Sunday, January 02, 2005

நிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு

* நாளுக்கு நாள் தேவைகள் புதிது புதிதாக மாறுகின்றன. காலரா வரும் என எதிர்பார்த்த மருத்துவர்கள் காலரா மருந்துகளை சேர்த்து வைக்க, காலராவுக்கு பதில் டைபாய்டால்தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாகையில் விவரம் கேட்ட நண்பர் சொன்னார். அதைப்போல கண்களைத் தாக்கும் ஜுரமும் வருகிறதாம்.

* பள்ளிக்கூடங்களில் தங்கிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை, பள்ளிக்கூடங்கள் திறக்கவேண்டியிருப்பதால் வெளியேறச் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். நிலைமை என்னவென்று இப்பொழுதைக்குச் சரியாகப் புரியவில்லை. திங்கள் கிழமையே (நாளையே) பள்ளிக்கூடங்களைத் திறக்க நாகை DEO விரும்புகிறார் என்று கேள்வி. என்ன அப்படித் தலைபோகிற அவசரமோ!

* உணவு, உடைகளுக்கு அப்பால், மற்ற தேவைகள் உள்ளன. நேற்று தலைக்குத் தடவிக்கொள்ளும் தேங்காய் எண்ணெய், சோப்புக் கட்டிகள் என்று சிலவற்றை வாங்கி அனுப்பினோம். ராம்கி விநியோகம் செய்வார். இவை போதாது. இன்னமும் நிறையத் தேவைகள் இருக்கும்.

* சிறு குழந்தைகளுக்கென பால் பவுடர், பாலைச் சூடாக்கும் மின்சார ஹீட்டர்கள், பீடிங் பாட்டில்கள் என்று தேவைப்படுகின்றன. நாளை முடிந்தவரை பீடிங் பாட்டில்களை வாங்கி அனுப்ப வேண்டும்.

இவையெல்லாம் தாற்காலிகத் தேவைகள்தான். மற்றபடி கரையோரப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சும்மா "மீனவர்கள்தானே!" என்று பலர் தத்தம் வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம். ஆனால் ஓர் இயந்திர விசைப்படகு குறைந்தது ரூ. 1 லட்சம் ஆகிறது. நாகை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் படகுகள் இருந்தன. சில பெரிய படகுகள் ரூ. 2, 3 லட்சங்களுக்கு மேல். மொத்தத்தில் தமிழகக் கரையோரத்தில் மட்டும் உடைந்து நொறுங்கி வீணான படகுகள் சுமார் ரூ. 100 கோடி இருக்கலாம் என நினைக்கிறேன். இதை எப்படி ஈடுகட்டப்போகிறோம்?

ஏற்கனவே படகுகளை வைத்திருந்த, இப்பொழுது உயிருடன் இருப்போருக்கு அரசு வங்கிகளாவது வட்டியில்லாக் கடன் - அல்லது மிகக்குறைந்த வட்டியுடன் கடன் - (ஐந்து வருடங்களில் திருப்பி அடைக்கக் கூடியதாக) கொடுக்குமா? இது அவசியத் தேவை என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு படகும் நாளொன்றுக்கு ரூ. 2,000-5,000 வரை சம்பாதிக்கக் கூடியவை. நாகைப் பகுதிகளில் கட்டுமரத்தை மட்டுமே பயன்படுத்தி சில மாதங்களில், நள்ளிரவு நேரங்களில் 'கோலா' என்ற மீனைப் பிடிப்பார்கள். நிறைய விலை போகக்கூடிய மீன்கள் இவை. கட்டுமரங்களில் பல அழிந்துள்ளது. மீன்வலைகள் நாசமாகியுள்ளன. இதைப்போல கரையோரங்களில் இறால் பண்ணைகள் வைத்திருந்தவர்களின் முழு முதலீடும் அழிந்துபோயுள்ளது. இந்தத் தொழிலையெல்லாம் நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.

இந்த வருமானத்தை நம்பியே பல்வேறு உப தொழில்கள் உள்ளன.

