வரும் பாராளுமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் நிற்கப்போகும் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
தென் சென்னை: T.R.பாலு (திமுக), பாதர் சையீது (அஇஅதிமுக)
தென் சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் பாலு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவது சென்னை SIET அறக்கட்டளையினை நடத்தும் பாதர் சையீது என்னும் பெண்மணி. இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர் என்று அறியப்படுகிறார். ஜெயலலிதா இவரை சமீபத்தில் வக்ஃப் வாரியத் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளார். தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி அரசியலில் ஆர்வம், ஈடுபாடு என்னவென்று தெரியவில்லை. அரசியலுக்குக் கற்றுக்குட்டி என்பது மற்ற அஇஅதிமுக அமைச்சர்கள் இவருக்கு எப்படி 'கைகூப்பி' பொதுமக்களைக் கும்பிடுவது என்றி வெளிப்படையாக சொல்லிக் கொடுப்பதிலிருந்தே தெரிகிறது. ஆனால் 'கும்பிடு' போடத் தெரிந்தவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லையே? முன்னாள் அமைச்சர் பாலு மீது எந்த ஊழல் வழக்கோ, வேறு எந்த குற்றச்சாட்டுகளோ எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் இவர் அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்றால் எப்பொழுதெல்லாம் ஜெயலலிதா கட்டிடத்தை இடிப்பேன், யானையைக் குத்துவேன் என்று வரும்போதெல்லாம், ஆபத்தில் மாட்டியுள்ளவர்களைக் காப்பாற்ற முயன்றதே.
பாதர் சையீதுக்கு தமிழ் பேசத் தடுமாற்றம் என்று தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார்.
பாலுவை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை.
மத்திய சென்னை: தயாநிதி மாறன் (திமுக), N.பாலகங்கா (அஇஅதிமுக)
மத்திய சென்னை நான் வசிக்கும் தொகுதி. இங்கு மறைந்த அமைச்சர் முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி நிற்கிறார். எதிர்த்துப் போட்டியிடுபவர் அஇஅதிமுகவின் பாலகங்கா. இவர் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர். அந்தத் தேர்தலில் மிக மோசமான முறையில் இரு தரப்பிலிருந்தும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்காளர்களை பயமுறுத்துவது, கள்ள வாக்குகள் என்று அசிங்கங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து நிகழ்ந்தது. பாலகங்கா மிகக் கடுமையாக "உழைத்ததால்" ஜெயலலிதா அவருக்குப் பரிசாக குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியை வழங்கினார்.
இப்பொழுது தயாநிதி மாறனை எதிர்த்து மாறன் குடும்பத்திடமிருந்து மத்திய சென்னைத் தொகுதியைக் கைப்பற்ற வேண்டிய பொறுப்பு பாலகங்காவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
தயாநிதி மாறன் தேர்தலுக்குப் புதியவர். இவரை சில வருடங்களுக்கு முன்னர் குங்குமம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளேன். தொழில்முறையில் பெயரெல்லாம் இவரது அண்ணன் 'சன் டிவி' கலாநிதி மாறனுக்கே போகிறது. சுமங்கலி கேபிள் விஷன், குங்குமம் இதழ் ஆகியவற்றை இவர்தான் நடத்துகிறார் என்று கேள்வி.
இந்தத் தேர்தலில் என் வாக்கு தயாநிதி மாறனுக்கே.
வட சென்னை: C.குப்புசாமி (திமுக), சுகுமாரன் நம்பியார் (பாஜக)
78 வயதாகும் குப்புசாமி மீண்டும் இதே தொகுதியில் திமுக சார்பில் நிற்கிறார். குப்புசாமி தொழிற்சங்கங்களில் ஈடுபட்டவர். எதிர்த்துப் போட்டியிடுபவர் பாஜகவின் சுகுமாரன் நம்பியார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர். திரைப்பட நடிகர் M.N.நம்பியாரின் மகன்.
இருவர் பெயரிலும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.
இளைஞர் சுகுமாரன் நம்பியாருக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று தோன்றுகிறது.
Conversations with Aurangzeb
5 hours ago
No comments:
Post a Comment