Tuesday, October 26, 2004

விஷ்வதுளசி

சற்றே வித்தியாசமானது; மம்மூட்டி, நந்திதா தாஸ் நடித்துள்ளனர் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.

முதல் பிரச்னை கதையில். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதையில் ஒன்றுமே இல்லை. சின்ன ஜமீன்தார் விஷ்வம் (மம்மூட்டி) பாட்டு கற்றுக்கொள்ள துளசியின் (நந்திதா தாஸ்) தந்தையை அணுகுகிறார். துளசியின் முறை மாமன் சிவா, துளசி மீது ஆசை வைத்துள்ளான். ஆனால் துளசிக்கு விஷ்வத்தின் மீது கண். அந்நேரத்தில் அவர்கள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட 16-18 வயது இருக்கும். துளசியின் தந்தையை நெஞ்சுவலி திடீரென்று தாக்க, அவசர அவசரமாக அங்கேயே, அப்போதே துளசிக்கும், சிவாவுக்கும் சாமி படத்தில் மாட்டியிருக்கும் மாலைகளால் பொம்மைக் கல்யாணம். அன்றே(?) மின்னல் தாக்கி சிவாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது, காணாமல் போகிறான். அதற்கு சற்று முன், சிவா-துளசி மாலை மாற்றுவதைப் பார்த்து விஷ்வம் அதிர்ச்சியடைந்து தன் ஊருக்குப் போய்விடுகிறான். இதுதான் முன்கதை. நடப்பது 1942இல்.

இருபது வருடங்களுக்குப் பின், சின்ன ஜமீன் பெரிய ஜமீனாக உள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் காதலில் மருகி மாய்ந்துகொண்டிருக்கிறார். அவரது உதவியாளருக்கு விஷ்வம்-துளசி இருவரும் ஒருவரையொருவர் விரும்பியது தெரியும். ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு பாட்டு, நாட்டியம் சொல்லிக்கொடுக்க, துளசியை அழைத்துக்கொண்டு வருகிறார். பைத்தியமான சிவாவும் அதே ஊருக்கு வந்து சேர்கிறார்.

சில நாள்கள் விஷ்வமும், துளசியும் ஒருவரை ஒருவர் பார்த்து மனதை இன்னமும் அதிகமாக வருத்திக்கொண்டு, பின் ஒருவழியாக ஒன்றுசேர முடிவு செய்கின்றனர். சொல்லிவைத்தாற் போல யானை ஒன்று பைத்திய சிவாவைத் தூக்கிப் விட்டெறிய, தலை கல்லில் பட்டு இரண்டு நாள்களில் பைத்தியம் தெளிந்து பழைய வெறிகொண்ட சிவா ஆகிறார். இதற்கிடையில் துளசி, விஷ்வம் இருவரும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். கோவிலில், அடுத்த நாளே கல்யாணம் என்று முடிவாகிறது. இருவரும் தனியாக மாட்டு வண்டியில் திரும்பி வரும்போது சிவா வண்டியில் வந்து மோத, சிவாவின் பைத்தியம் தெளிந்ததை அறியாத விஷ்வம் கீழே இறங்கி, விழுந்த பழத்தட்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டிருக்கும்போது சிவா மெதுவாக துளசியை நோக்கி நடந்து வண்டியின் அச்சாணியை உருவி, வயிற்றில் குத்தி சாகடிக்கிறார். ஒரு வழக்கமான சண்டையைப் போட்டு விஷ்வம், சிவாவை மண்டையை உடைத்துக் கொல்கிறார்.

படம் முடியும்போது விஷ்வம் கையில் செத்துப்போன துளசி... பெயர்கள் திரையில் தோன்றி மறையத் தொடங்குகின்றன. விஷ்வதுளசி!

அமெரிக்காவிலிருந்து தமிழ் உலகுக்கு வந்து முதல் படமெடுக்கும் இயக்குனர் சுமதி ராம் இவ்வளவு மோசமான கதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியதில்லை. அதைவிட மோசம் படத்தின் தலைப்பு.

