Wednesday, December 24, 2003

கிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2003ஆம் வருடத்தைய "முகமாக" இந்தியாவின் கிரன் கார்னிக்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் யார்?

இந்தியாவில் கணினி மென்கலன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கென ஒரு கூட்டமைப்பு உள்ளது. இதற்கு National Association of Software and Service Companies என்று பெயர். சுருக்கமாக நாஸ்காம் (NASSCOM) என்று அழைப்பர். இந்த நாஸ்காமின் தற்போதைய தலைவர்தான் கிரன் கார்னிக். இதற்கு முந்தைய தலைவராக இருந்து நாஸ்காமையும், இந்திய மென்கலன் நிறுவனங்களையும் உலகறியச் செய்ததில் பெரும் பங்கு வகித்தது தேவாங் மேஹ்தா என்பவர். இவர் மென்கலன் நிறுவனங்களுக்காக அரசிடம் எப்பொழுது பார்த்தாலும் தூது சென்று, மத்திய அரசின் அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருந்து, இந்திய மென்கலன் நிறுவனங்களுக்கெனப் பல சலுகைகளை வாங்கித் தந்தவர். ஆஸ்திரேலியாவில் ஒரு விடுதி அறையில் யாருமே கவனிக்காத நிலையில் 12 ஏப்ரல் 2001 அன்று இறந்து போயிருந்தார். தேவாங் மேஹ்தாவின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கூட்டமைப்பை யாராலும் மேஹ்தாவைப் போலத் திறம்பட நடத்த முடியாது என்ற நிலையில் அந்தப் பதவிக்கு வந்தவர் கிரன் கார்னிக்.

கிரன் கார்னிக் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) 20 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஐ.நா.சபையின் யூனிஸ்பேஸ்-82 என்னும் வெண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை இணைக்கும் ஒரு திட்டத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். இந்தியாவில் டிஸ்கவரி மற்றும் அனிமல் பிளாநெட் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மாணித்தவர் இவரே. அங்கிருந்து நாஸ்காமின் தலைவர் பதவிக்கு வந்தவர்.

ஏன் ஃபோர்ப்ஸ் இவரை இந்த ஆண்டின் முகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது?

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய இடங்களில் இப்பொழுது பெரிதும் பேசப்படுவது புறவூற்று (outsourcing), அக்கரைப்படுத்தல் (offshoring) ஆகியவையே. இவையெல்லாம் என்ன என்று கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாரா மக்களுக்குக் குழப்பம் ஏற்படலாம். வளர்ந்த நாடுகளில் பெருவாரியான தொழில் செயல்களும் முறைகளும் (business processes), கணினி வழியாகத்தான் நடக்கிறது. அந்த நாடுகளில் அரசுகளாக இருந்தாலும் சரி, பெரிய, நடுத்தர அளவிலான நிறுவனங்களானும் சரி, கணினி வழியாகத்தான் அலுவலர்களின் ஊதியக் கணக்கு போடப்படுகிறது. நிறுவனத்தின் வரவு-செலவுக் கணக்குகள் பதித்து வைக்கப்படுகின்றன. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (social security), நலத் திட்டங்கள் ஆகியவை கணினி மூலம் கண்காணிக்கப் படுகின்றன. நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை பற்றிய தகவல், நுகர்வோர் பற்றிய தகவல் ஆகியன கணினிக்குள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்படுகின்றன. நுகர்வோருக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அவர் தனக்குச் சேவையளிக்கும் நிறுவனத்தைத் தொலைபேசியில் கூப்பிட்டு அதுபற்றி கேள்விகள் கேட்கும்போது நிறுவன ஊழியர் உடனடியாக கணினியைத் தட்டிப்பார்த்து தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் நுகர்வர் எந்த பொருளை அல்லது எந்த சேவையினை வாங்கியிருந்தார் என்பதைக் கண்டறிந்து, நுகர்வரின் குறையைக் கேட்டு அதனையும் கணினியில் உள்ளிட்டு, பின்னர் கணினியின் உதவி கொண்டு நுகர்வருக்குச் சரியான விடையைத் தொலைபேசி மூலமாக அளிக்க முடியும். இவையெல்லாம் ஒருசில எடுத்துக் காட்டுகளே.

இதில் இந்தியா எப்படி மூக்கை நுழைத்தது என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment