Friday, October 29, 2004

நாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்

ஆஸ்திரேலியா 398 & 329/5 டிக்ளேர்ட்; இந்தியா 185 & 200. ஆஸ்திரேலியா 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டித் தொடரையும் கைப்பற்றியது.

இன்று காலை எவ்வளவு நேரம் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் என்பதுதான் கேள்வி. மார்ட்டின், கிளார்க் இருவரும் சதம் எடுக்கும் வரை விட்டுவைக்கலாம் என்று கில்கிறிஸ்ட் முடிவு செய்திருந்தார் போலும். மாட்ட்டின் எளிதாகவே தன் அரை சதத்தை எட்டினார். அவ்வப்போது சில ரன்கள் வந்தாலும் முதல் ஒரு மணிநேரத்தில் எதிர்பார்த்த அளவு வேகமாக ஆஸ்திரேலியர்களால் ரன்களைக் குவிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது மணிநேரத்தின்போது ரன்கள் எளிதாக வந்தது. கிளார்க் தன் அரை சதத்தைப் பெற்றபின், அதைக் கொண்டாட அகர்கரை அடித்து நொறுக்கினார். அகர்கரின் ஓர் ஓவரில் மார்ட்டினும், கிளார்க்கும் சேர்ந்து 21 ரன்களைப் பெற்றனர். (4,2,1,6,4,4). திடீரென கிளார்க்கின் எண்ணிக்கை மார்ட்டினின் எண்ணிக்கைக்கு வெகு அருகில் வந்து விட்டது. ஆனால் அதற்கு மேல் அதிகம் பெறாமல் கும்ப்ளே பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்க, அங்கு காயிஃபால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். கிளார்க் 72 (11x4, 1x6), ஆஸ்திரேலியா 319/4. நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து சேர்த்தது 148 ரன்கள்.

மார்ட்டின் தன் சதத்தை எட்டும் வரை அவருக்குத் துணையாக இருக்க கில்கிறிஸ்ட் விளையாட வந்தார். மார்ட்டின் இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தால், பிராட்மேன் செய்தது போல மூன்று அடுத்தடுத்த இன்னிங்ஸில் சதமடித்த இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆகியிருப்பார். ஆனால் நடக்கவில்லை. 97 ரன்கள் இருக்கும்போது ஜாகீர் கான் பந்தில் விக்கெட் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுத்து மார்ட்டின் ஆட்டமிழந்தார். அதில் 9x4 அடங்கும். ஆஸ்திரேலியா அப்பொழுது 329/5. உடனே இன்னிங்க்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தார் கில்கிறிஸ்ட்.

இந்தியா வெற்ற பெற 543 ரன்கள் தேவை என்ற நிலையில் சோப்ராவும், சேவாகும் மீண்டும் களமிறங்கினர். உணவு இடைவேளைக்கு முன் சரியாக ஓர் ஓவர் வீசமுடியும் என்றிருந்தது. மெக்ராத் ஓவரில் சோப்ராவுக்கு ஒரு ரன். உணவு இடைவேளையின்போது இந்தியா 1/0.

உணவு இடைவேளைக்குப் பின், வரிசையாக ஓர் ஊர்வலம். அதில் முதலைந்து மட்டையாளர்கள் வீடு திரும்பினர். கில்லெஸ்பி அற்புதமாகப் பந்து வீசினார். தொடர்ச்சியாக இன் கட்டர்களாகவே வீசினார். கிரிக்கெட் பந்தில் மேல் தோல் இரண்டு பெரிய பாகங்களாக இருக்கும். ஒவ்வொரு பெரிய பாகமும் இரண்டு சிறிய பாகங்களால் ஆனது. சிறிய பாகங்களை இணைத்து உள்தையல் இருக்கும். பெரிய பாகங்களை இணைத்து வெளித்தையல் இருக்கும். இந்த வெளித்தையலை ஒரு கோணத்தில் பிடித்துக் கொண்டுதான் சீம் (தையல்) வழியான பக்கவாட்டு நகர்தலை வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படுத்துவார்கள். ஆனால் கில்லெஸ்பி புதுமையாக வெளித்தையலை குறுக்காகப் பிடித்துக் கொண்டு ஆஃப் கட்டர்களை வீசினார். முதலில் ஆகாஷ் சோப்ராவின் மிடில் ஸ்டம்ப் எகிறியது. சோப்ரா 1, இந்தியா 1/1. அடுத்து உள்ளே வந்தவர் திராவிட்.

