Sunday, October 31, 2004

கிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி

துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள் என்ற பதிவில் கண்ணன் தொலைக்காட்சியில் வரும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பற்றி எழுதியுள்ளார்.

அதைப்பற்றிய என் கருத்துகளைச் சொல்வதற்கு முன்னால் சில உள்விஷயங்கள் பற்றி எழுதுகிறேன்.

கிரிக்கெட் ஒளிபரப்பு பெரிய விஷயமாவதற்கு முன்னால் இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களையெல்லாம் பிபிசியும், இந்தியாவின் ஆட்டங்களை தூரதர்ஷனும் தயாரித்து ஒளிபரப்பின. மற்ற சில நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் அரசு சார்ந்த, வணிக அனுபவம் இல்லாத தொலைக்காட்சி நிறுவனங்களே கிரிக்கெட் தயாரித்தல் மற்றும் ஒளிபரப்பில் ஈடுபட்டன. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தனியார் சானலான கெர்ரி பேக்கரின் சானல் 9 கிரிக்கெட் ஒளிபரப்பைப் பெறுவதன் மூலம் சில புதுமைகளைக் கொண்டுவந்து அதன்மூலம் நிறைய சம்பாதிக்க முடிவு செய்தது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கெர்ரி பேக்கருடன் ஒத்துப்போகவில்லை. இதனால் பேக்கர் அப்பொழுது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உடைத்து, பின் உலக கிரிக்கெட்டையே சிறிது ஆட்டம் காணவைத்து சூப்பர் டெஸ்ட்கள் என்று சில போட்டிகளை நடத்தினார். அப்பொழுதுதான் இரவு நேரங்களில் ஒளிவிளக்குகளின் அடியில் விளையாடுதல், விளையாட்டாளர்களுக்கு வண்ணச்சீருடை, வர்ணனையில் கொஞ்சம் ஜிலுஜிலுப்பு என்றெல்லாம் கொண்டுவந்தார்.

அதன்பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருவழியாக பேக்கருடன் சமாதானம் செய்துகொண்டது. தொடர்ந்து பேக்கரின் சானல் 9 கிரிக்கெட் ஒளிபரப்பில் நிறையப் புதுமைகளைச் செய்ய ஆரம்பித்தது. அதில் ஒன்று, ஒரே முகங்களை ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ரசிகர்களுக்குக் காண்பிப்பது, ஆஸ்திரேலியர்களுக்குப் பிடிக்குமாறு pro-Australia வர்ணனை கொடுப்பது என்பது.

கிட்டத்தட்ட அந்த நேரத்தில்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு உலகளாவவே வணிகத்தன்மை நிறைந்ததாக மாறியது. பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் - மார்க் மெக்கார்மாக்கின் TWI, மைக்கேல் வாட்டின் CSI - மற்ற விளையாட்டுக்களுடன் கிரிக்கெட் விளையாட்டினை தொலைக்காட்சிக்கெனத் தயாரிப்பதிலும் அதைப் பல நாடுகளின் தொலைக்காட்சி சானல்களுக்கு விற்பதிலும் ஈடுபட்டன.

இவ்விரு நிறுவனங்களும் பிரிட்டனைச் சேர்ந்ததாக இருந்ததால் இவர்கள் கொண்டுவந்த வர்ணனையாளர்களும் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாட்டவராகவே இருந்தனர். இவர்களது தரக்கட்டுப்பாட்டில் இந்தியாவின் கவாஸ்கர் மட்டுமே தேறினார். அப்பொழுது, கிரிக்கெட் பற்றிய அறிவு, ஆங்கிலப் பயிற்சி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது வேறு யாரும் தேறியிருக்க முடியாது.

பின்னர் மார்க் மாஸ்கரேனஸின் Worldtel என்ற பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் கிரிக்கெட் தயாரித்தலில் ஈடுபட்டது. அப்பொழுது முன்னுக்கு வந்தவர்தான் ரவி ஷாஸ்திரி.

ஹர்ஷா போக்ளே பிபிசி, ஏபிசி வானொலிகளில் வர்ணனை செய்ததன் மூலமும், ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்திய கிரிக்கெட்டை அதிகமாக நம்பியிருந்ததன் காரணமாகவும் தொலைக்காட்சி வர்ணனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஹர்ஷாவும் கூட TWI மூலமாகத்தான் முதலில் கிரிக்கெட் வர்ணனைக்கு வந்தார்.

கடந்த சில வருடங்களில் பல இந்திய சானல்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதனால் அந்தந்த சானல்களுக்கென பிரத்யேகமான முகங்கள் தேவைப்பட்டன. டென் ஸ்போர்ட்ஸ் இந்திய முகமாக சஞ்சய் மஞ்ச்ரேகரையும், பாகிஸ்தானிய முகமாக ரமீஸ் ராஜாவையும் பிடித்தது. ஆனால் இவ்விருவருக்கும் நிறையப் பயிற்சி தேவை.

பிரிட்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் 1990களின் தொடக்கத்தில் வெளிநாடுகளில் இங்கிலாந்து விளையாடும் அத்தனை கிரிக்கெட் ஆட்டங்களுக்குமான பிரிட்டன் ஒளிபரப்பு உரிமைகளை வாங்கத் தொடங்கினர். அப்பொழுது ஒரேமாதிரியான முகங்களையும், குரல்களையும் தம் ரசிகர்களுக்குக் காட்ட வேண்டுமென டேவிட் கோவர், பால் அல்லாட், இயான் போதம், பாப் வில்லிஸ், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தனர். இப்பொழுது இவர்களுடன் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதெர்டன் ஆகியோரும் உள்ளனர். அவ்வப்போது இயான் பிஷப்பும் இந்தக் குழுவில் உண்டு.

இதைப்பார்த்த ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தானும் அவ்வாறே செய்ய முற்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய முகங்கள் உருப்படியாகக் கிடைக்கவில்லை. அதனால் ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர் ஆகியோரோடு ரவி ஷாஸ்திரி, ஜெஃப் பாய்காட், ஆலன் வில்கின்ஸ் ஆகியோரைச் சேர்த்தனர். நவ்ஜோத் சிங் சித்துவும் வந்தார், ஆனால் ஒருமுறை நேரடி ஒளிபரப்பில் அசிங்கமான வார்த்தைகளைப் பேசியதற்காக துரத்தப்பட்டார். இப்பொழுது டீன் ஜோன்ஸ் அதிகம் காணப்படுகிறார். அருண் லால், மனீந்தர் சிங் ஆகியோரும் காணக் கிடைக்கின்றனர்.

சோனி தான் வாங்கிய உலக்ககோப்பை போன்ற ஐசிசி ஆட்டங்களுக்காக ஒரு பிரத்யேக வர்ணனை அணியை உருவாக்க மிகவும் சிரமப்பட்டது. ஹர்ஷா போக்ளே போன்றவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சாரு ஷர்மாவைப் பிடித்தனர். அத்துடன் கிரிஷ் ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் கிடைத்தனர். மீதியெல்லாம் வெளிநாட்டு இறக்குமதிகள்.

இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுடன் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு வர்ணனையாளர் அணிகள் குரல் வழியான வர்ணனைகளைச் செய்கின்றன. உதாரணத்துக்கு உலகக்கோப்பையின் போது சோனி தனக்கென பிரத்யேகமாக ஒரு வர்ணனையும், ஸ்கை ஸ்போர்ட்ஸ் தனக்கென ஒரு வர்ணனையையும், பிற அனைத்து தொலைக்காட்சி சானல்களுக்கென ஆக்டகன் சி.எஸ்.ஐ ஒரு வர்ணனையையும் உருவாக்கினர். இந்த மூன்றாவது வர்னனையைத்தான் அமெரிக்காவிலோ, தென்னாப்பிரிக்காவிலோ அல்லது பாகிஸ்தானிலோ உள்ள தொலைக்காட்சியில் ஒருவர் கேட்டிருக்க முடியும். இதே வர்ணனைதான் இந்தியாவின் தூரதர்ஷனில் வந்தது. ஆனால் சோனி மேக்ஸில் அவர்களுக்கெனவே உருவாக்கிய பிரத்யேக வர்ணனை (மந்திரா பேடி அவ்வப்போது நடுநடுவே).

