Thursday, June 30, 2005

இந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்

Known Turf வலைப்பதிவிலிருந்து Lit, a critic view and half a question

சுதீஷ் பச்சவுரி சொல்வது:
இன்றைய எழுத்தாளர்கள் எந்தப் புதிய உண்மையையும் சொல்லிவிடவில்லை. அவர்கள் இளைய சமுதாயத்தைக் பற்றியோ, புதிய கருத்துகளையோ எழுதுவதில்லை. இப்பொழுது எழுதுபவர்கள் தாம் ஓர் எழுத்தாளர் என்ற பட்டத்தை விரும்புகிறார்கள். அவர்கள் விருதுகளைப் பெற விரும்புகிறார்கள். பெரும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரைத் தெரிந்து வைத்திருப்பதாலும், அவர்களுக்கு வேண்டியதைச் செய்வது, சாராயம் வாங்கிக்கொடுப்பது போன்றவற்றாலும் விருதுகளைப் பெறுகிறார்கள்.

இவர்கள் சுயவிரும்பிகள், தலைகனம் கொண்டவர்கள், இரட்டை நாக்கினர். இதுதான் பிரச்னையே. இவர்களுக்கு மீடியாவில் தோன்றிக்கொண்டே இருப்பதில் விருப்பம். ஆனால் வெகுஜன ஊடகங்களை வெறுப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். சந்தைக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு உலகமயமாக்கலின் நன்மைகளை உறிஞ்சிக்கொண்டே, தான் ஒரு கலகவாதி என்பதாகக் காட்டிக்கொள்வதற்காக சந்தைக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு தாங்கள் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்று சொல்கிறார்கள்.

கடைசியாக மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் (இந்தியில்) எப்பொழுது எழுதப்பட்டது தெரியுமா? 1949-ல் தர்மவீர் பாரதி என்பவர் எழுதிய குனாஹோன் கா தேவதா என்ற நாவல்தான் அது. இது அலஹாபாத் கல்லூரி அரசியல்களுக்கிடையே அமைக்கப்பட்ட காதல் கதை. இன்றளவும் கூடத் தொடர்ந்து விற்பனையாகி 49 பதிப்புகளைத் தொட்டிருக்கிறது. சினிமாவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய எழுத்தாளர் எவரும் இந்த நிலையை அடையவில்லை! அவர்கள் யாருக்கும் இன்றைய இளைய சமுதாயம் என்ன விரும்புகிறது என்று தெரியாது.

புஸ்தக் மஹால் பதிப்பாளர்களுக்கு அதிக லாபம் பெற்றுத்தந்த புத்தகம் எது தெரியுமா? அதுதான் "ரேபிடெக்ஸ் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்". ஓர் அச்சு இயந்திரம் இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பதினெட்டு மொழிகளில் மாற்றப்பட்டு, கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இந்நாட்டு இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறார்கள், ஆங்கிலம் தெரிந்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளராவது இதைப்பற்றி எழுதியிருக்கிறாரா?

வாசகர்களின் உலகம் மாறிவிட்டது. எழுத்தாளர் இதைக் கவனிக்க மறந்துவிட்டார்...

இலக்கியம் என்பது ஒரேமாதிரியாக இருப்பதல்ல. மாறிக்கொண்டே இருப்பது. பொதுமக்களின் விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக இந்த விருப்பங்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன. நாம் மக்களின் விருப்பங்களை மாற்றியமைக்க வேண்டும், அதே நேரத்தில் இப்பொழுதைய விருப்பங்களுக்குத் தீனி போடவும் வேண்டும். செய்தித்தாள்கள் இப்பொழுது இதைச் செய்வதில்லை. ஆனால் நாம் இதனைச் செய்யவேண்டும், ஆனால் சரியான ஊடக வசதியில்லாமல் இதனைச் செய்யமுடியாது. இது மற்றுமொரு பிரச்னை.

முந்தைய எழுத்தாளர்கள் தங்களுடைய பாத்திரங்களுக்கு இடையே வசித்தார்கள். சதாத் ஹஸன் மாண்டோ மும்பையில் வசித்தார். தொழிலாளர்களுடனும் பாலியல் பெண்களுடனும் பேசினார். இன்றைய எழுத்தாளர்கள் வசதியில் வாழ்கிறவர்கள். அவர்களுக்கு ஏழைமை பற்றி என்ன தெரியும்? நாட்டில் மிகப்பெரிய சுனாமி வந்தது; எத்தனை எழுத்தாளர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்?

இந்தி எழுத்தாளர்களுக்கு சாதாரணப் பொதுமக்களுடனான தொடர்பு சிறிதும் இல்லை என்பதுதான் பிரச்னை. அதனால்தான் பொதுமக்களைப் பொறுத்தவரை மிகச்சில பெரிய பெயர்களே - கவிதையாகட்டும், கதைகளாகட்டும் - இருக்கின்றன. அவர்களிடம் சென்றால்தான் தங்களுடைய தேவைகளும் அபிலாஷகளும் பூர்த்தியாகும் என்று மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். எழுத்தாளர்கள் நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை. அந்தப் பிரச்னைகள் என்னவென்றே அவர்களுக்குத் தெரிவதில்லை!
தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நாம் என்ன சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

13 comments:

  1. எல்லோருக்கும் பொருந்தும்...

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை. சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. எழுதுவதை பகுதி நேர தொழிலாகக்கொண்டு எழுதினால் மேற்கூறியவை எப்படி சாத்தியமாகும்? நமது எழுத்தாளர்களில் எழுத்தை மட்டுமே முழு நேர தொழிலாக கொண்டவர்கள் ஒரு எத்தனை பேர் இருப்பார்கள்?

    ReplyDelete
  3. இது இந்தி எழுத்துலகம் பற்றி ஒரு மனிதரின் கருத்து. ஆகையால் இதை இந்தி vs. தமிழ் எழுத்தாளர்களின் ஒப்பீடாய் பார்ப்பதற்குத் தயங்குகிறேன். ஆனால், இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் பல பிரச்னைகள் தமிழில் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. தமிழில் புது எழுத்தாளர்கள் வந்த வண்ணாம் இருக்கிறார்கள். தொழில் நுட்பம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புதிய புத்தகங்கள் விற்பனையாகின்றன. மற்றபடி, எழுத்தாளர்கள் விருதுகளுக்குத் தூண்டில் போடுகிறார்கள் என்பது உலகின் எல்லாக் கோடியிலும் நிகழும் ஒன்று. பாடிப் பரிசு பெறுவது உலகப் பொது வழக்கு.

    பத்ரி, நீங்கள் பதிப்புத் துறையில் எழுத்தாளர்களுக்கு அண்மையில் இருப்பதால், இது பற்றிக் கருத்துச் சொல்லத் தயங்குகிறீர்களா? :-)

    ReplyDelete
  4. ஸ்ரீகாந்த்: என் கருத்தை நான் நிச்சயம் தயங்காமல் சொல்வேன். இப்பொழுதைக்கு நான் கண்ட ஒரு பதிவை, இந்தி எழுத்துலகைப் பற்றிய ஒருவரது கருத்தை ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வலைப்பதிவுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இது தமிழ்ப் பொதுமக்கள் பார்வைக்கு. நிச்சயம் நம் அனைவருக்கும் இதைப்பற்றி பல கருத்துக்கள் இருக்கும். அவற்றை அனைவரும் எழுதட்டும்!

    ReplyDelete
  5. //ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வலைப்பதிவுக்குக் கொண்டுவந்திருக்கிறேன//

    பத்ரி, உங்கள் பதிவுகளில் எப்பொழுதுமே ஒரு சிரமதானம் இருக்கும். இதிலும் அப்படியே. நன்றி.

    ReplyDelete
  6. சமகாலத்துக்குப் பாராட்டு தெரிவிக்கத் தயங்கும் பொதுவான இந்திய மனப்பான்மையில் எழுதப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. "காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் படைப்புக்கள்" என்ற oxymoron, எதிர்காலத்திலிருந்து இறங்கிவந்த டெர்மினேட்டர் மாதிரி சமகாலப் படைப்புக்களைச் சித்திரவதை செய்வது புதிதா என்ன? ;-)

    உபரித் தகவல் ஒன்று: பிபிசியில் வந்த இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.

    ReplyDelete
  7. //சமகாலத்துக்குப் பாராட்டு தெரிவிக்கத் தயங்கும் பொதுவான இந்திய மனப்பான்மையில் எழுதப்பட்டது போலத்தான் தோன்றுகிறது//

    நல்ல observation

    ReplyDelete
  8. //எழுதுவதை பகுதி நேர தொழிலாகக்கொண்டு எழுதினால் மேற்கூறியவை எப்படி சாத்தியமாகும்? //

    முழு நேர எழுத்தாளர்கள் சிரத்தையாகவும் பகுதி நேர எழுத்தாளர்கள் ஏதோ கவனக்குறைவாகவும் எழுதுவது போல் தெரிகிறது. அது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

    ஒரு படைப்பை உருவாக்கும்போதே, யாருக்காக செய்யவேண்டியிருக்கிறது, இதிலிருந்து என்ன கிடைக்கும், அப்படியென்ன மத்தவங்கள் செய்யாததை நாம செஞ்சிருக்கோம்.. இப்படியெல்லாம் கேள்வி கேட்டு விடை தேடினாலேயே படைப்பின் வெற்றியில் பாதி உறுதிசெய்யப்பட்டுவிடும்.

    மத்தபடி அன்னார் சதீஷ் பச்சவுரி சொன்னதில்...

    //இன்றைய எழுத்தாளர்கள் எந்தப் புதிய உண்மையையும் சொல்லிவிடவில்லை

    //எழுதுபவர்கள் தாம் ஓர் எழுத்தாளர் என்ற பட்டத்தை விரும்புகிறார்கள்

    //மீடியாவில் தோன்றிக்கொண்டே இருப்பதில் விருப்பம். ஆனால் வெகுஜன ஊடகங்களை வெறுப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்

    //உலகமயமாக்கலின் நன்மைகளை உறிஞ்சிக்கொண்டே, தான் ஒரு கலகவாதி என்பதாகக் காட்டிக்கொள்வதற்காக சந்தைக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்கள்.
    //இலக்கியம் என்பது ஒரேமாதிரியாக இருப்பதல்ல. மாறிக்கொண்டே இருப்பது

    //எழுத்தாளர்களுக்கு சாதாரணப் பொதுமக்களுடனான தொடர்பு சிறிதும் இல்லை என்பதுதான் பிரச்னை

    வரிக்கு வரி தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  9. கட்டுரை பகுத் அச்சா ஹை..!! (கட்டுரைக்கு ஹிந்தியிலே என்னன்னு ஹிந்தி நன்கு தெரிந்த 'பேரன்' ஒருவரை தேடும் நிலை எனக்கு.. ஹி.. ஹி..!)

    ReplyDelete
  10. this vimarsanam suits for tamil writes too, but we can exclude very few writers

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. "1. நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்
    2. சாயப்பட்டறைப் பணியாளர்கள்
    3. காட்டில் தேன் எடுப்போர்
    4. நாடோடி ஆடு மேய்ப்பர்கள்
    5. எக்ஸ்போர்ட் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்
    6. பிச்சைக் காரர்கள், தொழுநோயாளிகள்
    7. ரேஷன் கடை ஊழியர்கள்
    8. மில் தொழிலாளிகள்
    9. பட்டாசுத் தொழிற்சாலை
    10. கிராமப் பள்ளிக்கூடம்
    11. விவசாயக் கூலிப் பெண்கள்
    12. இருளர் சமூகத்தினர்"

    விபரத்துக்கு நன்றி!! எனக்கு இந்த கவிதை மற்றும் கற்பனை கதைகள் சிறிதளவும் பிடிக்காதவை... சுயசரிதைகள் மற்றும் சொந்த அனுபவங்களை வாசிக்கதான் பிடிக்கும்!!! ஆனால் தேடிக்கண்டு பிடிக்கிறது தான் சிரமக இருக்கின்றது!!!
    தமிழ் புத்தகங்கள் எல்லாத்தையும் வந்த ஆண்டு கிடைக்கும் இடம் புத்தகத்தின் சுருக்கம் இப்படி எல்லா விபடங்களையும் ஒரு databasல் பதிவுசெய்யு இருந்தால் நாமலே எல்லா புது வரவேயும் எமக்கு ஆர்வம் உள்ள வற்றை இலகுவாக தேடி வாசிக்கலாம், மற்றும் புதியவர்களையும் ஊக்கிவிக்கலாம்....!!!!

    ReplyDelete
  13. தமிழில் நேர்மையாகவும், மக்களின் நலன்களை முன்னிருத்தும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் கடந்த காலத்தில் பெருமளவு பத்திரிக்கைகளால் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. பத்திரிக்கை உலகம் தீர்மானிக்கும் எழுத்தாளர்களே எழுதவும், புத்தகங்களை வெளியிடவும் முடிந்தது. இன்று நிறைய பதிப்பகங்கள் தோன்றி நிறைய மாறுபட்ட எழுத்தாளர்களையும் அவர்களது பார்வைகளையும் மக்களுக்குக் கிடைக்கச்செய்கின்றன. கீழைக்காற்று, முன்றில், அன்னம் போன்ற பதிப்பகங்களும், கிரியா, தமிழினி, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்களும் மாறுபட்ட, வெவ்வேறு சமூக, அரசியல் பின்னணி கொண்ட இலக்கியங்களைக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டுள்ளனர். இப்படியாக இலக்கியம்/எழுத்து என்பது வெகுஜனப்பத்திரிக்கைகள், சிறுபத்திரிக்கைகள் இவற்றில் இருந்து நகர்ந்து இன்று பதிப்பகங்களைச் சார்ந்து இருப்பதாக நினைக்கிறேன். இதனால் முன்னைவிட அதிக பன்முகத்தன்மையும், பல தளங்களில் எழுதப்படும் வாய்ப்பும் கொண்ட மொழியாக தமிழ் இப்போது இருக்கிறது. இலக்கியம் என்பது பத்திரிக்கை சார்ந்து குறுகிப்போன காலத்திலேயே சமையல்/ஜோதிட புத்தகங்கள் மாற்று துறைசார்ந்த புத்தகங்களாக தோன்ற ஆரம்பித்தன. இன்று சற்று நிலை மாறியுள்ளதாக நினைக்கிறேன். இந்நிலை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். எழுத்தாளர்கள் தம்மை அனைத்தும் அறிந்தவர்களாக, இறங்கி வந்தவர்களாக (அவதரித்தவர்களாக)கருத்திக்கொண்ட காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். இந்த இறங்கி வராத, சமகாலத்தில், மக்களிடமிருந்து எழுத்தத்துவங்கியவர்கள், சாதரணர்களாகவும், ஒளிவட்டங்கள், பத்திரிக்கைகள் வழங்கிய பீடங்கள் அற்றவர்களாகவும் இருக்கும் நேரத்திலேயே தாங்கள் செய்ல்படும் தளத்தில் அதிகூர்மை மிக்கவர்களாகவும் இருப்பது முரணற்ற யதார்த்தம். எழுத்தாளர்கள் இனி நா.பா மாதிரி, பாலகுமாரன் மாதிரி அறிஞர்களாக தோற்றம் காட்டமுடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இந்த மாற்றம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்.

    ReplyDelete