Thursday, December 11, 2008

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9

சீனி. விசுவநாதன், ஒரு யாகம்போல, பாரதியின் படைப்புகளைத் தொகுத்து, பிரதி சரிபார்த்து, பாடபேதங்களைக் களைந்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அதன் ஒன்பதாவது தொகுதி இன்று நல்லி குப்புசாமி செட்டியார் - பிரம்ம கான சபா நிகழ்ச்சியாக நியூ உட்லண்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

ஓ.எஸ்.அருண், பாரதி பாடல்களை, கர்நாடக இசைக் கச்சேரியாகப் பாடினார். சுமார் ஒரு மணி நேரம். அடுத்து புத்தக வெளியீட்டு விழா. காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9-உடன் நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய புத்தகங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் புத்தகங்களை வெளியிட வழக்கறிஞர் காந்தி புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். நல்லி, விழா ஏற்பாட்டின் பின் நின்ற ஏ.நடராஜன் ஆகியோர் வழக்கம் போலப் பேசினர். காந்தி பேச்சு முழுவதும் அபத்தம். அவர் இத்தனைக்கும் ஏதோ பாரதியார் சங்கம் என்ற அமைப்பின் தலைவராம். ஆர்.எம்.வீரப்பன் பேச்சு ஓகே. கடைசியாக, சீனி. விசுவநாதன் ஏற்புரை வழங்க வந்தபோது, திடீரென மக்கள் பலரும் எழுந்திருந்தனர்.

ஆகா, என்ன மரியாதை... என்று நினைத்தால், அனைவரும் திபுதிபுவென இரண்டாம் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவை நோக்கிப் படையெடுத்தனர்.

சீனி. விசுவநாதன் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசி முடித்தார். பெரும்பாலான மக்கள் அலைகடலெனத் திரண்டு, அதற்குள்ளாக மாடிக்குச் சென்றிருந்தனர்.

***

சீனி. விசுவநாதனின் உழைப்பு அளவிடற்கரியது. தனக்குப் பொருளுதவியும் ஊக்கமும் கொடுத்தவர்களாக நல்லி குப்புசாமி செட்டியார், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் முருகானந்தம், பி.கே.சிவகுமார், பிரிட்டனைச் சேர்ந்த விமல் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவருக்கும் நமது நன்றி உரித்தாகுக.

2 comments:

  1. //நன்று உரித்தாகுக. // இல்லை
    நன்றி உரித்தாகுக.

    ReplyDelete
  2. காலவரிசைப்படி இதுவரை வந்தவற்றில் எந்த ஆண்டு வரையிலான படைப்புகள் இடம் பெற்றுள்ளன.வெளியிட்டுள்ள பதிப்பகம் எது?

    ReplyDelete