கதை மோசமானதால், திரைக்கதை மிகவும் தடுமாறுகிறது. காட்சியமைப்பு பொருந்தாமல் உறுத்துகிறது. படத்தில் நந்திதா தாஸ் பாதி நேரம் பட்டுப்புடவையிலேயே இருக்கிறார். பட்டோ, பருத்தியோ, நந்திதா தாஸை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதனால் மட்டும் படம் நன்றாக ஆகிவிடுமா? பட்டுப்புடவையில் நந்திதா தாஸ் கடலில் நடுவே குதித்து நாட்டியமாடுகிறார். வைக்கோல் போரில் புரளுகிறார். மம்மூட்டி சாப்பிட்டு கைகழுவியதும் பட்டுப்புடவை முந்தானையை கைதுடைக்க நீட்டுகிறார்! (பட்டுப்புடவையால் ஈரத்தை இழுக்க முடியாது என்பது வேறு விஷயம்!) ஆக எல்லாம் பட்டுப்புடவை விளம்பர ஸ்டில்களாகவே படம் முழுதும். படத்தில் பைத்தியம் சிவாவைத் தவிர சற்று அழுக்கான உடை கூட யாரிடமும் எப்போதும் இல்லை. வயலில் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு பால் போல வெளுத்த ஆடைகள் அணிந்துள்ளனர். கறையே படியாதா?

அவ்வப்போது விஷ்வமும், துளசியும் பாட்டுப்பாடுவதோடு இல்லாமல், ஊரே - குண்டு குண்டாக இருக்கும் பெண்கள் பலரும் சேர்ந்து கொண்டு - ஜம்மென்று பரத நாட்டியம் ஆடுகின்றது. பாட்டுப்பாடுபவர்கள் வாயசைப்புக்கும், பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதுபோலவே வீணை வாசிக்கும் நந்திதா தாசின் கையசைவும்.

ஊரே ஜமீன்தாரைச் சுற்றி நடக்கிறது. ஜமீன்தார் ஊருக்கே நல்லது செய்பவர். அவருக்கு ஊழியம் செய்து, அதில் மகிழ்வதுதான் அவரைச் சுற்றியிருப்பவர்கள் ஜென்ம சாபல்யம் அடைய ஒரே வழி.

படத்தில் நிகழ்காலத்திலிருந்து, அவ்வப்போது பின்நோக்கிச் செல்லுமாறு கதை பின்னப்பட்டுள்ளது.

இசை (எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா), கேமரா (பி.கண்ணன்), பாடல்கள் (இளையராஜா, சுமதி ராம்) ஆகியவை நன்றாக உள்ளன. கலையமைப்பு பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. ஆனால் 1962 கிராமத்தின் உண்மை நிலை போலத் தெரியவில்லை. ஏதோ ஒரு கற்பனா உலகில் இருக்கும் உடோபியன் கிராமம் (ஊரின் பெயரே சுந்தரபுரி!). படத்தில் விஷ்வம், துளசி இருவரும் தனியாக இருக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் எல்லாம் யாராவது ஒருவராவது பேசிக்கொண்டே இருக்கிறார். ஓயாத சத்தம்.

படத்தில் ஆங்காங்கே சில காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. கூடை முழுதும் பவளமல்லிப் பூக்களால் நிரப்பி விஷ்வம், துளசி கண்ணில் படுமாறு விட்டுச் செல்வது (இருபது வருடங்களுக்கு முன், தான் துளசியை மணந்துகொள்ள வரும்போது அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததை இவ்வாறு காட்டுவது), கையில் மருதாணியுடன் இருக்கும் துளசிக்கு விக்கல் எடுக்கும்போது விஷ்வம் தண்ணீர் கொடுப்பது போன்றவை. அதேபோல் அபத்தத்தின் உச்சக்கட்டம் விஷ்வம் துலாபாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது எல்லா தங்க நகைகளும், பாத்திரங்களும் சாய்க்க முடியாத தராசை, ஒரு கட்டு துளசியை வைத்து சரிக்கட்டுவது.

