Saturday, June 11, 2005

புறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்

இன்று கொட்டிவாக்கத்தில் சில குழந்தைகளுக்கு(ம் பெரியவர்களுக்கும்...) கணினிப் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தோம்.

குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் சந்தோஷத்தைத் தருகிறது. பெரியவர்களைவிட வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

இன்னும் சில நாள்களில் இந்தக் குழந்தைகளின் கைவண்ணத்தை இணையத்திலே நீங்கள் பார்ப்பீர்கள்.

சும்மா அமர்ந்திருக்கும்போது இந்தக் குழந்தைகளிடத்தில் பேச்சுக்கொடுக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைத்தன. இவர்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றிலும் இருப்பது அத்தனையுமே ஆங்கில மீடியத்தில் நடக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள். எல்லாமே தனியார் பள்ளிகள். நல்லவேளை, தமிழ் ஒரு பாடமாகவாவது உள்ளது.

நான் "உன் பெயர் என்ன?" என்று கேட்டாலுமே "My name is" என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் யாருக்குமே சரளமாக ஆங்கிலம் பேசத்தெரியவில்லை. ஏழாவது, எட்டாவது படிக்கும் மாணவர்களுக்கும் கூட. ஆனால் தமிழே சரியாகக் கற்றுக்கொள்ளாததால் தமிழில் சரியாக எழுதவும் தெரியாது என்று புரிந்துகொண்டேன். "தமிழ்தான் கஷ்டமான பாடம்" என்று சொல்கிறார்கள்!

பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வரியையும் ஆங்கிலத்தில் படித்து, அதனை ஒருமுறை தமிழில் மொழிபெயர்த்துதான் சொல்லிக்கொடுக்கிறார்களாம். பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் உள்ளூர எதுவுமே புரிவதில்லை. மனனம் செய்துதான் பரீட்சை எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் என்னுடன் பேசுவார்களா என்று சிலரைக் கேட்டேன். அனைவரும் மறுத்துவிட்டனர். தமிழில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழில் சொல் ஆளுமை குறைவாக - வெகு குறைவாக - உள்ளது.

ஆங்கிலத்திலும் சில அடிப்படையான விஷயங்களின் புரிதல் குறைவாக உள்ளது. ஆங்கிலத்தின் மிகப்பெரிய தொல்லையான spelling இந்தக் குழந்தைகளை வாட்டியெடுக்கிறது. பல சொற்களைச் சொல்லி ஸ்பெல்லிங் கேட்டேன். நிறையவே திண்டாடினார்கள்.

நகரத்தில் வசிக்கும் மேட்டுக்குடிப் பிள்ளைகள் கான்வெண்டில் படித்து ஆங்கிலத்திலேயே வாழ்க்கை நடத்தலாம். அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் இந்தப் புறநகரின் ஆங்கில மோகம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆங்கில மீடியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழையும் சரியாகக் கற்காமல் ஆங்கிலத்தையும் சரியாகக் கற்காமல் அரைகுறையாக உருவாக்கப்படும் மாணவர்கள் பிற்காலத்தில் நிறையவே திண்டாடப் போகிறார்கள்.

இந்தக் குழந்தைகள் அனைவரும் - 100% - முதல் தலைமுறையாக இப்படி ஆங்கிலக் கல்வி பயில்கிறார்கள். வீட்டில் பெற்றோர்களால் இவர்களுக்குத் துளியளவும் பாடங்களில் உதவி செய்யமுடியாது என்பதையும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.

3 comments:

  1. கிராமப் புறங்களில் கூட., ஆங்கில வழிக் கல்வி குழந்தைகள் பயில, புலம் பெயர்ந்தோ., அல்லது நகரத்தில் இருக்கும் உறவினர் வீடுகளில் தங்க வைத்தோ அல்லது 11/2 மணிநேரம் பயணிக்க வேண்டிய ஆங்கிலப் பள்ளியில்தான் அதிகம் சேர்க்கின்றனர். வீட்டுக்கு ஒரிரு குழந்தைகள் மட்டுமே இருப்பதால் அதிகம் தற்போது ஆங்கில வழிக் கல்வியே நகரம்., புறநகர், கிராமம் அனைத்திலும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே அதுவும் ஏக்கத்தோடு தன் குழந்தைகளை தமிழ் படிக்க வைக்கின்றனர். நான் இதச் சொன்னால்., மேற்கில் உட்கார்ந்து கொண்டு என கணைகள் வரும்!. ம்....

    ReplyDelete
  2. Dear Badri,

    i appreciate your noble work. I would like to join you and will intimate you when i am ready.

    As long as we leave our education to the christian missionaries, evils like you mentioned will continue take place in our country.

    We have to start our own educational institutions with our own indigenous syllabus giving importance to our culture, glory and our past scientific advantage. Unless we have pride in our country, we cannot be a developed country anymore.

    ReplyDelete
  3. //As long as we leave our education to the christian missionaries, evils like you mentioned will continue take place in our country.//

    எந்த விதத்தில் கிறித்துவ கல்வி கூடங்களைப்பற்றி இப்படி சொல்கின்றீர் எனப்புரியவில்லை?

    எல்லா கிறித்துவப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி மட்டுமே இருந்தது என்பதில்லை, நான் படித்தப்பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம் இரண்டு வழி கல்வி முறையும் உண்டு,

    கடலூரில் பெரிய, சிறந்த பள்ளிகள் மொத்தம் இருபாலருக்கும் சேர்ந்து 10 இருக்கும், அந்த பட்டியலில் இரண்டே இரண்டு பள்ளிகள் மட்டும் தான் கிறித்துவ மிஷினரிகளால் நடத்தப்படாதவை, அந்த இரண்டிலும் ஆங்கில வழிக்கல்வி மட்டுமே உண்டு, இரண்டு கிறித்துவ மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மீதி அத்தனை முக்கிய சிறந்த கிறித்துவ பள்ளிகள் அனைத்திலும் தமிழுக்கே முதலிடம்.

    நான் 12 ஆண்டுகள் கிறித்துவ பள்ளியில் தான் படித்தேன், ஒரே ஒரு நாள் கூட மத சம்பந்தப்பட்ட எதையும் எங்களுக்கு ஓதியதில்லை,

    கிறித்துவ கல்வி நிறுவனங்கள் இல்லையென்றால் நிச்சயமாக தமிழகத்திலே தரமான பள்ளிக்கல்வி பலருக்கு சாத்தியமாகியிருக்காது, தயவு செய்து அவர்களின் அற்பணிப்பையும், தொண்டையும் தவறாக பேசவேண்டாம்.

    ReplyDelete