Sunday, March 14, 2004

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3

1. அரசியல், ஆட்சியாளர்களிடையே ஊழல் மலிந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் தலைமைச் செயலாளுநருக்கு (chief executive) அவரது கட்சியின் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் தினசரி ஓயாது கொடுக்கும் தொல்லையே. இந்த உறுப்பினர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பதவி போய்விடும் என்ற பயம் ஓயாது இருக்கும்போது தலைமைச் செயலாளுநர் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் செய்யும் ஊழலை சகித்துக் கொள்கிறார், அடுத்து வரவேற்கின்றார், பின்னர் அவர்களைத் தூண்டவே தொடங்குகிறார். [tolerate, encourage, demand]. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் உள்ளவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இங்கு கட்சித் தலைவர்கள் கையில் பிரம்மாண்டமான அதிகாரம் உள்ளது போல் தோன்றுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் நிலைமையே வேறு.

தலைமைச் செயலாளுநர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்துமாறு செய்யலாம். இதனால் ஊழல் குறைய நிச்சயம் வாய்ப்புள்ளது.

2. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதை விட கட்சியைத் தேர்வு செய்யலாம். அதாவது ஒருசில கட்சிகள் தங்கள் பெயர்களை முன்வைக்க, வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தமான கட்சிக்கு வாக்களிக்க, அதிக வாக்குகள் பெற்று வென்ற கட்சி, தங்கள் கொள்கைகளை நடத்தக்கூடிய நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஆட்சி புரியலாம்.

ஒரு ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் கிட்டத்தட்ட (ஒரு முறைக்கான மத்திய, மாநில தேர்தல்கள் அனைத்திற்கும் சேர்த்து என்று நினைக்கிறேன்) ரூ. 70,000 கோடிகள் செலவு செய்கின்றனர் என்று கணித்துள்ளது. இந்தச் செலவு தேர்தல்களை வெல்லவும், வென்றபின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும் சேர்த்து...

3. அரசியல் கட்சிகள் "வெற்றிவாய்ப்புள்ளவரை" மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்வு செய்கின்றனர் என்னும்போது, நாம் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் விதமாக 'எங்களுக்குத் தேவை நல்ல வேட்பாளரே' என்று அரசியல் கட்சிகளிடம் கேட்கிறோமா? இல்லையே?

பலர் வாக்களிக்கப் போவதேயில்லை. ஒரு கிராமத்திலிருந்து பெருநகரம் செல்லும்போது வாக்களிப்பவர் எண்ணிக்கை [மொத்த வாக்களிக்கக் கூடியவர்களின் விழுக்காடாகப் பார்க்கையில்] வெகுவாகக் குறைகிறது.
* கிராமப் பஞ்சாயத்து - 75% வாக்களிப்பு
* ஊராட்சி ஒன்றியம் - 65% வாக்களிப்பு
* சிறு நகரமன்றம் - 55% வாக்களிப்பு
* மதுரை/கோவை மாநகராட்சி - 45% வாக்களிப்பு
* சென்னை மாநகராட்சி - 35% வாக்களிப்பு
2001 சட்டமன்றத் தேர்தலில் அடையாறு முழுவதிலுமான வாக்களிப்பு 27%, திருவான்மியூர் 25%, கீழ்ப்பாக்கம் 20% மட்டுமே! படித்தவர்கள், நடுத்தர/மேல்தட்டு மக்கள் எதையோ காரணம் காட்டி வாக்களிக்கப் போகாதிருக்கின்றனர்.

கேட்டால், 'எல்லாருமே அயோக்கியர்கள், யாருக்கு ஓட்டளித்து என்ன ஆகப்போகிறது' என்று கோணையாகப் பேசுகின்றனர். அப்படித் தோன்றினால் வாக்குச்சாவடிக்குப் போகாதிருந்து பிரயோசனமில்லை. வேறு யாராவது கள்ள ஓட்டு போட வாய்ப்பு உள்ளது. அதனால் தெர்தல் நடைமுறை விதிகள் 1961, 49 ஓ பிரிவின்படியாவது நடந்து கொள்ளலாம்.
"49 ஓ - வாக்களிப்பதில்லை என வாக்காளர் முடிவு செய்வது - ஒரு வாக்காளர் படிவம் 17 A யில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாகப் பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெரு விரல் ரேகையையோ விதி 49 L1 படி வைத்த பிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17 Aயில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்தக் குறிப்புக்கு எதிரே பெற வேண்டும்." [மேற்கோள் தீம்தரிகிட மார்ச் இதழிலிருந்து]
இவ்வாறு செய்கையில் ஒரு தொகுதியில் மொத்தம் வாக்களிக்க வந்தது எத்தனை பேர், அதில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க மறுத்தது எத்தனை பேர் என்பது அரசியல் கட்சிகளுக்குப் புலப்படும். இதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் மீது நமக்கு அதிருப்தி உள்ளது என்பதை கட்சிகளுக்குப் புரிய வைக்கலாம். [மார்ச் தீம்தரிகிட தலையங்கத்தில், ஞாநி சங்கரன் இதைத்தான் தான் செய்யப்போவதாகச் சொல்கிறார். இன்று - அதாவது 14 மார்ச் 2004இல் - நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்திலும், யாருக்கும் வாக்களிக்கத் தோன்றவில்லையானால் இந்த 49 ஓ பிரிவின்படியாவது நடக்க வேண்டும் என்று பேசினர். இந்தக் கூட்டம் பற்றி நாளை எழுதுகிறேன்.]

4. தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களெல்லாம் சொள்ளை என்று குற்றம் பேசாமல், நாமே தேர்தலில் நிற்பது. 'தேர்தல் என்றால் நிறைய செலவாகும், பொறுக்கிகள் மட்டும்தான் அரசியலுக்கு வருவர்' என்று கோணை பேசாமல், கீழ்மட்டத் தேர்தலில் நிற்கலாமே? அதாவது பஞ்சாயத்துத் தேர்தல், மாநகராட்சி உறுப்பினர் தேர்தல் ஆகியவை எல்லாம் கட்சி முறைப்படித்தான் தேர்தல் என்றில்லையே? அங்கு தொடங்கினால் ஒரு தேர்தலில் நிற்பது பற்றி முழுவதும் கற்க முடியுமே?

வெங்கடசுப்ரமணியன், பேச்சை முடிக்கும்போது ஜேம்ஸ் மாடிசன் மேற்கோள் காட்டினார்: (1778இல் சொன்னது)
"But I go on this great republican principle, that the people will have virtue and intelligence to select men of virtue and wisdom. Is there no virtue among us? If there be not, we are in a wretched situation."

No comments:

Post a Comment