மெக்ராத் பந்துவீச்சில் சேவாக் மூன்றாவது ஸ்லிப்பில் நிற்கும் லாங்கருக்கு கேட்ச் கொடுத்தார். லாங்கர் அற்புதமாக டைவடித்து அதைப் பிடிக்க முயன்றார். முடியவில்லை. ஆனால் கையால் பந்தைத் தடுத்து விட்டார். அடுத்த பந்தை சேவாக் நான்காவது ஸ்லிப் இருக்கும் திசையில் உயர அடித்து நான்கு ரன்களை பெற்றார். அடுத்த ஓவரில் கில்லெஸ்பி மற்றுமொரு ஆஃப் கட்டர் மூலம் திராவிடின் லெக் ஸ்டம்பைப் பதம் பார்த்தார். இந்தப் பந்து சட்டென்று உள்ளே வந்து, திராவிடின் பேட்டின் உள்புற விளிம்பில் பட்டு இடைவெளி வழியாக ஸ்டம்பில் விழுந்தது. திராவிட் போன்ற டெக்னிக் ஒழுங்கான மட்டையாளர் ஏன் மட்டைக்கும், கால் காப்புக்கும் இடையே இத்தனை இடைவெளி விட்டு வைத்தார்? திராவிட் 2, இந்தியா 9/2.

அடுத்து அரங்கமே அதிருமாறு டெண்டுல்கர் உள்ளே வந்தார். கில்லெஸ்பி பந்தில் கவர் டிரைவ் ஒன்றை அடித்தார். பந்து எல்லைக்கோட்டுக்கு முன்னால் தானாகவே நின்றது. முந்தைய டெண்டுல்கராக இருந்தால் விளம்பரப் பலகையில் அடித்து உள்ளே வந்திருக்கும். இரண்டு ஓவர்களுக்குப் பின், மெக்ராத் வீசிய பந்து ஒன்று சடாரென்று எழும்பியது. லொட்டைக் கையுடன் டெண்டுல்கர் அந்தப் பந்தை பின்வாங்கித் தட்ட, பாயிண்ட் திசையில் மார்ட்டின் பாய்ந்து விழுந்து பிரமாதமான கேட்சைப் பிடித்தார். டெண்டுல்கர் 2, இந்தியா 20/3.

லக்ஷ்மண் வந்தார். கொஞ்சம் தடவினார். மற்றொரு பக்கம் சேவாக் அப்படியும் இப்படியுமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். கில்லெஸ்பி போய் காஸ்பரோவிச் பந்துவீச வந்தார். அவர் வீசிய முதல் பந்து, பவுன்சர். லக்ஷ்மண் இதைத் தூக்கி டீப் ஸ்கொயர் லெக்கில் அடிக்க, அங்கு நின்ற மெக்ராத் பிடிக்க, நான்காவது விக்கெட் காலி. லக்ஷ்மண் 2, இந்தியா 29/4. அடுத்து காயிஃப். முதல் இன்னிங்ஸில் நிறைய அடித்தாயிற்று, இது போதும் என்று நினைத்தாரோ என்னவோ. நல்லதொரு ஸ்டிரைட் டிரைவ் நான்கைப் பெற்றவர், காஸ்பரோவிச் பந்தை விளிம்பால் தட்டிவிட, கில்கிறிஸ்ட் முதல் ஸ்லிப் முன்னால் விழுந்து பிடித்தார். காயிஃப் 6, இந்தியா 35/5.

இத்தனைக்கும் தேநீர் இடைவேளை கூட வரவில்லை. இதே நிலையில் போனால் அதற்கு முன்னரே இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும் அபாயம் இருந்தது. ஆனால் சேவாகும், படேலும் சேர்ந்து ஜாலியாக விளையாடி சில ரன்களைப் பெற்றனர். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 84/5. சேவாக் 49*, படேல் 21.

தேநீர் இடைவேளைக்குப் பின் சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றார். சதம் எடுப்பாரா? இல்லை. ஷேன் வார்ன் சேவாகுக்குப் பந்து வீசும்போது வீசும் கை விக்கெடிலிருந்து விலகி வந்து, லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான சேவாக் இறங்கி வந்து அடிக்கப் போய் பந்தை கவர் திசையில் வானளாவப் பறக்க விட்டார். கிளார்க் சுலபமாகப் பிடித்தார். சேவாக் 58, இந்தியா 102/6.

