Tuesday, October 19, 2004

மஹாராஷ்டிர தேர்தலும், அதற்கப்பாலும்

நடந்து முடிந்த மஹாராஷ்டிர தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

சோனியா காந்தி ஆதரவாளர்கள் இது சோனியா காந்திக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்கிறார்கள். சிவ சேனை பால் தாக்கரே இந்தத் தோல்விக்குக் காரணம் முஸ்லிம்களும், வெளியாரும் என்கிறார். இனியும் அவர் பேச்சை யாரும் - அவரது கட்சி விசுவாசிகளே கூட - நம்பத் தயாராக இல்லை என்பது சந்தோஷத்துக்குரிய விஷயம். பாஜாகவின் பிரமோத் மஹாஜன் தன் கட்சி தோற்றதற்கு தானே முழுக்காரணம் என்கிறார். இதனால் அதிகமாக சந்தோஷம் அடைவது பாஜகவின் சுஷ்மா சுவராஜ்! வெங்கையா நாயுடு பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகி நேற்று எல்.கே.அத்வானி மீண்டும் தலைவராகியுள்ளார்.

உண்மையான வெற்றிக்குக் காரணம் ஷரத் பவாரின் கட்சி (தேசியவாத காங்கிரஸ்), அவருக்கு மஹாராஷ்டிரத்தில் இன்னமும் இருக்கும் செல்வாக்கு ஆகியவையே.

1999இல் மஹாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சோனியா காந்தியின் தலைமையை ஏற்காத ஷரத் பவார் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஏற்படுத்தியிருந்தார். தனியாகவே எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியும் எல்லா தொகுதிகளிலும் தன்னுடைய ஆதரவுக் கட்சிகளுகடன் போட்டியிட்டது. இவ்விருவருக்கும் எதிராக அப்பொழுதைய ஆளும் கூட்டணி பாஜக-சிவ சேனா இணைந்து போட்டியிட்டது. இந்த மும்முனைப் போட்டியில் எந்த ஒரு குழுவுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இரண்டும் கூட்டணி அமைக்க நேரிட்டது.

அந்நேரத்தில் காங்கிரஸ் தன்னிடம் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் முதல்வர் பதவி தன் கட்சிக்குத்தான் வரவேண்டும் என்றது. தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஒப்புக்கொண்டது. முதலில் விலாஸ்ராவ் தேஷ்முக்கும், பின் காங்கிரஸுக்கே உரிய 'பாதியில்-முதல்வரை-மாற்றியே-தீருவோம்' என்னும் கொள்கைப்படி சுஷில்குமார் ஷிண்டேயும் முதல்வரானார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்துவதில் எப்பொழுதும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான். பல மாநிலங்களிலும் கூட்டணி அமைத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் நிலை.

ஜம்மு & காஷ்மீரில் 2002இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நேஷனல் கான்பரன்ஸ் கட்சியை எதிர்த்து காங்கிரஸ், PDP ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட்டன. PDP (People's Democratic Party) என்பது தேசியவாத காங்கிரஸ் போல காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சி. முஃப்தி மொஹம்மத் சயீத் - வி.பி. சிங் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் - அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி ஆகியோரால் உருவாக்கப்பட்ட கட்சி. எப்படி ஷரத் பவார் மஹாராஷ்டிரத்தில் முக்கியமான தலைவரோ, முஃப்தியும் காஷ்மீரில். குட்டையைக் குழப்ப பாஜக தனித்துப் போட்டியிட்டது. மத்தியில் அந்த நேரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் நேஷனல் கான்பரன்ஸ் கட்சி உறுப்பினராக இருந்தது, ஒமார் அப்துல்லா அப்பொழுது மத்தியில் அமைச்சராகவும் இருந்தார். ஆக மத்தியில் கூட்டணி, மாநிலத்தில் எதிர்ப்பு! பாந்தர்ஸ் பார்ட்டி என்றொரு கட்சியும் இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பலம் வாய்ந்தது. அதுவும் தனியாகப் போட்டியிட்டது. இதைத்தவிர பல சுயேச்சைகள்.

ஆனால் உண்மையான போட்டி ஆளும் கட்சி நேஷனல் கான்பரன்ஸ், காங்கிரஸ், PDP ஆகியவற்றுக்கிடையேதான். இந்தத் தேர்தலிலும் மஹாராஷ்டிரம் போல தொங்கு சட்டமன்றமாக அமைந்தது. இங்கும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் (21), அதன் கூட்டாளி PDPஐ (15) விட அதிக இடங்கள் கிடைத்தன. நேஷனல் கான்பரன்ஸ் 28 இடங்களைப் பெற்றது. பலத்த குடுமிப்பிடி சண்டைகளுக்குப் பின், காங்கிரஸ், PDP, சில உதிரிகள் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்றும், 2.5 ஆண்டுகளுக்கு PDP ஆள் முதல்வராகவும், அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆள் முதல்வராவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இப்பொழுது PDPஇன் முஃப்தி மொஹம்மத் சயீத் முதல்வராக உள்ளார். இந்த மாதத்துடன் 2 ஆண்டுகள் முடிவடைகின்றன. 2005 மே மாதம் காங்கிரஸ் முதல்வர் பதவியை எடுத்துக்கொள்ளும்.

இதற்கிடையில் 2004 மே மாதம் பாராளுமன்றத்துக்கும், கர்நாடகா சட்டமன்றத்துக்கும் நடைபெற்ற தேர்தலில் மற்றுமொரு தொங்கு சட்டமன்றம். பாஜக 79 தொகுதிகளையும், ஆளும் கட்சி காங்கிரஸ் 64 தொகுதிகளையும், ஜனதா தளம் 58 தொகுதிகளையும் பெற்றனர். மூவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து மும்முனைப் போட்டியில் ஈடுபட்டிருந்தனர். மேலே சொன்ன இரு மாநிலங்களைப் போலவே இங்கும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ்-ஜனதா தளம் இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த முடிவு செய்தன. ஜனதா தளம் தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டது. காங்கிரஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின் ஜனதா தளம் ஜம்மு & காஷ்மீர் பாணியில் 2.5 ஆண்டுக்கு ஒருமுறை முதல்வர் பதவியை மாற்றிக்கொள்ளலாம் என்று கேட்டுப் பார்த்தது. அதற்கும் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை, கடைசியில் ஜனதா தளம் பிற அமைச்சர் பதவிகளில் நல்ல "சுளையான" பதவிகளைப் பெற்றுக்கொண்டு பதிலுக்கு காங்கிரஸுக்கே முதல்வர் பதவியைக் கொடுத்து விட்டது. காங்கிரஸின் தரம் சிங் - ஜனதா தளத் தலைவர் தேவ கவுடாவின் நண்பர் - என்ற முறையில் முதல்வரானார்.

இப்பொழுது மஹாராஷ்டிரத்துக்கு வருவோம். தேர்தல் முடிந்து விட்டது. இம்முறை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இரண்டும் இணைந்தே போட்டியிட்டன. இல்லாவிட்டால் பாஜக-சிவ சேனை கூட்டணியிடம் தோற்றுப் போயிருப்பார்கள். ஆனால் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பின், ஜெயித்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி முன்கூட்டியே பேசி முடிவுசெய்யவில்லை. தேர்தலுக்குப் பின், தேசியவாத காங்கிரஸ் 71 இடங்களையும், காங்கிரஸ் 69 இடங்களையும் பெற்றன. இப்பொழுது ஷரத் பவார் தன் கட்சி காங்கிரஸை விட அதிக இடங்களைப் பெற்றதால் ஐந்தாண்டுகளுக்கும் தன் கட்சியே முதல்வராக இருக்கும் என்கிறார். காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. ஏதோ கணக்குகளைக் காட்டி காங்கிரஸ் தான் ஏற்கனவே RPI(A), மற்றும் கம்யூனிஸ்டுகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் அவர்களது இடங்களையும் சேர்த்து தனக்கு 72 இடங்கள் இருப்பதாகவும், ஆகவே தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்றும் சொல்கின்றனர். இல்லையா, சரி, ஜம்மு & காஷ்மீர் ஃபார்முலாவை - அதாவது இருவருக்கும் தலா 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முதல்வர் என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

தன் கட்சிக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் தாங்கள் ஆட்சியில் சேர மாட்டோம் என்றும், வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்றும் பயமுறுத்துகிறார் ஷரத் பவார். வெளியிலிருந்து ஆதரவு என்றால் சும்மா பயமுறுத்திக் கொண்டிருப்போம், எப்பொழுதுவேண்டுமானாலும் கவிழ்த்து விடுவோம் என்று பொருள்! (மத்தியில் கம்யூனிஸ்டுகள் நடந்துகொள்வது போல!)

இந்தக் கூத்தும் சில நாள்களில் முடிவாகும்.

இவற்றைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆட்சி நடத்த சிறிதும் தெரியவில்லை, விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. ஜம்மு & காஷ்மீரில் PDP பிடிவாதமாக இருந்ததால்தான் அவர்களுக்கு ஆட்சி செய்ய கொஞ்சமாவது அனுமதி கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் மஹாராஷ்டிரத்தில், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன், தன் முதல்வர் தலைமையில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஐந்தாண்டுகள் தேசியவாத காங்கிரஸ் ஆசாமி ஒருவர் முதல்வராக ஆட்சி நடத்திட ஏன் உதவி செய்யக்கூடாது?

1 comment:

  1. தலைவா, மந்திரிப்பதவிகள் % குறைக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தனக்கே எல்லா பதவி என்ற பதவி வெறி தான் காங்கிரஸ்காரர்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டுகிறது.. மகா.ரா. வுக்குத் தேவை நல்ல திடமான தலைமை. மும்பையும், மகா,வும் மீண்டும் தொழில்துறை, வணிகத்தில் முதலிடம் பெறவேண்டுமென்றால், சிவசேனா மற்றும் இன்னபிற அண்டர்கிரவுண்ட் ஆட்களை கட்டுப்படுத்தவேண்டுமென்றால் நல்ல தலைமை வேண்டும். ஷிண்டே மாதிரியான ஆமாம் சாமி ஆட்கள் சிறந்த முதல்வராக பணியாற்ற முடியாது.. பணியாற்ற யார் காத்திருக்கிறார்கள் என்கிறீர்களா ? அதுவும் சரிதான்.

    மகேஷ்

    By: Mahesh

    ReplyDelete