உளவியல் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் எப்படிக் கிடைக்கப் போகின்றன? அநாதைகளாகிய சிறு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம்? இதற்கெல்லாம் அரசிடமிருந்தும், தொண்டார்வ நிறுவனங்களிடமிருந்தும் பல பதில்கள் தேவை.

===

வேறொரு வகையில் நான் ஈடுபட்டுள்ள தொழில் ஒன்றிலும் சில பாதிப்புகள். சென்னையில் புத்தக அச்சகங்கள் பலவும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளன. அங்கு அச்சகங்களில் வேலை செய்வோர் பலரும் கடலையொட்டிய குடியிருப்புகளிலிருந்து வந்தவர்கள். புத்தகங்களை பைண்டிங் செய்யும் பெண்கள் பலரும் இந்தக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள்தான்.

ஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தோ, உறவினர்களில் யாரையாவது இழந்தோ...

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு (7-16 ஜனவரி 2004) வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை திருவல்லிக்கேணியில் பைண்டிங் செய்யப்பட்டு வந்தவை. புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பதிப்பாளரும் தமது சென்னைப் புத்தகக் கண்காட்சி வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது ஒதுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்.

4 comments:

  1. 1 லட்சம் ஆகிறது. நாகை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் படகுகள் இருந்தன. சில பெரிய படகுகள் ரூ. 2, 3 லட்சங்களுக்கு மேல். மொத்தத்தில் தமிழகக் கரையோரத்தில் மட்டும் உடைந்து நொறுங்கி வீணான படகுகள் சுமார் ரூ. 100 கோடி இருக்கலாம் என ==

    நீங்கள் சொல்லியுள்ளதை பார்த்தால்,படகுகளுக்கு காப்பீடு கிடையாது என்பது போல தோன்றுகிறது..? 100,000/200,000 உரூபாய்க்கள் கொடுத்து முதலீடு செய்ததிற்கு காப்புகள் ஏதுமில்லாமல்,கடலில் இயக்கி வந்தனரா..

    By: vassan

    ReplyDelete
  2. > ஒவ்வொரு பதிப்பாளரும் தமது சென்னைப் புத்தகக் கண்காட்சி வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது ஒதுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்.

    Dear Badri,

    As a member of BAPASI, you may please take this at the association level (is Gandhi Kannadasan still the president?).

    Have you noticed none of the Sabhas including Music Academy had the courtesy to cancel at least one of their day's concert programmes or donate a day's collections for the relief? 'ammaykku naraka vadhana; moLkku veena vaadhana' !!

    So are the cinema houses. Shame on all of these entities.

    Rgds,
    era.mu

    By: eramu

    ReplyDelete
  3. வாசன்: விசைப்படகுகளுக்கு எந்தவிதக் காப்பீடும் இல்லாமல்தான் இயங்கி வந்துள்ளனர். இறந்தவர்களுக்கு ஆயுள் காப்பீடும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏதோ 5% பேர் மிகச்சிறிய தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால் அதிகம். அதைப்போலவே வீடுகள் மீதான காப்பீடு எதுவும் கிடையாது.

    இனியேனும் உயிர், உடைமைகள் மீதான காப்பீடு எடுக்குமாறு செய்யலாம்.

    ReplyDelete
  4. முருகன்: கிழக்கு பதிப்பகம் இப்பொழுதைக்கு BAPASI உறுப்பினர் கிடையாது. புதிதாக வருபவர்களை பபாஸி மூன்று வருடங்கள் தாண்டிய பின்னர்தான் உறுப்பினராக்கிக் கொள்வார்களாம்! இது பெரிய கதை... வேறிடத்தில் இந்தச் சண்டையை வைத்துக்கொள்ள வேண்டும்.

    எனவே உறுப்பினரல்லாத என்னால் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியாது. வேண்டுமானால் - வெளியாராக - கேட்டுப் பார்க்கலாம். அவ்வளவே.

    ReplyDelete