Saturday, March 27, 2004

ஐஐடி மும்பையின் 'அடைகாப்பகம்'

Incubator என்பதை அப்படியே அடைகாப்பகம் என்று மாற்றியுள்ளேன். ராஜேஷ் ஜெயின் தன் வலைப்பதிவில் டெக் ரிவ்யூவில் வெங்கடேஷ் ஹரிஹரன் எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டியுள்ளார்.

இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கலாம். இங்கு தொழில் என்பது ஒரு 'பெட்டிக்கடை' திறப்பது அல்ல. ஒரு அறிவுசார் தொழில்நுட்பத்தையும், சில புது யோசனைகளையும் வைத்து ஒரு தொழில் திட்டம் தயாரித்து, லட்சக்கணக்கில் முதலீடு செய்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி, சிலரை வேலைக்கு அமர்த்தி, ஒரு பொருளையோ, சேவையையோ உண்டாக்கி, அதன்மூலம் பொருளீட்டி, வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை மேல் நிறுத்துவது.

ஏன் இந்தியாவில் இது கடினம்?

* பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை முதலீடு செய்து தொழில் புரிவது குறிப்பிட்ட சில சமூகங்களில் மட்டுமே இருந்து வந்தது. நடுத்தர மக்களின் வீச்சுக்கு வெகு வெளியில் இருந்தது.

* சேமிப்பிலிருந்து மட்டுமே தொழில் தொடர முடிந்தது. துவக்க கட்டத் தொழில்களுக்கு வங்கிக் கடன் பெறுவதே குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் இம்மாதிரித் தொழில்கள் வெற்றியடைய நட்டமானாலும் பரவாயில்லை என்னும் வகையில் போடப்படும் பங்கு மூலதனம் (risk equity) தேவையாயிருந்தது. வெறும் வங்கிக் கடனில்லை. அவ்வாறு முதலீடு செய்யும் 'angel investor', 'venture capitalist' யாரும் இல்லை. இன்றும் கூட அப்படிப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதே வருந்தத் தக்க விஷயமாகும். (இல்லையா பிரகாஷ்?)

* இந்தியாவில் இப்பொழுதைக்கு தொழில் முனைவோர் முதலீட்டு நிதிகளை (venture capital funds) நடத்துவோர் அனைவரும் BPO/Call center நிறுவனங்களுக்கு மட்டுமே பணம் கொடுக்க விரும்புகிறார்கள். இக்கு (risk) எடுக்க யாரும் விரும்புவதில்லை. தகுதியுள்ள தொழில் முனைவோரைத் தேடிக் கண்டுபிடிப்பதில்லை.

* பண முதலீட்டுக்கு மேலாக வழிகாட்டுதல் (mentoring) என்பது வெகு அவசியம். புதிதாகத் தொழில் புரியும் தொழில் முனைவோர் இதுகாறும் மற்றவர்கள் செய்த அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வார்கள். சரியான வழிகாட்டி இந்த புதைகுழிகளில் விழாவண்ணம் தப்பிக்க வழிகாட்டுவார். அதுவும் இந்தியாவில் இப்பொழுதைக்கு இல்லை.

ஐஐடி மும்பை உருவாக்கியுள்ள அடைகாப்பகத்தில் அங்கு படித்துப் பட்டம் பெறும் மாணவர்கள் தொழில் தொடங்க மூலதனம், வழிகாட்டுதல் போன்ற உதவிகளைச் செய்கிறார்களாம். இதே போல ஐஐடி கான்பூர், ஐஐடி தில்லி ஆகியவையும் ஆரம்பித்துள்ளனவாம். ஐஐடி சென்னையும் ஆரம்பிக்கும் நிலையில் இருப்பதாக அறிகிறேன்.

இந்த முயற்சி ஐஐடி சென்னையில் யார் தலைமையில் நடைபெறுகிறது என்றறிந்து அந்த முயற்சியில் என்னால் ஆனதைச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment