Friday, March 26, 2004

Fetus Protection Bill

அமெரிக்க செனட் Fetus Protection Bill என்றொரு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் மீது ஏற்படும் தாக்குதல்களும் தனியான குற்றமாகக் கருதப்படும். அதாவது கருவுற்றிருக்கும் (எந்த நிலையில் உள்ள கருவானாலும்) பெண்ணின் மீது ஒரு தாக்குதல் நடந்தால் அது இரண்டு குற்றங்களாக எடுத்துக்கொள்ளப்படும் - தாயின் மீது + கருவின் மீது. இதனால் தாக்கியவருக்கு தண்டனை அதிகமாகும்.

இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இந்தச் சட்டத்தில் பொடி வைக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறார்கள் அமெரிக்கர்கள் பலர். அமெரிக்காவில் பல காலமாக நடந்து வரும் ஒரு பிரச்சினை கருக்கலைப்பு பற்றியது. அமெரிக்காவின் அடிப்படைவாதிகள், கிறித்துவ மத தீவிரர்கள் கருக்கலைப்பு செய்வது பாவம், தவறு, குற்றம் என்கின்றனர். பெண்ணுரிமை அமைப்புகள், பெண் சுதந்திரம் விரும்புபவர்கள் ஆகியோர் தன் கருவை ஒரு காலம் வரையாவது கலைக்கக் கூடிய உரிமை கருவுற்ற பெண்களுக்கு இருக்க வேண்டும் என்கின்றனர். இந்தப் பிரச்சினை ரோ vs வேட் என்னும் அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்கில் போய் முடிந்தது. அந்த வழக்கின் 1973 தீர்ப்பில் கருக்காலத்தை மூன்று காலாண்டுகளாகப் பிரித்து முதல் இரண்டு காலாண்டில் எந்தப் பெண்ணும் விரும்பினால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும், மூன்றாவது காலாண்டில் தன்னிஷ்டப்படி செய்து கொள்ள முடியாது என்றும், மாநில அரசின் அனுமதி கிடைத்தால்தான் - அதுவும் அவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்ளாவிட்டால் தாயின் உயிருக்கே ஆபத்து வரும் என்ற நிலை இருந்தால்தான் - கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும் என்றும் சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று வரை அமெரிக்காவே இரண்டாகப் பிரிந்து pro-life (உயிர்க்கட்சி) vs pro-choice (உரிமைக்கட்சி) என்றாகி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சண்டை போட்டுக்கொள்வார்கள். ரிபப்ளிகன் கட்சி பொதுவாக உயிர்க்கட்சி. டெமாக்ரடிக் கட்சி உரிமைக்கட்சி.

இப்பொழுது தாக்கலான சட்டத்தில் 'பிறக்காத குழந்தை' என்பது "கருப்பையில் இருக்கும் எந்த நிலை வளர்ச்சியிலுமான ஹோமோ சாப்பியன் இனத்தைச் சேர்ந்த கரு" என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களின் போது டெமாக்ரடிக் கட்சியின் பேட்டி மர்ரே என்பவர் 'உயிர் எப்போது தொடங்குகிறது' என்னும் விவாதத்தை விட்டுவிடலாமே என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சித்துள்ளார். ஆனால் அந்த சட்டத்திருத்தம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

இப்பொழுது வந்துள்ள சட்டம் சட்டபூர்வமான கருக்கலைப்பைத் தடை செய்யவில்லை என்றாலும், அடுத்த விவாதம் அங்குதான் செல்லப்போகிறது. வயிற்றில் உள்ள கருவை அடுத்தவர் தாக்கினால் அது குற்றம் எனும்போது அந்தக் கருவைச் சுமக்கும் தாயே - அந்தக்கரு எந்த நிலை வளர்ச்சியில் இருக்கும்போதும் - அதை அழிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம் என்று 'உயிர்க்கட்சி'யினர் கேட்க ஆரம்பிக்கலாம்.

இன்னும் சில வருடங்கள் ரிபப்ளிகன் கட்சியினர் அமெரிக்க அதிபராகவும், செனட்டில் அதிகப் பெரும்பான்மையுடனும் இருந்தால் தங்களவர்களை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அதிகமாகக் கொண்டுவர முடியும். அப்பொழுது ஒரு வழக்கு கருக்கலைப்பை எதிர்த்து நடந்தால், மேற்படி சட்டத்தின் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் முடிவு வேறு மாதிரியாக இருக்கலாம்.

No comments:

Post a Comment