Wednesday, March 17, 2004

ஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2


R வெள்ளிங்கிரி
R.வெள்ளிங்கிரி, முன்னாள் DSP, CBI. ஊ.எ.இ கோவை கிளையில் உள்ளவர். இவர் தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றி விட்டு, பின்னர் மத்திய அரசுப் பணியில் இருந்து, கடைசியாக CBI புலனாய்வுத் துறையில் DSP ஆக இருந்து ஓய்வு பெற்றவர். கடைசியாகப் பணியாற்றியது ஹர்ஷத் மேஹ்தா பங்கு ஊழல் விவகாரத்தில்.

கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கினார்.

* கோவையைச் சுற்றியுள்ள பள்ளிகளில், கல்லூரிகளில் ஊழல் எதிர்ப்பை விளக்கி, அங்குள்ள மாணவர்களை ஊழலுக்குத் துணைபோக மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வைப்பது.
* அரசு அலுவலகங்களில் ஊழல் நடப்பது தெரிய வந்தால், ஊழல் கண்காணிப்புத் துறையின் உதவியோடு 'trap' அமைப்பது.
* புகார்க் கடிதங்கள் எழுதுவது
* எவ்வாறு இப்பொழுதுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் பலனற்றது என்பதை விளக்கினார். இப்பொழுதுள்ள சட்டங்களால் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும்போது மட்டும்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தனியார் [அதாவது இடையில் வரும் தரகர்கள்...] மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதாம்.
* மேலும் லஞ்ச ஒழிப்பு, மற்றும் கண்காணிப்புத் துறை (vigilance and anti-corrpution department) யாரையாவது லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிக்க நினைத்தால் அதற்கான "லஞ்சப் பணத்தை' தயார் செய்ய முடியாதாம். இப்பொழுது எதாவது அரசு அலுவலகத்தில் என்னிடம் யாராவது லஞ்சம் கேட்டால், நானேதான் அந்த லஞ்சப் பணத்தைத் தயார் செய்து, பின் கண்காணிப்புத் துறையின் உதவியோடு லஞ்சம் கொடுக்கும்போது லஞ்சம் வாங்குபவரைப் பிடிக்க முடியும். அப்பொழுதும் நான் கொடுத்த 'லஞ்சப் பணம்' அரசினால் கைப்பற்றப் பட்டு, வழக்கெல்லாம் முடிந்து அந்தப் பணம் எனக்கு மீண்டும் வந்து சேர பல மாதங்கள் ஆகும். இப்படி இருக்கையில் அனைவரும் பேசாமல் அந்தப் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து தன் வேலையையாவது செய்து கொண்டு போவோமே என்றுதான் பார்ப்பர்.


M வள்ளுவன்
விருத்தாசலம் கிளையின் தலைவரும், விருத்தாசலம் நகரமன்றத் தலைவருமான Dr.M.வள்ளுவன் அடுத்து பேசினார். இவரது கதை வித்தியாசமானது. வெங்கடசுப்ரமணியனும் வள்ளுவனைப் பற்றி தன் பேச்சில் சொல்லியிருந்தார். வள்ளுவன் நகரமன்றத் தலைவரானதும் வீடுகளுக்குத் தண்ணீர் தருவதில் உள்ள ஊழலை எதிர்த்து, தண்ணீர் வழங்குதல் மற்றும் பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நகரமன்றம் மூலம் பல மசோதாக்களை நிறைவேற்றினாராம். ஆனால் நகரமன்ற கமிஷனர் (தமிழக அரசால் வேலைக்கு அமர்த்தப்படும் செயலாளுநர் பதவி) மற்றும் நகரமன்ற ஊழியர்கள் இந்தக் கட்டளைகளை [சட்டத்துக்குப் புறம்பாக] செயல்படுத்தவில்லை. இதனால் வள்ளுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில், நகரமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிகழ்த்த வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாராம்.

இம்மாதிரி நகரமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை, செயலாளுநர்கள் செயல்படுத்த மறுத்து, நீதிமன்றம் வரை செல்வது முதல் தடவை. இதுபோல் பல பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகரமன்றங்கள் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், தலைவர்கள், உறுப்பினர்கள் நிறைவேற்றும் விஷயங்கள் கூட மாநில அரசினால் நியமிக்கப்பட்ட செயலாளுனர்களது ஊழலினால் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். இவை தெரியாமல் நாமும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையே குற்றம் சொல்கிறோம். இந்த நிலைமை மாறும் வரையில் 'பஞ்சாயத் ராஜ்' திட்டமெல்லாம் பகல் கனவுதான்.