சரி. இப்பொழுது கண்ணனின் பதிவுக்கு வருவோம்.

கண்ணன்: ஹென்றி புளோபெல்ட் வர்ணனை உங்களுக்குப் பிடிக்குமா? அந்த மனிதர் சரியான லூஸ். ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார். ஆட்டத்திற்கும், அவர் பேசுவதற்கும் எந்த உறவும் கிடையாது. நல்ல வேளையாக இப்பொழுது இவரை பிபிசி கூட தள்ளிவைத்துவிட்டது.

ரமீஸ் ராஜா அழுமூஞ்சிதான். சில நாள்கள் முன்னால் வரை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகியாகவும், அதே சமயம் டென் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராகவும் பஜனை செய்து கொண்டிருந்தார். நடுநிலை என்பது இவரிடம் துளிகூடக் கிடையாது. இவரையும் சஞ்சய் மஞ்ச்ரேகரையும் அருகருகே வைத்து இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு வர்ணனை செய்யச் சொன்னால் கொடுமையாக இருக்கும். ரஞ்சித் பெர்னாண்டோ நிலை அய்யோ-பாவம். இலங்கையிலிருந்து ஆங்கில வர்ணனை செய்ய இவரை விட்டால் யாரும் கிடையாது என்பதாலேயே இவர் வர்ணனையில் உள்ளார். புதிதாக யாராவது கிடைத்து விட்டால் பெர்னாண்டோவைக் கழற்றி விட்டுவிடுவார்கள். புதுப்புது இலங்கை ஆட்டக்காரர்களின் பெயர்கள், அவர்களது பின்னணி ஆகியவற்றைச் சரியாகச் சொல்வதற்கு ஒருவராவது இலங்கையிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால் மாட்டுபவர் இப்பொழுதைக்கு ரஞ்சித் பெர்னாண்டோ மட்டும்தான். இவரும் சதா அழுதுகொண்டே இருப்பார்.

கவாஸ்கரை இந்த வகையில் நான் சேர்க்கமாட்டேன். அவ்வப்போது ஒருமாதிரியாக நடந்துகொள்வார். ("வடா-பாவ் ஷாட்", "யாபயாபயாபயாப" என்று ஒரு ஸ்டிரெயிட் டிரைவ் அடியைப் பார்த்துவிட்டு திடீரென்று கத்தியது, மும்பை ஆட்டக்காரர்கள் மீதான அளவுகடந்த பிரியம், டெண்டுல்கரை அதிகமாக விமர்சனம் செய்யாதது என்று சில குறைகள் உண்டு.) ஆனால் இவரிடம் இருக்கும் கிரிக்கெட் பற்றிய மிக நுண்ணிய அறிவு வெகு சில வர்ணனையாளர்களுக்கே உண்டு. மேலும் வர்ணனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் விளையாடிய கிரிக்கெட்டின் தரத்தை வைத்துத்தான் இப்பொழுது விளையாடுபவர்களைக் குறை சொல்ல வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நீங்களோ, நானோ ஓர் ஆட்டக்காரரைக் குறைசொல்லும்போது...

கவாஸ்கர், பாய்காட் ஆகியோர் மிக மெதுவாகத்தான் ரன்களைச் சேர்த்தனர். ஆனாலும் இன்றைய கிரிக்கெட் மாறிவிட்டது. அதனால் இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் இந்திய/பிற அணியினர் மெதுவாக விளையாடும்போது கவாஸ்கர், பாய்காட் ஆகியோர் நிச்சயமாக இவர்களைக் குறை சொல்லலாம். தவறில்லை.

5 comments:

  1. மந்திரா பேடி பற்றி ஒரு வார்த்தை இல்லாமல் கிரிக்கெட் வர்ணனை பற்றி பதிவா?? அநீதி! அநீதி!!

    By: Meenaks

    ReplyDelete
  2. என் பதிவிலிருந்து மேற்கோள்: "ஆனால் சோனி மேக்ஸில் அவர்களுக்கெனவே உருவாக்கிய பிரத்யேக வர்ணனை (மந்திரா பேடி அவ்வப்போது நடுநடுவே)."அதெப்பிடிங்க நூடுல்ஸ் ஸ்டிராப்ஸ் அம்மையாரைப் பத்தி பதிவுல சொல்லாம இருக்க முடியும்?