மம்மூட்டி, நந்திதா தாஸ் போன்ற நடிகர்களை கையில் வைத்துக்கொண்டிருந்தும் இயக்குனர் கத்துக்குட்டியாய் இருந்ததாலும், கதை முழு வேஸ்டாக இருந்ததாலும், மொத்தமாக இந்தப் படத்தை வீணடித்துள்ளார்.

4 comments:

  1. http://musicindiaonline.com/ar/i/movie_name/7518/3/director/1145/

    http://musicindiaonline.com/ar/i/movie_name/7518/2/
    இது தவிர பாட்டெல்லாம் நன்றாக இருப்பதாக இந்தியாவிலிருக்கும் துணைவியிடமிருந்து தகவல் வேறு வந்தது. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. மீண்டும் ஒருமுறை என் கணணியில் `கில்லி' பார்பதுதான் சால சிறந்ததென தோன்றுகிறது.

    ReplyDelete
  2. தமிழ் படங்களே பார்க்காமல் படம் எடுக்க வந்து விட்டதாக இப் பட இயக்குநர் பேட்டி அளித்திருந்தார். இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை. நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தை பார்க்கையில், நல்ல பழைய படங்களைப் பார்த்த பின் இயக்குநராக இவர் முயற்சித்திருக்கலாம்.

    "அமெரிக்காவிலிருந்து" என்பது மற்ற திறமை தேவைகளை பின்னுக்குத் தள்ளி ஒரு அடையாளத்தை தந்து விடுகிறது பார்த்தீர்களா?

    ReplyDelete
  3. Pray, what is wrong with the title??!!!
    This movie, almost in entirety except in parts, is a celebration of the love between the protagonists, so it is like a stringing together of scenes which emphasize the longing of one for the other. So it was not just meant to showcase Nanditha's distracting beauty. I think every such scene was deliberately dealt with painful detailing to enhance the viewer's experience of the tragic climax of the movie (which anyway sucks).
    And what is wrong if Nanditha dresses only in silk sarees? Her character is that of an artiste with finesse and good taste. Probably, cotton and silk were the only two options available then in 1962 for the upper middle class women in rural society (don't know about that, only surmising). She would also want to look her best in the presence of her beloved. So her choice of silk sarees is perfectly understandable. Its another matter that sarees were worn very differently then from how Nanditha wears them in the movie.
    In the scene where Nanditha extends her silk saree for Mammotty to wipe his hands, she is not thinking about whether its cotton or silk and therefore will it serve the purpose. I think it is a very romantic scene and Thulasi just does what her heart dictates. Please remember, this movie is a woman's brainchild. Women are sometimes notorious for suspending logic and clarity of thought when in love.
    Why should villagers wear dirty clothes? While I agree that soiled clothes would have been more plausible, is it such a glaring flaw?
    About the lyrics and lip movements of the artistes not being in sync, I think it was so only in the first song where the young Vishwa sings his first song.
    What is wrong about people working for the Zamindar? He is a good samaritan, so is their affection and loyalty for him out of place? the "janma saaphalyam" bit is an overstatement.
    What is utopian about the ambience? Should villages have a dystopian feel about them? The house (Zamindar's) in which the movie was shot is a 200 year old house, so surely it was around in 1962. It was probably the brilliant cinematography which gave you this "utopian" impression, in which case, kudos to Kannan.
    While most of the flaws you have pointed out may be factually true, this is a movie to be felt and experienced. The sensitivity with which Sumathy Ram has handled Thulasi's character is commendable. Something that female audiences are sure to be able to relate to. Mammotty is wasted. Also, there were far too many cuts in the movie, which gave a sense of discontinuity and abruptness to many a scene. This is certainly not one of those landmark movies, but to write it off as "completely wasted" is being unfair!

    By: Saumya

    ReplyDelete
  4. ரோசா வசந்த் : நீங்க அதை செய்யுங்க. இன்னிக்கு சென்னை தேவிகலாவில் 192 நாட் அவுட். இது போல ஸ்கோர் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.

    ReplyDelete