Monday, October 25, 2004

மையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்

மையான்மார் (பர்மா) ராணுவ ஜெனரல் தான் ஷ்வே இந்தியா வந்துள்ளார்.

[பிரிட்டனிடமிருந்து 1948இல் பர்மாவுக்கு விடுதலை கிடைத்தது. தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் போல பர்மாவிலும் மக்களாட்சிதான் ஆரம்பித்தது. ஆனால், அவ்வப்போது பாகிஸ்தானில் நடந்தது போல, 1962இல் பர்மாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை பர்மாவின் தலையெழுத்து ராணுவத்திடம்தான். 1990இல் திடீரென ராணுவம் 'சரி, தேர்தல்தான் நடத்திப் பார்ப்போமே' என்று முடிவு செய்ய, ஆங் சான் சூ சி என்பவரது கட்சி தேர்தலில் ஜெயித்தது. உடனே இந்தத் தேர்தல் செல்லாது என்று ராணுவம் அறிவித்து மீண்டும், தன் ஆட்சியை வலுப்படுத்தியது. சூ சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். சூ சியின் கணவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. சூ சியின் கணவர் மைக்கேல் ஏரீஸ் 1999இல் காலமானார்.

1990இல் பர்மா ராணுவ அரசு, தன் நாட்டை மையான்மார் என்று பெயர் மாற்றியது. நாட்டின் தலைநகர் ரங்கூன், யாங்கூன் என்று பெயர் மாறியது.

சூ சிக்கு 1991இல் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இன்றும் கூட சூ சி பர்மாவில் சிறைப்பட்டுள்ளார். வெளிநாட்டவரை மணந்ததால் அவர் மையான்மார் அரசியலில் ஈடுபடக்கூடாது, தேர்தலில் நிற்கக்கூடாது என்று ராணுவம் சட்டம் கொண்டுவந்துள்ளது. மையான்மார் பெண்கள் வெளிநாட்டவரை மணக்கக்கூடாது என்று கூட சட்டம் உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடந்ததைப் போல, இனி வரும் நாள்களில் பர்மாவில் மாற்றம் உருவாகலாம். நெல்சன் மண்டேலா போல சூ சியும், மையான்மாரில் உண்மையான மக்களாட்சி வரச் செய்யலாம்.]

ஆனால் இப்பொழுதைக்கு தான் ஷ்வேதான் ராஜா. அவர் வைத்ததுதான் சட்டம். அவர் இதுநாள் வரை வெளிநாடுகளுக்கே போகாதவர். அவர் இப்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்தியா கூட சில வருடங்களுக்கு முன்னர் வரை சூ சிக்கு ஆதரவாகத்தான் இருந்தது. சூ சி சிறுவயதில் படித்தது இந்தியாவில்தான். இப்பொழுது மையான்மாருடன் இந்தியாவிற்கு பல காரியங்கள் நடக்க வேண்டியுள்ளது. முதலாவது வட கிழக்கு மாநிலங்களில் வம்பு செய்யும் பல பயங்கரவாதிகள் மையான்மார் காடுகளில் முகாமிட்டு, பயிற்சி பெருகின்றனர். பூடான், பங்களாதேஷ், மையான்மார் ஆகிய மூன்று இடங்களில், பூடானில் தொல்லையை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழித்தாயிற்று. பங்களாதேஷில் இப்பொழுதைக்கு முடியாது எனத் தோன்றுகிறது. எனவே இப்பொழுது இந்தியா மையான்மாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கிறது.

இரண்டாவது வர்த்தகம் தொடர்பானது. மையான்மாரில் ராணுவ ஆட்சி வந்த 1962இலிருந்து வெளிநாடுகளுடனான உறவு குறைந்து போனது. பல மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை காரணமாக மையான்மாருடன் உறவு கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டனர். [மேற்கத்திய நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் மனித உரிமை என்று பேசுவதெல்லாம் அபத்தம். தமக்கு வேண்டிய நேரத்தில் பாகிஸ்தான், சீனா முதல் ஈராக் வரை எல்லோருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். வேண்டாவிட்டால் மனித உரிமை பற்றிப் பேசுவார்கள்.] இப்பொழுது பர்மாவில் உருப்படியான உள் கட்டுமானம் எதுவுமே இல்லை. இந்தியா தனக்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று பார்க்கிறது போலும்.

மையான்மாருக்கும் இந்தியாவுக்கும் இடையே ரயில், சாலை வசதிகள் கட்டப்பட இருக்கின்றன. இதுவே நீட்டப்பட்டு தாய்லாந்து வரைக்கும் செல்லவுள்ளது. மையான்மாரில் எரிவாயு, எண்ணெய் வளத் திட்டங்களில் இந்திய எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் (ONGC, GAIL) ஈடுபட்டுள்ளன.

இந்தியாவுக்கும் மையான்மாருக்கும் இடையே வர்த்தகம் - ஏற்றுமதி, இறக்குமதி - இரண்டுமே அதிகமாகிக் கொண்டுதான் வருகின்றன.

====

தான் தோழமை கொண்டுள்ள நாடுகளில் மக்கள் நசுக்கப்படுகிறார்களா, மனித உரிமைகள் மீறப்படுகின்றதா என்பதைப் பற்றி இந்தியா இனியும் கவலைப்படாது என்றே தோன்றுகிறது. பொருளாதாரக் காரணங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியுறவுக் கொள்கையை இனி முன்செலுத்தும் என்றும் தோன்றுகிறது.