    ReplyDelete
  3. ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு ஏகத்திற்கும் திட்டும் போது, ஆட்டத்தின் விமரிசனத்தையும் தாண்டி தனிப்பட்டதாகக் கொள்ளப்படுகிறது. யாரையாவது ரொம்ப உசத்துவது, பின் தூக்கிப்போட்டு மிதிப்பது என்ற நிலை தான் ஊடகங்களும் விளையாட்டு விமர்சகர்களும் செய்து வருவது. கவாஸ்கர் - சித்து - பாய்க்காட் கோஷ்டி இப்படிப் பேசித்தான், நம்மாட்கள் ESPN ஐ பகிஷ்காரம் செய்தார்கள். இப்படி ஏதாவது அளவுக்கு மீறிச் சொல்லும்போது தான் "நீ மட்டும் என்ன கிழித்தாய்" என்று நினைக்கத் தோன்றுகிறது. (சுப்புடு செம்மங்குடி உட்பட, பல வித்வான்களை நிலைகுலையச் செய்தவர். அதற்காக அவர் ஒரு சரளி வரிசையேனும் பாடுவாரா என்று கேட்க முடியாது தான்)

    கவாஸ்கருக்கு நுண்ணறிவு தான் - ஆனால் அதீதமான jingoism உள்ளவர். இதனால்தான், எதிர் அணியினர் சிரித்தாலும் இவருக்குப் பற்றிக் கொண்டு வருகிறது. இப்படி இருப்பவர் வர்ணனை எப்போதும் நிலையாக இருக்காது.

    கவாஸ்கர் ஆடிய நாட்களில் நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. பார்த்த மட்டில், தென்னிந்திய ஆட்டக்காரர்களை இளப்பமாகப் பார்த்த மும்பய் haughtyness எனக்குப் பிடித்ததில்லை.

    மற்றபடி Sunil Gavaskar Presents என்ற நல்ல நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். இவரது stylish ஆன ஆட்டம் பிடிக்கும். இவரின் சிறப்பு ஆலோசனை நம் அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், இவருடைய வர்ணனை மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை.

    ReplyDelete
  4. பத்ரி,
    இங்கே நிறைய எழுதிவிட்டு, புளோகர் கமென்ட் போட பட்டனை அமுக்கினால், லாகின் செய்த பின் என்னுடைய டாஷ் போர்ட் வருகிறது. இப்படியாக எழுதினதெல்லாம் போய்விட்டது. அப்புறம் வெறுமே அமுக்கி, வழக்கமான முறையில் (என் எடிட்டரில் அடித்து) பின்னூட்டம் போட்டேன்.

    நிற்க.

    தொலைக்காட்சி வர்ணனை குறித்து நீங்கள் எழுதினது was informative.

    நன்றி.

    By: asdfgf Kannan

    ReplyDelete
  5. என்னைப் பொருத்தவரையில் - ஆஸ்திரேலியாவின் - ரிச்சி பெனோ, பில் லாரி, இயான் சாப்பல் போன்றோரின் வர்ணனைகள் மிக அருமையாக இருக்கும். பில் லாரி உணர்ச்சிவசப்படும் போது வர்ணனையை கேட்டுப்பாருங்கள்.. டோனி கிரேக்கும் ஒரு நாள் பந்தயங்களின் இறுதி ஒவர்களில் எல்லாருடைய இதயத்
    துடிப்பை அதிகரிப்பார். (ஷார்ஜா பந்தயங்கள்).. ஆனால் சமீபகாலமாக இந்திய எதிர்ப்பு பாணியை பின்பற்றுவதால் அவரைக் கூப்பிடுவதில்லை போலும். இங்கிலாந்தில் -டேவிட் கோவரும், மே.இந்தியதீவின் (பெயர் மறந்துவிட்டது) - ரொம்ப நாள் வர்ணனையாளர்.. சிறப்பாக செய்வர்.

    இந்தியாவில் Harsha Bogle மட்டுமே (கொஞ்சம் அதிகம் பேசினாலும்) நடுநிலையோடு செய்பவர்.

    குமார்.வி

    By: Kumar

    ReplyDelete