கீழ் வருகிறது. ஆனால் உளவுத்துறை தன்னிச்சைப்படி, தனக்கு வேண்டிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது. பயங்கரவாதிகள், உளவுத்துறையிடமிருந்து பணம், ஆயுதம், பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அதே நேரம் தன்னிச்சையாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்படுத்தமுடியாத அரக்கர்களாக விளங்குகிறார்கள்.

இந்தியாமீதான தாக்குதல் என்னும்போது, ஒருவர் மற்றவரைக் கலந்துகொள்ளாமலேயே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே. கார்கில் போர் நடந்தபோது, முஷரஃப்பின் பாகிஸ்தான் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்திடம் சிறிதும் கலந்துகொள்ளாமலேயே இதனைச் செய்திருந்தது. அதேபோல ஐ.எஸ்.ஐயின் பல செயல்கள், பாகிஸ்தான் ராணுவத்திடமோ, சிவிலியன் நிர்வாகத்திடமோ கலந்துகொள்ளாமல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகளும் உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன், ஆனால் அனுமதி இன்றி, இந்திய மண்ணில் கொடும் செயல்களைச் செய்கின்றனர்.

ஆனால், இதைச் சொல்லியே, non-state actors-தான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்று ஜல்லியடித்தே, பாகிஸ்தான் அரசாங்கம், முக்கியமாக அதன் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தப்பிக்க முடியாது.

பாகிஸ்தானின் சிவில் சொசைட்டி என்ன சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.

3 comments:

  1. Badri, good analysis, waiting for the next installment. It is crystal clear that President Zardari is a puppet in the hands of the military.

    ReplyDelete
  2. Pakistan is a failed state but it has many supporters among the so called left and progressive circles who always downplay the the threat of cross-border
    terrorism or the real power of military and fundamentalist forces there.They
    caution against war and some suggest India to approach UN Security Council.
    I dont think Pakistan can ever become a
    mature democracy or a state that has
    control over both military and militants.
    The systematic weakening of institutions,
    absence of a strong civil society and the
    islamic nature of the state help both
    military and militants. They share an
    unique relationship. They dont want that to be destroyed or a greater civilian control over military.Pakistan may disintegrate over a period of time.This will add more
    tensions in the region although India may
    benefit from this. Tackling Pakistan is a big challenge for India.

    ReplyDelete
  3. George Will சொன்னது நினைவுக்கு வருகிறது - "A government exists when it has a reasonable monopoly on the legitimate use of violence". இந்த விளக்கப்படி பாகிஸ்தானில் அரசாங்கமே இல்லை எனலாம். (இந்தியாவில்? Oh well...)

    ReplyDelete