Wednesday, March 31, 2004

பாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்

இன்று காலை பாகிஸ்தான் விசா வாங்க சென்னையிலிருந்து புது தில்லிக்கு வந்தேன். லாகூரில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்டு போட்டியைப் பார்ப்பதாக எண்ணம்.

காலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு, மாலை நான்கு மணியளவில் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் கிடைத்தது. இன்று மாலையே மீண்டும் விமானம் ஏறி சென்னை போய்விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

இன்று நடந்த நிகழ்ச்சிகள் கீழே:

06.45 சென்னையில் விமானம் ஏறல்

09.20 புது தில்லி வந்தடைதல்

10.15 பாகிஸ்தான் தூதரகம் வந்தடைதல்.

தூதரகம் வாசலில் பலர் தட்டச்சு இயந்திரத்துடனும், கையில் விண்ணப்பப் படிவங்களுடனும் அமர்ந்துள்ளனர். அவர்களிடம்தான் விண்ணப்பப் படிவங்களைப் வாங்கி அதில் அவர்களையே தட்டச்சு செய்து தரச்சொல்லிப் பெற வேண்டும். விண்ணப்பப் படிவம் நான்கு இதழ்களாக உள்ளது. கார்பன் பேப்பரில் செய்யப்பட்டது. தட்டச்சு செய்தால் நான்கு படிவங்களிலும் நிரப்பப் பெறும். இதற்கான செலவு ரூ. 60.

10.25 விண்ணப்பப் படிவம் நிரப்பி முடிதல்

கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு விசா வழங்கவென்று தனியாக ஒரு வரிசை துவங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஏற்கனவே பலர் இருந்தனர்.

10.40 விண்ணப்பப் படிவத்தை பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் கொடுத்தல். அவர் பதிலுக்கு எந்த ரசீதையும் கொடுக்கவில்லை. மாலை வந்து பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார். விசா பெறும் கட்டணம் ரூ. 15 (!!)

ஆகா, வேலை முடிந்தது, மாலை 16.00 மணிக்கு விசா அடித்த பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கிளம்பி, தில்லி சரவணபவனில் உணவை முடித்தோம். மதியம் எங்கள் அலுவலகத்தில் தில்லிக் கிளைக்குச் சென்று சற்று கிரிக்கெட் பார்த்துவிட்டு (அதுதான் எங்கள் வேலையே!) நான்கு மணியளவில் மீண்டும் பாகிஸ்தான் தூதரகம் சென்றோம்.

16.00 வரிசையில் நிற்றல்

16.30 வரிசையில் நிற்றல்

17.00 கால் வலித்ததால் கீழே சிறிது உட்கார்ந்து விட்டு மீண்டும் வரிசையில் நிற்றல்

17.30 கவுண்டரில் ஆள் யாரையும் இன்னமும் காணவில்லை. விமான நிலையத்தைக் கூப்பிட்டு இரவு 16.50க்கு திரும்பிப் புறப்படவிருந்த பயணச்சீட்டை தற்காலிகமாக நிறுத்தியாயிற்று.

18.00 இன்னமும் ஆள் யாரையும் காணோம். சுற்றி சுமார் 60 பேர் விசா எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான் முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெறுகிறது. பாகிஸ்தான் 207/9 இரண்டாவது இன்னிங்ஸில். சிலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், அது முடிந்துதான் பாஸ்போர்ட்டுகளை வழங்க வருவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்!

18.35 கவுண்டர் திறக்கப்படுகிறது. சுமார் 2.35 மணி நேரம் தாமதமாக!

18.45 ஒரே குழப்பம். 70 பேர்கள் கவுண்டரைச் சுற்றிக் குழுமிக் கொள்கிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி, கொஞ்சம் அடிதடி, கைகலப்பு ஏற்படுகிறது.

19.15 ஒருவழியாக என் பெயர் கூப்பிடப்பட்டு என் பாஸ்போர்ட் கிடைக்கிறது.

19.45 என்னுடன் வந்த மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகள் ஒரு வழியாகக் கையில் கிடைக்கின்றன

விசா அதிகாரி டமாலென்று கதவைச் சாத்திக் கொண்டு 'எஸ்கேப்' ஆகிறார்! இன்னம் பலருக்கு பாஸ்போர்ட்டுகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்த நாள் கிடைக்கும் என்கிறார். எப்பொழுது என்று சொல்லவில்லை. பலர் தங்கள் பாஸ்போர்ட் எப்பொழுது கிடைக்கும் என்று பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதிரியாக அந்த இடத்தை விட்டகன்று இரவு தங்க ஒரு விடுதியைப் பிடிக்கிறோம். நாளைக் காலை விமானம் பிடித்து சென்னை மீண்டும் வர வேண்டும். பிறகு சனியன்று சென்னை->புது தில்லி->லாகூர். ஆரம்பமே படு குழப்பம். பார்க்கலாம் போகப் போக எப்படியென்று.