தொடர்ந்து விளையாட வந்த அகர்கரும் ஜாலியாக ரன்களைப் பெற்றார். பல ரன்கள் ஸ்லிப் திசையில் பறந்தவையே.

கில்கிறிஸ்ட் கில்லெஸ்பியைப் பந்துவீசக் கொண்டுவந்தார். கில்லெஸ்பி உடனேயே படேலுக்கு ஆஃப் கட்டர் ஒன்றை வீசினார். இடதுகை ஆட்டக்காரரான படேலுக்கு பந்து வெளியே சென்றது. அதில் மெல்லிய உரசல் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து படேல் அவுட்டானார். படேல் 32, இந்தியா 114/7. கும்ப்ளே அதிகம் நிற்கவில்லை. கில்லெஸ்பி அவரது ஸ்டம்பைப் பெயர்த்தார். கும்ப்ளே 2, இந்தியா 122/8. இந்நிலையில் இந்தியா 400 ரன்களுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் தோற்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் கார்த்திக்கும், அகர்கரும் மட்டையை அகல வீசி தடதடவென ரன்களைக் குவித்தனர். கார்த்திக் நன்றாகவே விளையாடினார் என்று சொல்லவேண்டும். மெக்ராத், கில்லெஸ்பி, வார்ன் என்று அனைவர் பந்திலும் நான்குகளைப் பெற்றார். திடீரென கார்த்திக்கின் ஸ்கோர் அகர்கர் அடித்த ரன்களைவிட அதிகமாகி விட்டது.

மெக்ராத் பந்துவீச்சுக்கு வந்தார். உடனேயே வெளியே செல்லும் பந்தில் மிக மெல்லிய உரசல் பட்டு கார்த்திக் கில்கிறிஸ்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். கார்த்திக் 22, இந்தியா 148/9. ஆட்டம் இப்பொழுதும் நிறைவு பெறவில்லை. கடைசியாக விளையாட வந்த ஜாகீர் கான் மெக்ராத்தை அடித்து ஒரு நான்கைப் பெற்றார். அடுத்த வார்ன் ஓவரில் சரமாரியாக இரண்டு சிக்ஸ் அடித்தார். உடனே கில்கிறிஸ்ட் வார்னை எடுத்துவிட்டு காஸ்பரோவிச்சைக் கொண்டு வந்தார். அவருக்கும் சரமாரியான அடிதான். மெக்ராத்தின் ஓர் ஓவரில் அகர்கர் வரிசையாக மூன்று பவுண்டரிகளை ஒரே இடத்தில் - பேக்வர்ட் பாயிண்டில் - அடித்துப் பெற்றார். இப்படியே ஒருவழியாக இந்தியா 200 ரன்களைத் தொட்டு விட்டது! வார்ன் திரும்பி வந்தார். ஜாகீர் கான் மற்றுமொரு சிக்ஸ் அடிக்கப்போய் எல்லைக்கோட்டில் மார்ட்டினிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கான் 25, அகர்கர் 44*, இந்தியா 200 ஆல் அவுட். ஆஸ்திரேலியா 342 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஏதோ கடைசி நேரத்தில் பல நான்குகளையும், ஆறுகளையும் அடித்து இந்தியாவின் கடைசி மூன்று பேர் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவோ - கடந்த 35 வருடங்களாக இந்தியாவில் சாதிக்க முடியாததை சாதித்து விட்டனர். இந்தியாவின் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி. டேமியன் மார்ட்டின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

[பி.கு: 30 அக்டோபர் 2004, சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் 'விளையாட்டு அரங்கம்' நிகழ்ச்சியில், இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பற்றிய என் கருத்துக்களைப் பார்க்கலாம்.]

3 comments:

  1. நிகழ்ச்சி, லைவ் ரிலேயா?

    ReplyDelete
  2. நிகழ்ச்சி, ரெக்கார்ட் செய்யப் பட்டுவிட்டதா அல்லது லைவ் ரிலேயா?

    ReplyDelete
  3. ரெகார்ட் செய்யப்பட்டுவிட்டது.

    ReplyDelete