Thursday, March 25, 2004

आम आदमी को क्या मिला?

உங்களுக்குப் புரியாத மொழியில் காங்கிரஸ் பல விளம்பரங்களை செய்தித்தாள்களில் எடுத்து வருகிறது. இது பாஜக அரசின் "भारत उदय/இந்தியா ஒளிர்கிறது" விளம்பரங்களுக்கு எதிராக எடுக்கப்படுவது.

பொதுமக்களுக்கு என்னதான் கிடைத்தது?

பாஜக 'இந்தியா ஒளிர்கிறது' என்று சொல்வதெல்லாம் பொய். கடந்த 6 1/2 வருடங்களில் பொதுமக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பது, பங்குச்சந்தையில் ஊழல் போன்றவை மட்டுமே - என்பது காங்கிரஸின் வாதம்.

எப்படி பாஜகவின் 'இந்தியா ஒளிர்கிறது' விளம்பரங்களை எதிர்க்கிறேனோ, அப்படியே காங்கிரஸின் எதிர்மறை விளம்பரங்களையும் எதிர்க்கிறேன். 6 1/2 வருடங்களின் இந்தியாவில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனலாமே ஒழிய ஒன்றுமே உருப்படியாக நடக்கவில்லை என்பது அயோக்கியத்தனம். பங்குச்சந்தை ஊழலின் ஆரம்பம் ஹர்ஷத் மேஹ்தா. அது நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தது? காங்கிரஸ்தான். நேற்றைய கேதன் பாரிக் பங்குச்சந்தை ஊழல் நடந்தது பாஜக ஆட்சியில்.

UTI தொல்லைகள் நடைபெற்றது பாஜக ஆட்சியில்தான். ஆனால் அதற்கான வித்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நடைபெற்றது. மேலும் பாஜக அரசு யூ.டி.ஐ குழப்பத்தைக் கையாண்ட விதம் நன்றாகத்தான் இருந்தது.

வட்டி விகிதம் குறைவது என்பது தவிர்க்க முடியாதது. இதனால் பலருக்கு நன்மை, சிலருக்கு - முக்கியமாக வங்கியிலிருந்து வரும் வட்டியை மட்டுமே நம்பி வாழும் வயதானவர்களுக்கு - தீமை. (பலர்-சிலர் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.) வங்கியில் பணத்தைப் போட்டு அதிலிருந்து வரும் வட்டியை மட்டுமே நம்புவது சரியான செய்கையல்ல. முதிர்ச்சியடைந்த பொருளாதார நாடுகளில் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (Pension Fund Investments) உங்கள் வைப்பு நிதிக்கு அதிக வசூலைக் கொடுக்கும். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு அனுபவக்குறைவானது. காப்பீட்டு நிறுவனங்களும் மிகவும் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளன. எல்.ஐ.சி கூட யூ.டி.ஐ போன்று இல்லாமல் தன் பல காப்பீட்டுத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது (from fixed returns to market linked bonus). நம் பொருளாதாரம் முதிர்ச்சி அடையும் நிலையில் பல பொறுக்கிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பணம் செய்யப் பார்ப்பார்கள். ஹர்ஷத் மேஹ்தா, கேதன் பாரிக் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்களே. இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு அப்பொழுது ஆட்சி நடத்தும் அரசினைக் குறை கூறுவதில் எந்தப் பிரயோசனமுமில்லை.

காங்கிரஸ், பாஜக இரண்டின் விளம்பரங்கள் பற்றியும் அவற்றைப் பற்றிய என் கருத்துகளையும் வரும் நாட்களில் இங்கு எழுதிகிறேன்.

No comments:

Post a Comment