Sunday, March 14, 2004

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2

எட்மண்ட் பர்க், மோகன்தாஸ் காந்தி, AN சிவராமன்

சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இதற்கு மூன்று மேற்கோள்களைக் காட்டினார்.

முதலாவது, எட்மண்ட் பர்க், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரிஸ்டல் என்னும் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். அவரது தொகுதியின் வாக்காளர்கள் பர்க் தனது தொகுதிக்காக என்று ஒன்றும் செய்யவில்லை என்று குறை கூற, பதிலாக பர்க் இவ்வாறு கூறினாராம்:

"ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிக்கு, தன் தொகுதி மக்களுக்கு வெகு அருகாமையிலும், அவர்களோடு நெருக்கமாக தொடர்பு வைத்திருப்பதிலும்தான் மகிழ்ச்சியும், பெருமையும் உள்ளது. ஒரு பிரதிநிதிக்கு, தொகுதி மக்களின் விருப்பங்கள் மீது அதிக அழுத்தமும், அவர்களது கருத்துகள் மீது அதிக மரியாதையும், அவர்களது தேவைகளின் மீது அதிக கவனமும் இருக்க வேண்டும். தனது ஓய்வு, கேளிக்கை, திருப்தி ஆகியவற்றை, தன் தொகுதி மக்களுக்காக தியாகம் செய்வதும், தன் தொகுதி மக்களின் தேவைகளைத் தனது தேவைக்கு மேலாகக் கருதுவதும் ஒரு பிரதிநிதியின் கடமை. ஆயினும், அந்த பிரதிநிதி, தனது நடுநிலையான கருத்துகளை, முதிர்ந்த தீர்ப்புகளை, தெளிந்த மனசாட்சியினை உங்களுக்காகவோ, எந்தவொரு மனிதனுக்காகவோ, எந்த மக்களுக்காவுமோ பலிகொடுக்கக் கூடாது. இவற்றை ஒரு பிரதிநிதி உங்களது அத்தாட்சியினால் பெறவில்லை; நீதி, அரசியல் நிர்ணயச் சட்டம் அகியவற்றால் கூடப் பெறவில்லை. கடவுளிடமிருந்து பெறுகிறான் - அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் கடவுளிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உங்கள் பிரதிநிதி உங்களுக்குத் தன் உழைப்பை மட்டும் கொடுப்பதில்லை, தன் அறிவுரைகளையும்தான். உங்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதற்காக அந்த அறிவுரைகளைக் காற்றில் பறக்கவிட்டால் அவன் உங்களுக்கு எந்த விதத்திலும் சேவை செய்வதில்லை, உங்களையே கைவிடுகிறான்."
[என் தமிழாக்கம். ஆங்கிலத்தில் மேற்கண்ட சுட்டியில் 4.1.22 க்கு செல்லவும்]

இது நடந்தது 1774இல். இப்படியெல்லாம் பேசியபின், அடுத்த 1780 தேர்தலில், பர்க் தோல்வியடைந்தார்.

இரண்டாவதாக 1920இல் மோகன்தாஸ் காந்தி "Young India" இதழில் எழுதிய தலையங்கத்திலிருந்து. [தலையங்கம் இணையத்தில் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.] "தேர்தலின் போது 'நற்குணங்கள்' பொருந்தியவர்களாகப் (men of character) பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அதன்பிறகு அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே ஒரு நல்ல ஆட்சியைத் தருவார்கள்."

மூன்றாவதாக தினமணியின் ஆசிரியராக 1944இலிருந்து 1987வரை பணியாற்றிய AN சிவராமன் 1984இல் தினமணியில் எழுதிய கட்டுரை - 'யாருக்கு ஓட்டுப்போடுவது?'.

முதலில் சிவராமன் எழுப்பும் கேள்வி: யாருக்கு ஓட்டுப்போடுவது?

பதில்: நல்லவருக்கு.

கேள்வி: யார் நல்லவர்?

பதில்: தன்னை அரசியல் தரகராக எண்ணாமல், தன் பதவியின் மூலம் தனக்கோ, தன் உறவினர்களுக்கோ வசதிகளைப் பெருக்கிக்கொள்ளாமல் இருப்பவர். பொதுமக்கள் நன்மையையே முன்னிலையில் வைத்திருப்பவர். சாதி, மதம் ஆகியவைகளை முன்னிறுத்தி குழப்பங்களை விளைவிக்காதிருப்பவர். பொருளாதாரம் பற்றித் தெரிந்திருக்காவிட்டாலும், தேர்தலில் வென்றபின்னராவது கற்றறிந்து கொள்பவர் - இவரே நல்லவர்.

இப்படிப்பட்ட நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்.

இந்த மூன்று மேற்கோள்களையும் காட்டிய பின்னர், வெங்கடசுப்ரமணியன் நமக்கிருக்கும் முக்கியமான பிரச்சினையை முன்வைத்தார். ஒரு அரசியல் கட்சி நல்லவர்களுக்குத் தேர்தலில் நிற்க வசதி செய்தால்தானே, நாம் இருக்கும் வேட்பாளர்களில் மிக நல்லவரைத் தேர்ந்தெடுப்பது? ஆனால் இன்றைய தேதியில் அரசியல் கட்சிகள் 'வெற்றிவாய்ப்பு' யாருக்கு அதிகமாக இருக்கிறதோ, அவர்களைத்தான் தேர்தலில் நிற்கவைப்பேன் என்கின்றன. 'வெற்றிவாய்ப்புள்ளவர்' யார்? இன்றைய தேதியில் யாருக்கு பணபலமும், ஆள்பலமும் (ஆள்பலம் என்றால் அடிதடி பலம்) இருக்கிறதோ, அவர்தான் வெற்றிவாய்ப்புள்ளவர் என்றாகி விட்டது. அதுவும் ஒரு அரசியல் கட்சி, தமிழகத் தேர்தலில் தன் சார்பில் நிற்க ரூ. 60 லட்சம் கட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. (திமுக)

இப்படி இருக்கையில் நம்மால் என்ன செய்ய முடியும்? இதைப் பற்றி அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment