Thursday, December 18, 2003

சோவின் போடா ஆதரவு

சோ ராமசாமி, துக்ளக்கின் ஆசிரியர், போடா சட்டத்தின் தீவிர ஆதரவாளர். அது மட்டுமல்லாமல், வைகோ, நெடுமாறன் ஆகியோரை போடா சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறையில் அடைத்ததை ஆதரிப்பவர். போடா சட்டத் திருத்தம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதனை தனக்கே உரிய கேலியான முறையில் எதிர்த்து "The Prevention of Terrorism Act is gone and has been substituted by the Protection of Terrorism Act. POTA is dead. Long live POTA." என்கிறார் தன்னுடைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையில்.

சுப்ரமணியம் சுவாமியும் இதே கருத்தை முன்மொழியக் கூடும். அதாவது உச்ச நீதிமன்றம் - வெறும் சொல்லளவில் கொடுக்கும் ஆதரவு போடாவின் கீழ் வர முடியாது, செயலும் இருந்தால்தான் - என்றதனால் இனி இந்தியா முழுவதும் மக்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிற இந்திய நாட்டின் எதிரிகளுக்கும், ஈழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் பிற இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் "கேடு விளைவிப்பவருக்கும்" ஆதரவாகக் குரல் எழுப்பலாம், கருத்தரங்கங்கள் நடத்தலாம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டத் தொடங்கி விட்டார்.

அப்படித்தான் நடக்கட்டுமே? என்ன கெட்டுப் போய் விட்டது? ஒரு எழுவரல் குடியாட்சி (liberal democracy) முறையில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் எப்பொழுதும் இருக்க வேண்டும். சொல்லளவில் எத்தகைய தீவிரவாதக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கலாம். கனடாவில் பிரிவினைவாதம் பேசும் பலர் உள்ளனர். அமெரிக்காவில் பல சிறு குழுக்கள் அரசினை வெறுக்கின்றன. ஆயுதப் புரட்சி செய்ய வேண்டுமென்றெல்லாம் பேசுகின்றன. அவர்கள் அனைவரையும் அள்ளிக் கொண்டுபோய் உள்ளே போட வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.

பத்திரிக்கைக் கருத்து சுதந்திரம் பற்றிக் கொட்டி முழங்கும் சோ, தனி நபர் கருத்து சுதந்திரத்தில் கட்டுப்பெட்டித்தனத்துடன், பிற்போக்காளராகவும் இருப்பதேன்?

போடா பற்றிய என் பதிவுகள்: ஓன்று | இரண்டு

No comments:

Post a Comment