N சிவப்பிரகாசம்
அடுத்து நாமக்கல் கிளையின் N.சிவப்பிரகாசம் பேசினார். ஊழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி இவர் சொன்ன சில கருத்துகள் இதோ:

* கடிதம் எழுதுதல். ஊழல் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால், எல்லாப் பத்திரிகைகளுக்கும், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள எல்லோருக்கும் விடாது கடிதம் எழுதுவது.
* புகார் கொடுக்க அஞ்சாமை. எங்காவது தவறு நடக்கிறது என்று தெரிந்தால், அதை அப்படியே விட்டுவிடாமல் உடனடியாக புகார் கடிதம் எழுதுவது. நேரடியாகப் போய் புகார் செய்வது.
* சத்தம் போடுதல். யாராவது கையூட்டு கேட்டால் உடனடியாக குரலை உயர்த்தி "எதுக்கு காசு கேக்கறீங்க" என்று அந்த அலுவலகத்தில் உள்ள அனைவர் காதிலும் விழுமாறு பேசுதல்.
* தன் வீட்டிற்கான சேவைகள் தடைபடும்போது கலங்காதிருத்தல். தொலைபேசிச் சேவை ஊழியர் லஞ்சம் கேட்டு, கொடுக்காமல் போனதால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதைப்பற்றி கவலைப்படாமல், புகார் செய்து, சண்டை போட்டு இணைப்பை மீண்டும் பெற வேண்டிய நிலை வரும்.

இவரும் தன் ஊரில் நடக்கும் ஊழல்களை தங்கள் இயக்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதனைப் பற்றி விளக்கிப் பேசினார்.

அடுத்து பேசியவர் வேலூர் கிளையின் சிவராஜ். இவரும் ஏதாவது புகார் என்றால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதம் போடுவதிலிருந்து (அப்துல் கலாம் வரை கடிதம் செல்லுமாம்!) கடிதத்தில் விளக்கமாக எந்தெந்தக் குற்றவியல் சட்டங்கள், அரசு நடத்தை விதிகள் ஆகியவை மீறப்பட்டுள்ளன, அதற்கு என்னென்ன தண்டனைகள் உண்டு என்றும் எழுதுவதாகவும் சொன்ன்னார். இவர் ஓய்வுபெற்ற தாசில்தார்.

உள்ளூரில் நடக்கும் ஊழல் புகார்கள் எல்லாவற்றிலும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும் இணைத்துக் கொள்வதன்மூலம் வழக்கைத் தீவிரப்படுத்தவும், விசாரணையைத் துரிதப்படுத்தவும் முடிகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நேரடி ஆசாமிக்கு வழக்கை முன்கொண்டுசெல்வது முடிவதில்லையென்றாலும், தங்கள் இயக்கத்தால் அதனை சமாளிக்கமுடிகிறதென்றும் சொன்னார்.

வேலூரைச் சுற்றியுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊழல் பற்றி, ஊழலைத் தடுப்பது பற்றியெல்லாம் விளக்கப்பட்டறை நடத்துவதாகவும் சொன்னார்.

இந்த இயக்கத்தில் சேர்ந்து உங்கள் ஊர்களில் ஊழலைக் குறைக்க, அறவே ஒழிக்க விரும்பினால் நீங்கள் அணுக வேண்டிய முகவரி

ஊழல் எதிர்ப்பு இயக்கம்
பதிவு எண்: 349/2001
7, காவேரி தெரு
காந்தி நகர், சாலி கிராமம்
சென்னை 600 093
தொ.எண்: 044-2362-1331
மின்னஞ்சல்: smarasu@hotmail.com

உறுப்பினராக, ஆண்டுக் கட்டணம்: ரூ. 100. நன்கொடையும் கொடுக்கலாம். வெறும் உறுப்பினர்களை விட இந்த இயக்கத்தின் கிளைகளை ஆரம்பிக்க தமிழகமெங்கும் ஆர்வலர்கள் தேவை. உறுப்பினர்களுக்கு 'நேர்மை நெறி' என்னும் மாத இதழும் அஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment