Saturday, April 23, 2005

சி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு

மத்திய அரசின் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சமீபத்தில் வெளியிட்ட குறுந்தட்டு விஷயமாக நான் நிறையவே வலைப்பதிவில் எழுதிவிட்டேன். அத்துடன் ஜெயா டிவி செய்தியில் என் முகமும், நான் சொல்லும் சில துண்டுச் செய்திகளும் வந்தன. அத்துடன் இன்னமும் இரண்டு பேர் ஏதேதோ (தவறாகவும்) சொன்னார்கள். செய்தி வாசிப்பவரும் சற்று 'ஜெயா ஸ்லாண்ட்' கொடுத்தார். இன்று மாலை ஜெயா டிவி விவாதத்தில் சுதாங்கன், நான், தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர் சங்கரநாராயணன் ஆகியோர் பேசினோம். சுமார் 30 நிமிடங்கள் நிகழ்ச்சி. இதில் திறமூல மென்பொருள்கள் என்றால் என்ன, முகுந்தராஜ்/தமிழா பங்களிப்பு என்ன, ழ கணினி பங்களிப்பு என்ன, பொன்விழி விஷயம் என்ன, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மென்பொருள் வளர்ச்சி நிதி யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது, இந்தக் குறுந்தட்டில் என்ன உள்ளது, என்ன இல்லை என்பதைப் பற்றியும் பேசினோம். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது என்பது பற்றியும் சிறு விவாதம் இருந்தது.

கல்கி நிருபர் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு முழுமையாக இந்தக் குறுந்தட்டைப் போட்டுக் காண்பித்து, வரும் பிரச்னைகளை விளக்கிச் சொன்னேன். அதே நேரம் இந்தக் குறுந்தட்டில் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றியும் சொன்னேன். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் என்ன வெளியாகும் என்பது இதழ் வந்தவுடன்தான் தெரியும். குமுதம் ரிப்போர்டரில் ஒரு கட்டுரை நீண்டதாக வரலாம், அல்லது வராமலேயே கூடப் போகலாம்! வந்தால் சொல்கிறேன்.

----

இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கோபம் வந்தது, ஏன் வரிந்துகட்டிக்கொண்டு இதைப்பற்றி எழுதினோம், பேசினோம் என்று யோசித்துப் பார்த்தேன்.

1. தமிழில் முதன்முறையாக என்று டிவி பாணியில் சொந்தம் கொண்டாடி, தினசரிகளில் விளம்பரம் கொடுத்து, பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு செல்பேசி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி, குறுந்தகடு முகப்பில் தேவையற்ற சுய விளம்பரம் செய்து கொண்டார்கள் என்பது காரணமாக இருக்குமா?

2. சி-டாக் அவசர, அவசரமாக முழுவதும் யோசிக்காமல் ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டு (நர்சரிப் பாடல்கள்?) அது விண்டோஸ் எக்ஸ்.பி யில் மட்டும் வேலை செய்யுமா அல்லது விண்டோஸ் 98-லும் வேலை செய்யுமா என்று சொல்லவில்லை. விசைப்பலகை டிரைவர்கள் ஏதும் கொடுக்கவில்லை. உதவிக்கோப்புகள் என்று எதுவும் இல்லை. காப்புரிமை பற்றி எந்தத் தகவலும் சரியாக இல்லை. விநியோகம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. திறமூல ஆர்வலர்களுக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச அங்கீகாரம் கூட இல்லை. அவர்களது இணையத்தளம் professional-ஆக இல்லாமல், படு மந்தமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் வந்த கோபமா?

3. தயாநிதி மாறனின் இரண்டு பேட்டிகளில் எல்லாவற்றையும் நான்தான் செய்தேன், இனியும் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி மாதிரி சொன்னது வரவழைத்த கோபமா? (நிச்சயமாக அவர் சொன்னதையெல்லாம் ஆறு மாதத்துக்குள் செய்து முடிக்க முடியாது. அதுபற்றி அக்டோபர் 2005-ல் எழுதுகிறேன்.)

ஒருவேளை எனது ரியாக்‌ஷன் தேவைக்கு அதிகமோ என்று தோன்றியது.

ஞாயிறு அன்று மாலை 5.30க்கு சன் நியூஸ் சானலில் IT.com நிகழ்ச்சியில் சி-டாக் நிறுவனத்தின் ராமன், மாலனுடன் உரையாடுகிறார். அதில் இந்தக் குறுந்தட்டினைப் பற்றி விளக்குவார். அத்துடன் ஃபயர்ஃபாக்ஸ் பொதி தயாரிப்பில் முகுந்தின் பங்கு பற்றியும் ஒப்புக்கொள்வார் என்றும் தெரிகிறது. பார்க்க முடிந்தால் அதையும் பார்க்கவும்.

கணித்தமிழ் சங்கத்தின் சில உறுப்பினர்களின் மென்பொருள்கள் மட்டும் இந்தக் குறுந்தகட்டில் இடம்பெற்றிருப்பது பலருக்குக் கோபத்தை வரவழைத்திருக்கிறது என்றும் கேள்விப்படுகிறேன். இந்தத் தேர்வு எப்படி நடைபெற்றது? 200 எழுத்து வடிவங்கள் ஏன் தேவை? இதற்கென சி-டாக் எத்தனை பணம் செலவழித்தது? யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? ஏன் எக்கச்சக்கமான TAM, TAB எழுத்து வடிவங்கள் பெறப்பட்டன?

----

இஃது ஒருபக்கம் இருக்க, சும்மா பிறரைக் குற்றம் மட்டும் சாட்டிக்கொண்டிருக்காமல் நாமும் உருப்படியாக ஏதேனும் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. திறமூலச் செயலிகள் பலவற்றையும் சரியான முறையில் தமிழாக்கி விண்டோஸ் எக்ஸ்.பி, விண்டோஸ் 98 ஆகியவற்றில் வேலை செய்யுமாறு, எளிதான முறையில் நிறுவுமாறு குறுந்தட்டு ஒன்றை உருவாக்குவது பற்றி நாராயணிடம் பேசினேன். அவர் முகுந்திடம் பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு கூட்டு வலைப்பதிவு ஒன்றையும், கூட்டுச்செயல்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்புச் செயலி ஒன்றையும் நிறுவுவது பற்றி நாராயண் பேசியுள்ளார். இது மிக விரைவில் செயல்படுத்தப்படும்.

அதன்மூலம் உருப்படியான ஒரு குறுந்தட்டை விரைவில் தயாரித்து, சிறு குழந்தை கூட எந்த வகை இயக்குதளத்திலும் இந்த மென்பொருள்களை நிறுவி (முதலில் எக்ஸ்.பி, பின் 98, பின் லினக்ஸ்), உடனடியாக தமிழில் மிகவும் அடிப்படையான விஷயங்களைச் செய்யத் தொடங்கினால் அதுதான் நமது தார்மீகக் கோபத்தை சரியான முறையில் காட்டுவதாகும் என்று தோன்றுகிறது.

8 comments:

  1. மீண்டும் சொல்கிறேன், இந்த விஷயத்தில் அரசியல் கலக்கவே கூடாது. அதனால் கேடு நமக்குத்தான். கல்கி, குமுதம் ரிப்போர்டர் போன்ற ஓரளவுக்காவது நடுநிலைமையுடன் இருக்கும் ஊடகங்களில், இந்தச் செய்தி வந்தாலே சலசலப்பு கிளம்பும். ஆனால், ஜெயா டிவி அப்படி அல்ல. அவ்ர்கள், திமுகவுக்கு எதிராக என்ன பாய்ண்ட் கிடைக்கிறது என்றுதான் பார்ப்பார்கள். [இந்த விஷயம் தொடர்பாக, ஜெயா டீவிக்குச் சென்று பேட்டி கொடுத்ததில் எனக்கு தனிப்பட்ட முறையில் அத்தனை உடன்பாடில்லை. ] இப்போது வெளிவந்திருக்கும் சிடாக்கின் சிடியில், நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று சொன்னாலும், அது இருட்டடிப்பு செய்யப்பட்டு விடும். நம்முடைய நோக்கங்கள்,

    1. தமிழ்நிரலிகள், ஒழுங்காகவும் உருப்படியாகவும் இருக்கவேண்டும் ( irrespective of whoever inititates and executes it).
    2. இதிலே ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களின் சேவை அங்கீகரிக்கப்படவேண்டும் ( தன்னார்வலர்களின் இதுநாள் வரையிலான முயற்சிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும் என்பதைத்தான் அங்கீகாரம் எனக் குறிப்பிடுகிறேன்).

    ஆகியவை மட்டும் தான்.

    இதை, திமுக/அதிமுக பிரச்சனை ஆக்குவதில் சிக்கல் நமக்குத்தான். பார்த்தீர்களானால், சன் டீவியில் வரும் நிகழ்ச்சி, நீங்கள் இன்று ஜெயாவில் நடத்திய விவாதத்துக்கு பதிலடியாகத்தான் இருக்குமே அன்றி, உண்மையான பிரச்சனையை விவாதிப்பதாக இருக்காது. ( பந்தயம் வேணாலும் கட்டுகிறேன்). false claims செய்து பெயர் தட்டிக் கொண்டு போகிறார்கள் என்பதில் வரும் கோபம்., ரொம்ப பர்சனலானது. இந்தக் கோபத்தையும், இணையத்தமிழ் உருப்படுவதற்கான வழிமுறைகளையும் சேர்த்து வைத்துப் பார்க்கக் கூடாது.

    நீங்கள், கடைசியில் சொன்னது போல, எளிமையான செயல்முறைகள் கொண்ட, ஒரு குறுவட்டினை உருவாக்குங்கள். அதை விநியோகம் செய்யவும், கணித்தமிழ் பற்றிய awareness கிளப்பவும், என்னாலான உதவிகளைச் செய்கிறேன்.

    ReplyDelete
  2. //கணித்தமிழ் பற்றிய அநரெனெச்ச் கிளப்பவும், என்னாலான உதவிகளைச் செய்கிறேன்.//
    தொழில் நுட்ப எக்ஸ்போ -க்களில் , பிட் நோட்டீசோ அல்லது சிடி விநியோகமோ செய்யலாம். பிற கணினிதொழிலாளர்களிடம் போவது முதலில் சரி எனப்படுகிறது.

    ReplyDelete
  3. இப்பதிவின் கடைசிப் பத்தியும், பிரகாஷ் பின்னூட்டத்தின் முதல் வரியும் முக்கியமானவை. எல்லோரும் முயன்று ஏதேனும் உருப்படியாகச் செய்வோம்.

    ReplyDelete
  4. //ஆனால், ஜெயா டிவி அப்படி அல்ல. அவ்ர்கள், திமுகவுக்கு எதிராக என்ன பாய்ண்ட் கிடைக்கிறது என்றுதான் பார்ப்பார்கள்//
    இதே கருத்துதான் எனக்கும். ஆனாலும் ரோசம் வந்து, காசி தன் பதிவில் சொல்லியிருந்தபடி அரசாணையோ, சரியானபடி இன்னொரு சி.டி.யோ வெளியிட்டு தாங்களும் கணித்தமிழுக்குச் சேவை செய்வதாக தமிழக அரசு காட்டிக் கொண்டாலும் நல்லதே.
    (சரியானபடி என்பது தன்னார்வலர்களின் உழைப்பை அங்கீகரித்து, விசைப்பலகை இயக்கிகள் இணைத்து.... மற்றபடி அதில் தாத்தா பேரன் என்றால் இதில் அம்மா..அம்மா மட்டுமே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.)

    ReplyDelete
  5. அடிப்படை வேலைகளை முடித்துவிட்டு பதிகிறேன்.

    ReplyDelete
  6. //சன் டீவியில் வரும் நிகழ்ச்சி, நீங்கள் இன்று ஜெயாவில் நடத்திய விவாதத்துக்கு பதிலடியாகத்தான் இருக்குமே அன்றி, உண்மையான பிரச்சனையை விவாதிப்பதாக இருக்காது. ( பந்தயம் வேணாலும் கட்டுகிறேன்//

    நேற்றைய சுதாங்கன்-பத்ரி- கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, , சன் டீவியின் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, இந்த நிகழ்ச்சி, ஜெயா டீவியின் நிகழ்ச்சிக்கு பதிலடியாகத்தான் இருக்கும் என்று பந்தயம் கட்டியதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். கடந்த பல வருடங்களாக, சன் டீவி மற்றும் ஜெயா டீவியின் செய்திகளையும், அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளையும், பார்த்து வருகிறேன் என்ற அடிப்படையில் உருவான அபிப்ராயம் அது.

    ReplyDelete
  7. it has been politicised now .dinamalar has a vested interest in using this against dmk and the central government.in the days to come we may see the same allegations repeated or presented with distortions in different fora and media in the days to come.
    ravi srinivas

    ReplyDelete