Sunday, December 14, 2003

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4

துக்ளக் 10/12/2003 & 17/12/2003 இதழ்களிலிருந்து:

* சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு உரிமைகளே இல்லையா? இருக்கின்றன - அதாவது சட்டமன்றங்களின் கடமைகளை யாரும் தடுக்காவண்ணம் நடத்த சட்டமன்றத்தின் அவைத்தலைவருக்கு உரிமை உள்ளது. அப்படி கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருப்பது உரிமை மீறல்.

* சட்டமன்றங்களில் நடைபெறுவது அனைத்தும் சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகுமா? கிடையாது, உதாரணமாக ஒருவரை ஒருவர் திட்டி அடித்துக் கொள்வது, "வேட்டியை, புடைவையை அவிழ்ப்பது" போன்றவை நிச்சயமாக சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகாது.

* சட்டமன்றங்களில் நடைபெறும் குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றங்கள் (அடிதடி ஆகியவை) சட்டமன்றங்களின் நடவடிக்கைகளின் கீழ் இருக்க முடியாது. அக்குற்றம் செய்தவரை நீதிமன்றங்களில்தான் தண்டிக்க முடியும். சட்டமன்றத்தில் கண்டிக்க மட்டும்தான் முடியும். (பரிதி இளம்வழுதி வழக்கும் இப்படிப்பட்டதே. இவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு வெளியில் நடந்து தண்டனையும் அளிக்கப்பட்டது, பின்னர் சட்டமன்றமும் இவருக்கு மேற்கொண்டு தண்டனை கொடுத்தது. அது தவறென்று மற்றொரு விவாதம்...)

* உரிமை மீறல் வேறு, அவமதிப்பு வேறு. சட்டமன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றத் தடையாயிருப்பது மட்டும்தான் உரிமை மீறல். அவ்வாறு இல்லாமல் நடவடிக்கைகளுக்கு எந்த பங்கமும் வராமலும் சட்டமன்றத்தின் அதிகாரம் மீறப்படலாம். அது வெறும் அவமதிப்பு மட்டுமே. அப்படி அவமதிப்பு நிரூபணமானாலும் அதற்கு சட்டமன்றங்களால் தண்டனை வழங்க முடியுமா என்பதும் எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

* அது உரிமை மீறல் என்பதற்கு சில உதாரணங்கள்: (அ) சட்டமன்ற உறுப்பினரை மிரட்டி அவர் இப்படித்தான் பேச வேண்டும் என்பது, (ஆ) சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைத்திருப்பது, அவர் சட்டமன்றத்தின் இயங்காமல் செய்வதற்கான நிலைமையைக் கொண்டுவருவது, (இ) சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்து அவரது நிலைப்பாட்டினை மாற்ற முயலுவது, (ஈ) சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது பேச்சைத் தடுக்க முயலுவது... இப்படியானவை.

* ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை சட்டமன்றத்தின் உரிமைகளுக்கு உட்பட்டது அல்ல. இரண்டுக்கும் பங்கம் வருமாறு நேரும்போது எதற்கு முன்னுரிமை என்று முடிவு செய்வது நீதிமன்றங்களே.

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2
சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1

[பி.கு: இந்த வாரம் சிதம்பரம் கட்டுரை பற்றியும், குருமூர்த்தி கட்டுரை பற்றியும் எதுவும் எழுதப்போவதில்லை. இந்த வாரக் கல்கி வீட்டுக்கு வரவேயில்லை! பத்திரிக்கை போடுபவர் மறந்து விட்டார். குருமூர்த்தி அமெரிக்காவில் குடும்பங்கள் பல 'அப்பா இல்லாத குடும்பங்களாக' இருக்கின்றன என்பது பற்றிக் கவலைப்படுகிறார். அதில் எனக்கு ஒன்றும் அதிகம் கருத்து இப்பொழுதைக்குக் கிடையாது.]

No comments:

Post a Comment