Monday, March 08, 2004

கேமரா செல்பேசிகள்

பிரகாஷ் தன் வலைப்பதிவில் கேமரா செல்பேசிகள் எப்படி தனி மனிதனது அந்தரங்கத்தைத் தாக்குகிறது என்று தி ஹிந்து செய்தியை முன்வைத்து எழுதியுள்ளார்.

Sony Ericsson T68iஎந்தப் புதுத் தொழில்நுட்பம் வந்தாலும் மனிதனின் வக்கிர புத்தி அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத்தான் முயற்சிக்கும். VCD player வந்தவுடன் அதிகமாக விற்பனை ஆவது 'பலான' படங்களும், திருட்டு சினிமா VCDக்களும்தான். முந்தையது "immoral" என்று சிலர் சொல்லலாம் [நான் சொல்லமாட்டேன்], பிந்தையது "illegal". இணையம் கிடைத்தவுடன் செக்ஸ் தளங்கள்தான் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தன. தொடக்க காலத்தில் பலர் இணையம் என்றாலே 'பசங்கள்ளாம் கெட்டுப் போயிடுவாங்க' என்ற வகையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதுபோலத்தான் இப்பொழுதும். கேமரா செல்பேசிகளால் பல நன்மைகள். ஆனால் முதலில் வெளிவருவது அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் படங்களே. நம் நாட்டில் இந்தப் பிரச்சினை வருமுன்னரே ஜப்பானிலும், (தென்) கொரியாவிலும் பெரிதாகி, அதற்கான மாற்றும் சட்டப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன பிரச்சினைகள், எப்படித் தீர்க்கலாம்?

1. கேமரா செல்பேசிகள் 'பேசுகிறார்களா' அல்லது 'படம் எடுக்கிறார்களா' என்று தெரியாவண்ணம் இருக்கிறது. ஜப்பானிலும், கொரியாவிலும் இந்த கேமரா செல்பேசிகள் படம் எடுக்கும்போது 'விர்ர்ர்' என்று சத்தமோ, அல்லது 'கிளிக்' என்று சத்தமோ போடும் வண்ணம் இருக்கவேண்டும் என்று சட்டமியற்றியுள்ளனர். இந்தச் சத்தமும் 65 டெசிபல் அளவிற்கு இருக்குமாறும் (அதாவது வெட்டிப்பேச்சுக்கிடையிலும் கண்டு பிடிக்கக்கூடிய அளவிற்கு) வேண்டும் என்று சொல்கின்றனர்.

2. பெண்களே உடைமாற்றிக் கொள்ளும் இடங்களில், நீச்சல் குளங்களில் எல்லாம் இந்த கேமரா செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றனவாம். உலகெங்கிலும் பெண்கள் உடைமாற்றும் இடங்களில் அனுமதிப்பது மற்ற பெண்களைத்தான். சந்தேகப்படும்படி யாரேனும் கையில் கேமரா செல்பேசியுடன் உலவிக்கொண்டிருந்தால் நேரடியாக அவர்களைக் கேள்வி கேட்கலாமே? நீச்சல் குளங்களில் கண்டிப்பாக கேமரா செல்பேசி எடுத்து வரக்கூடாது என்று கட்டளைகள் பிறப்பிக்கலாம். இவையெல்லாம் ஜப்பானிலும், கொரியாவிலும், [ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்] பிரச்சினைகளாக இருக்கலாம். இந்தியாவில் பெரிய பிரச்சினைகளே அல்ல.

3. மற்றபடி காதலர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு பொது இடங்களில் நிற்கையில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடை செய்யக்கூடிய அளவிற்கு இந்தியாவில் சட்டங்கள் கொண்டுவரமுடியுமா, ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரபு ராஜதுரைதான் சொல்ல வேண்டும்.

பல மேலை நாடுகளில் காவல்துறையே வீடியோ கேமராக்களை பொது இடங்களில் வைத்துள்ளனர். இந்தியாவில் கூட ATM தானியங்கி பணம் வழங்கும் கருவிகளின் மேல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பலமுறை, பலவிடங்களில் "அந்தரங்கமான" படங்கள் மாட்டுகின்றன.

4. கொரியாவில் இந்த கேமரா செல்பேசியை பெரிதும் விற்பனை செய்த சாம்சங் நிறுவனமே இவற்றை தன் ஒருசில தொழிற்சாலைகளுக்குக் கொண்டுவரக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. நிறுவனத்தின் ரகசியங்களை யாரும் பிடித்துக்கொண்டு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே இது.

இன்னும் ஒரு வருடத்தில் இதுபோன்ற 'எதிர்மறை'களை விடுத்து கேமரா செல்பேசியின் நல்ல பயன்பாடுகளை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு செல்லத் தொடங்குவோம்.

===

மற்றொன்று: இந்தக் கேமரா செல்பேசிகள் இப்பொழுதைக்கு அசையாப் படங்களை மட்டும்தான் பிடிக்கின்றன. அதனால் தெஹல்கா கோஷ்டியினர் இன்னமும் சிறிதுகாலம் பொறுக்கவேண்டும். அப்பொழுதுதான் இவை ஒலியுடன் கூடிய அசையும் படங்களையும் பிடிக்குமாறு அமைக்கப்படும்.

===

தி ஹிந்து செய்தியில் குறிப்பிட்டிருந்தது: "கேமராக்கள் செல்பேசிகளுக்கு வரவேற்கத்தக்க ஒரு சேர்க்கையே. ஆனால் ஒருசில விளம்பரங்கள் ஆபாசமான, மோசமான, வலைவிரிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இளைஞர்கள் [கேமரா செல்பேசிகளை] தவறான முறையில் புரிந்துகொள்ள வழிவகுக்கும்."

சோனி எரிக்சன் கேமரா செல்பேசிக்கான விளம்பரம் ஒன்றில் குட்டைப்பாவாடை அணிந்த பெண் தெருவில் போகையில் ஒருவன் தன் கேமரா செல்பேசியால் படம் பிடித்துகொண்டிருப்பான். அதனைப் பார்த்த அந்த பெண் ஆணருகில் வந்து அவனது கேமரா ஃபோனைப் பிடுங்கி .... தூக்கியெறியப் போகிறாளோ என்று நினைக்கையில், காரின் மீது விழுந்து புரண்டு, தன்னை குளோசப்பில் படமெடுத்து அந்த ஆணிடம் கொடுத்துவிட்டுப் போவாள்.

இதைப் பார்க்கும் நம் நடுத்தெரு மன்மதராசாக்கள் தாங்களும் ரூ. 30,000 செலவுசெய்து எந்தப்பெண்ணிடமோ விளக்க்குமாற்றால் அடிவாங்கப் போகிறார்கள்!

No comments:

Post a Comment