Wednesday, June 29, 2005

என் பள்ளியின் நூற்றாண்டு விழா

From The Hindu: Centenary celebration of National Higher Secondary School, Nagapattinam

நாகையில் நான் படித்த, என் தந்தையார் வேலை செய்த தேசிய மேநிலைப் பள்ளியின் நூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட இருக்கிறது. நாளை நடக்கும் இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிறார்.

1904-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் நான்கைந்து பள்ளிக்கூடத்தில் ஒன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

2004-ல் நடக்கவிருந்த நூற்றாண்டு விழா, ஜெயேந்திர சரசுவதியின் கைது நிகழ்ச்சியால்தான் தள்ளிப்போடப்பட்டது என்று கேள்வி. அதாவது அந்த நேரத்தில் அப்துல் கலாம் தமிழகம் வர விரும்பவில்லை என்று ஒரு தகவல். வந்தால் அவரிடம் ஏதாவது எடக்கு மடக்காக கேள்விகள் கேட்கப்படுமோ என்று அவர் அஞ்சியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு உள்ளாக நாகையில் சுனாமியால் மாபெரும் அழிவு ஏற்பட்டது. அதனால் ஒட்டுமொத்தமாக இந்த நூற்றாண்டு விழாவையே தள்ளிவைத்துவிட்டார்கள். இப்பொழுது மீண்டும் குடியரசுத் தலைவரின் தமிழகம் வரும் நேரம் விழாவை நடத்துகிறார்கள்.

---

நாகையில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய இந்தப் பள்ளி இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. என்னுடைய 10வது, 12வது வகுப்பு வருடங்களைத் தவிர்த்து, பிற வருடங்களில் (முன்னும், பின்னும்) நாகையின் தென்னிந்தியத் திருச்சபை மேநிலைப் பள்ளிதான் பொதுவாக முதலிடத்தில் இருந்து வந்திருக்கிறது. இப்பொழுதும் அதில் அதிக மாற்றம் இருக்கும் என்று தோன்றவில்லை.

நாகை/நாகூரில் மொத்தமாக ஐந்து பள்ளிகள் இருந்தன : தேசிய மேநிலைப் பள்ளி நாகையிலும், நாகூரிலுமாக (இரண்டு கட்டடங்களிலிருந்து), தென்னிந்தியத் திருச்சபை மேநிலைப் பள்ளி, புனித அந்தோணியார் மேநிலைப் பள்ளி, நகராட்சி மகளிர் மேநிலைப் பள்ளி (மகளிர் மட்டும்), நடராஜன் தமயந்தி மேநிலைப் பள்ளி. ஆனால் இவற்றுக்குப் பிறகு புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிகள் அனைத்துமே தனியாருடைய மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். புதிய பள்ளிக்கூடங்கள் எதிலும் சரியான வசதிகள் உள்ளனவா என்று சொல்லமுடியவில்லை. ஆசிரியர்கள் கூட, தரமானவர்களா, தகுதியுடையவர்களா என்று தெரியாது. படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, அரசுத் தரப்பிலிருந்து புதிய பள்ளிகள் உருவாகவில்லை. வணிக நோக்குடைய தனியார்கள் மட்டும்தான் கல்வி விற்பனையில் இறங்கியுள்ளார்கள் என்று தோன்றுகிறது.

16 comments:

  1. "என்னுடைய 10வது, 12வது வகுப்பு வருடங்களைத் தவிர்த்து"

    அந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மாற்றத்திற்கு நீங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். சரியா?

    ReplyDelete
  2. சும்மா

    >> 1904-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் நான்கைந்து பள்ளிக்கூடத்தில் ஒன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். <<

    நாகைக்கு வடக்கே 30 சொச்ச மைல் போனால் சீர்காழி என்கிற ஊர் வரும். இந்த ஊரில் 1888 அல்லது 1890ல் ஆரம்பிக்கப்பட்ட லூத்தரன் திருச்சபை உயர்நிலைப்பள்ளியும், 1894 ஆரம்பிக்கப்பட்ட இந்து உயர்நிலைப்பள்ளியும் உண்டு !!

    -வாசன்

    ReplyDelete
  3. காஞ்சியில் படித்த Anderson Hr Sec School ஆர்ம்பிச்சு 160 வருஷத்துக்கு மேல ஆச்சு..
    1904 பள்ளி 3,4 பள்ளியாய் இருக்க Chance குறைவு..

    ReplyDelete
  4. ஓ! தகவல்களுக்கு நன்றி. தமிழகத்தின் மிகப்பழைய பள்ளி கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலா?

    ReplyDelete
  5. நான் படித்த தி.தி. தேவஸ்தானத்தின் வேலூர் திருவேங்கடவன் உயர்நிலைப்பள்ளி 125 ஆண்டு பழமை வாய்ந்தது. போட்டிப் பள்ளியான ஊரீஸ் பள்ளிக்கும் கிட்டத்தட்ட அதே வயதிருக்கும் (ஊரிஸ் கல்லூரிக்கு போன ஆண்டு நூற்றாண்டு விழா). இன்னும் ஏகப்பட்டது இருக்கும் சென்னை, திருச்சி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி என்று.

    ReplyDelete
  6. நமதூர் பள்ளி நூற்றாண்டுவிழா கொண்டாட இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி பத்ரி. நான் தேசிய மேநிலைப்பள்ளியைத்தவிர தென்னிந்திய திருச்சபையிலும் புனித அந்தோணியாரிலும் படித்திருக்கிறேன்.

    ஒரு சந்தேகம், ஹிந்து செய்தியில் இருக்கும் புகைப்படம் தேசிய மேநிலைப்பள்ளிதானா? உயரமான சுற்றுச்சுவர்களும் நாலுகால் மண்டபத்தை நோக்கி அமைந்திருக்கும் நுழைவாயிலும்தான் என் நினைவில் நிற்கிறது. ஒருவேளை 6 மாதங்களுக்குமுன் நான் நாகை சென்றிருந்தபோது இந்த மாற்றங்களை கவனிக்கவில்லை போலிருக்கிறது.

    - சலாஹுத்தீன்

    ReplyDelete
  7. CSI பள்ளியில் என் மாமா பணிபுரிகிறார். நன்றாக இருந்த பள்ளி இப்போது வீணாய்ப்போய் விட்டது என்று அவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  8. மேலும் ஒரு தகவல்

    சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள இந்து ஆரம்பப் பள்ளி 1895-ல் தொடங்கியதாகும்; இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  9. சலாஹுதீன்: அது நாகை தேசிய மேநிலைப் பள்ளிதான். முகப்பை மாற்றிக் கட்டியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. Chennai Adayar, St.Patrick's Anglo Indian School 125 varushathukkum munnal thodangapattathu.

    ReplyDelete
  11. நாங்கள் படித்த காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியும் 150 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது என்று நினைவு. சரியான வருடத்தை என் ஆசிரியர்களிடம் கேட்டு பிறகு எழுதுகிறேன்.

    பாலராஜன்கீதா

    ReplyDelete
  12. My School, Stanes AI HSS in cbe, was also started abt 150 yrs ago. So is the Stanes in Ooty.

    Other schools

    .:dYNo:.

    ReplyDelete
  13. தமிழகத்தில் 19 நூற்றாண்டின் பிற்பகுதியிலியே பல பள்ளிகள் நிறுவப்பட்டு விட்டன. கோவையில் என் தாத்தா படித்த St. Michael's, 150 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டது. மாணவர்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு பக்கத்து கிராமங்களில் இருந்து வந்து பயின்றனர்.
    (நான் தான் கிராமத்தில் படித்தேன்!).
    அருள்.

    ReplyDelete
  14. CSI Higher Secondary School, Nagai was started on 1840s, though I didn't remember the exact year. I'm an alumini of that school.

    I'm a bit surprised to see that Badhri is from Nagai. Between, I would like to know about the Nagai guys roaming around in the net and blog pages.

    Regards,
    Shankar.

    ReplyDelete
  15. நான் படித்த மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரைத் தற்காலிகத் தமிழாசிரியராக (Leave Vaccancy) பாரதியார் பணியாற்றியிருக்கிறார். அப்படியானல் அந்தப் பள்ளி அதற்கு முன்னரே துவக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது அதுவும் நூறாண்டு கண்ட ஒரு பள்ளி.
    -மாலன்

    ReplyDelete