9 comments:

  1. பத்ரி, இந்த மாதிரி பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெளியுறவை அமைத்துக் கொள்வது நல்லதா தப்பா என்று நீங்கள் சொல்லவில்லையே? இதைப் பற்றிய உங்களது பார்வை என்ன?

    ReplyDelete
  2. தப்பு. ரொம்பத் தப்பு.

    Politics of expediency - முடிவு நமக்கு நல்லதாக, வேண்டப்பட்டதாக இருந்தால், அது போதும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் இதுநாள் வரை (இப்பொழுதும் கூட) நடந்துகொண்டதால்தான் உலகின் பல்வேறு பகுதிகளின் எக்கச்சக்க குழப்பங்கள். கம்யூனிசத்தை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார்கள். விளைவு - ஆப்கனிஸ்தான், ஒசாமா பின் லேடன், 9/11.

    இந்தியா மையான்மாருடன் இப்பொழுது கைகோர்த்துக்கொள்வதால் இந்தியாவிற்கு இன்னமும் 500-700 மில்லியன் டாலர்கள் ஆண்டுக்கு வர்த்தகம் அதிகமாகலாம். ஆனால் மையான்மார் நாட்டு மக்களின் அவதிக்கு விடிவு காலம் வருவது இன்னமும் அதிக வருடங்கள் பிடிக்கும்...

    நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.

    ReplyDelete
  3. பத்ரி, நேர்த்தியான பதிவு. வெளியுறவுக் கொள்கையை சுயலாபம் கருதி வடிவமைத்துக்கொள்வது நெறிரீதியாக தவறென்றாலும், சிலசமயங்களில் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. இதற்கு உதாரணம்: மத்திய கிழக்கு நாடுகள். ஜனநாயகம் இல்லாத/மனித உரிமை என்பதை கேட்டறியாத இப்பகுதிநாடுகளுடன் எண்ணை/எரிவாயு வர்த்தகம் பொருட்டு உலகின் அனைத்து நாடுகளும் ஒட்டி உறவாடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. வெளியுறவுக் கொள்கையில் "Double standards" இருப்பது வருத்தத்தக்கதானுலும் "necessary evil"ஆக உள்ளது.

    By: Ravikumar

    ReplyDelete
  4. //நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.//

    1970களில் பெட்ரோலியத் தட்டுப்பாடு வந்தபோது, சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சேர்த்து இந்தியாவை lowest priority listல் தள்ளியது. அப்போது நமது தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியது சதாம் உசேன் தான். ரவிக்குமார் சொன்னதுபோல, இது ஒரு necessary evil தான். மேலும், மேற்கத்திய நாடுகள் போல் நாம் power play யில் ஈடுபடப்போவதில்லை (hopefully) என்பதால், வர்த்தகத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

    ReplyDelete
  5. //நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.//

    1970களில் பெட்ரோலியத் தட்டுப்பாடு வந்தபோது, சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சேர்த்து இந்தியாவை lowest priority listல் தள்ளியது. அப்போது நமது தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியது சதாம் உசேன் தான். ரவிக்குமார் சொன்னதுபோல, இது ஒரு necessary evil தான். மேலும், மேற்கத்திய நாடுகள் போல் நாம் power play யில் ஈடுபடப்போவதில்லை (hopefully) என்பதால், வர்த்தகத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

    ReplyDelete
  6. //நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.//

    1970களில் பெட்ரோலியத் தட்டுப்பாடு வந்தபோது, சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சேர்த்து இந்தியாவை lowest priority listல் தள்ளியது. அப்போது நமது தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியது சதாம் உசேன் தான். ரவிக்குமார் சொன்னதுபோல, இது ஒரு necessary evil தான். மேலும், மேற்கத்திய நாடுகள் போல் நாம் power play யில் ஈடுபடப்போவதில்லை (hopefully) என்பதால், வர்த்தகத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

    ReplyDelete
  7. தனியார் நிறுவனங்களோ, அரசு நிறுவனங்களோ வர்த்தகத்தில் ஈடுபடுவது வேறு... அரசுகள் இரண்டும் கூட்டாக உட்கார்ந்து பேசுவது வேறு.

    ஆனாலும் நேற்று மியான்மாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மக்களாட்சி பற்றியும் சில பேச்சுகள் வந்தது சந்தோஷமே. அதற்கு தான் ஷ்வே தரப்பிலிருந்து அவரும் மக்களாட்சியை விரும்புவதாகச் சொல்லியிருப்பது சிரிப்பைத்தான் வரவழைத்தது. ஆங் சான் சூ சியை முதலில் விடுவிக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பிலிருந்து பேசியிருக்க வேண்டும்.

    ReplyDelete
  8. மியன்மார் என்ற சொல்லாக்கமே இங்கே பரவலக ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதன் தலை நகருக்கு யங்கூன் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. மையான்மார், யாங்கூன் என்று படிக்கும்போது சற்று நெருடுகிறது. மற்றபடி தனிதன்மையுடன் கூடிய நேர்த்தியான பதிவு.

    By: இஸ்மாயில்,சிங்கை

    ReplyDelete
  9. Sorryf about this detour, but whatever happened to your "scathing review?" Still in the works or consolidating your thoughts? Either way, can't wait to read it. Don't disappoint!


    By: Saumya

    ReplyDelete